ஒரு சமயம் அந்தணன் ஒருவன் வாழ்ந்து வந்த கிராமத்தில் பஞ்சம் ஏற்பட்டது.
அதனால், அவன் குடும்பத்துடன் கிராமத்தை விட்டு செழிப்பான வேறொரு ஊருக்குச் சென்று குடியேற விரும்பினான்.
செல்லும் வழியில் அவன் பசுமையான ஒரு கிராமத்தைப் பார்த்தான்.
அந்த ஊருக்குள் செல்ல விரும்பினான்.
அப்போது அவன் கண்ணில் ஓர் அதிசயமான காட்சி தென்பட்டது.
ஊர் எல்லையில் இறந்தவர்களைப் புதைத்து, அவற்றின் மீது பல நடுகற்களை வைத்திருந்தார்கள். ஆனால், நடு கற்கள் ஒவ்வொன்றிலும் இருந்த வாசகங்கள் அந்தணனைத் திகைக்க வைத்தன.
"இவர் இரண்டாண்டுகள் வாழ்ந்தார்', "இவர் ஒன்றரை ஆண்டு காலம் வாழ்ந்தார்", "இவர் தமது மூன்றாம் ஆண்டில் மறைந்தார்” என்பது போன்ற வாசகங் கள் நடுகற்களில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அந்தணன் கலக்கமடைந்தான்.
'அடக் கடவுளே! இந்தக் கிராமத்தில் அற்பாயுசு படைத்தவர்கள் தான் அதிகம் போலும்! எனவே இந்தக் கிராமத்தில் நான் குடியேறக் கூடாது!' என்று முடிவு செய்து, அவன் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினான்.
தங்கள் ஊருக்குள் வந்தவர்களை உபசரிக்க வேண்டும் என்று, அந்த ஊர் மக்கள் பலரும் விரைந்து வந்தார்கள்.
அவர்கள் அந்தணனையும் அவனது குடும்பத்தாரையும் வரவேற்று, விருந்துண்ண அழைத்தார்கள்.
அந்த ஊர் மக்களின் இனிய சொல், விருந்தோம்பல், நற்பண்புகள் ஆகியவற்றைக் கண்டு அந்தணன் மகிழ்ந்தான். ஆயினும் நடுகற்களில் கண்ட வாசகங்கள் அவன் மனதை உறுத்திக் கொண்டிருந்தன.
அன்று மாலை ஊரிலுள்ள கோயிலில் ஒரு சமயச் சொற்பொழிவு நடைபெற்றது.
அதற்கு ஊர் மக்கள் அனைவரும் திரண்டு சென்றார்கள். அவர்களின் கைகளில் ஒரு சிறிய குறிப்பேடு இருந்தது.
அந்தணனும் சமயச் சொற்பொழிவைக் கேட்கச் சென்றான். அங்கே அவன் கண்ட காட்சி, அவனை வியப்பிலாழ்த்தியது.
எல்லோரும் மிகக் கவனமாக சமயச் சொற்பொழிவைக் கேட்டார்கள்; உடனுக்குடன் குறிப்புகள் எழுதிக் கொண்டார்கள்; சொற்பொழிவு முடியும் வரையில் மிகவும் அமைதியாக இருந்தார்கள்.
சொற்பொழிவு முடிந்து திரும்பி வரும் போது அந்தணன் பெரியவர் ஒருவரைச் சந்தித்தான். அவர் அவனிடம் நலம் விசாரித்தார்.
பெரியவர்: இந்த ஊர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
அந்தணன்: பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு சந்தேகம்...!
பெரியவர்: என்ன சந்தேகம்?
அந்தணன்: நான் ஊருக்கு வெளியே இருக்கும் நடுகற்களைப் பார்த்தேன். அவற்றைப் பார்த்த போது, 'இந்த ஊரில் ஐந்து வயதுக்கு மேல் வாழ்ந்தவர்களே இல்லையோ!' என்ற எண்ணம் தோன்றியது.
பெரியவர் (சிரித்தபடியே): அந்தணரே! தாங்கள் கற்றறிந்தவர்தான். ஆனால் புத்திசாலி இல்லை. என்னைப் பாருங்கள். எனக்கு எவ்வளவு வயதிருக்கும்?
அந்தணர்: அறுபதுக்கு மேல் இருக்கும்.
பெரியவர்: ஆமாம். இப்போது என் வயது அறுபத்தைந்து. என் தந்தைக்கு எண்பத்தெட்டு வயது. அவர் உயிரோடு இருக்கிறார். இதே ஊரில் என் வயதுள்ளவர்கள் பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்...!
அந்தணர்: அப்படியானால் அந்த நடுகற்களில் இருந்த வாசகங்கள்....?
பெரியவர்: இந்த ஊரில் இருப்பவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. அதாவது, எப்போதெல்லாம் நாங்கள் நல்ல விஷயங்களைக் கேட்கிறோமோ, அதைக் கேட்கும் நேரத்தை நாங்கள் குறித்து வைத்துக்கொள்வோம். அவ்வாறு, சிறு வயது முதல் குறித்து வந்த நேரத்தை ஒன்றாகக் கூட்டி, அதையே நாங்கள் வாழ்ந்த காலமாக நினைக்கிறோம். 'வாழ்க்கையில் நல்ல விஷயங்களைக் கேட்கும் காலமே வாழும் காலம்' என்று நினைப்பதில் தவறு உண்டா?
பெரியவர் கூறியதைக் கேட்டு அந்தணனின் சந்தேகம் முற்றிலும் நீங்கியது. அன்று முதல் அவனும் குறிப்பேடு வைத்துக் கொண்டு, நல்ல விஷயங்களைக் கேட்கும் நேரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டுமென்றும், அந்த ஊரிலேயே குடும்பத்துடன் தங்குவதென்றும் முடிவு செய்தார்.