மெல்லிய இருள். லேசான நெடி. வழுக்கும் தரை. அழுக்குச் சுவர். அது அந்தப் பாலவாடி சமையலறை.
பால்பாத்திரம் மூடாமல் திறந்து கிடக்கிறது. சூடாக இருந்தவரை எதுவும் அதைச் சீண்டவில்லை. இப்போது பல்லிகளுக்குக் குளிர்விட்டுப் போனது அதைச் சுவைக்க.
ஒரு சின்னப் பல்லி பாத்திரத்தின் விளிம்பில் சென்ற போது நம் கரப்பான் பூச்சியம்மா பறந்து அதை விரட்ட, சின்னப் பல்லி தடுமாறி ஓட, 'ஹே' என ஒரே கூச்சல்.
''அம்மா, சூப்பர் மா'' என்று நான்கு கரப்பான் பூச்சிக் குஞ்சுகளும் தாயைப் பாராட்டின.
''கண்ணுகளா, நமக்கு வாழ்வு தருகிற இந்த இல்லத்திற்கு நாம விசுவாசமா இருக்கணும். இந்தப் பாலவாடி குழந்தைகள் அப்பா அம்மா இல்லாத அநாதைகள்'' என்பதற்குள் ''பாவம்மா அவங்க'' என்றது கடைக்குட்டி.
''இந்தக் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆயிடக் கூடாதுன்னுதான் பல்லியை விரட்டினேன். பல்லியோட எச்சில்பட்டாலோ அல்லது நம்ம மாதிரியான பூச்சி பாலில் விழுந்தாலோ பால் கெட்டுப் போயிடும். அதை இந்தக் குழந்தைகள் சாப்பிட்டா விபரீதம் நடக்கும்.''
''அதனாலதான் பல்லியை விரட்டினியாம்மா?'' முதல் குட்டி தாயைப் பெருமையுடன் கேட்டது.
தாயும் குட்டிகளும் பேசிக் கொண்டிருந்த போது, சட்டென முதல்குட்டி கத்தியது: ''அதோ பாரும்மா, சீக்கிரம் போய் இந்தப் பல்லியையும் விரட்டு.''
மற்றொரு பெரிய பல்லி பாத்திரத்தில் அமர்ந்து பாலை நக்க ஆரம்பித்தது. தாய்ப்பூச்சி பரபரப்பானது.
''போம்மா, பறந்து அதை விரட்டு'' என்றன குட்டிகள்.
''இல்லடா, இந்தப் பல்லி ரொம்பப் பெரிசு. என்னை அப்படியே 'லபக்'கென்று பிடிச்சு சாப்புட்டுடும்.''
''நீ பயப்படாதேம்மா, உன் பிள்ளைங்க நாங்க இருக்கோம். இந்தப் பல்லி நக்கிட்டா நஞ்சாயிடுமில்லே. நம்ம பாலவாடி பிள்ளைங்க செத்தாலும் செத்துடும். அதனால நாம அஞ்சி பேரும் பறந்து பல்லியை விரட்டிடலாம்'' என்றது இரண்டாவது குட்டி வீராவேசமாக.
தாய்ப்பூச்சி பரபரப்புடன், ''ஐயையோ நான் விட மாட்டேன். என் பிள்ளைங்களை நான் அந்தப் பல்லிக்கு காவு தர மாட்டேன்.... பசங்களா, ரெக்கையே முளைக்காத உங்களால இப்போதைக்குப் பறக்க முடியாது'' என்றது.
''ஒண்ணு செய்யலாமா? பால் விஷமாகுதுன்னு ஒரே கத்தலா கத்தி, பாலவாடி பெரியவங்களைக் கூப்பிடலாம்'' மூன்றாவது குட்டி முழங்கியது.
''நாம என்ன கத்து கத்தினாலும் மனுசங்களுக்குப் புரியாதுப்பா''
''பின்ன என்ன பண்றது?'' கோபமாகக் கேட்டது மூன்றாவது குட்டி.
''பால் நஞ்சாயிடுச்சி. பல்லியை நாம விரட்ட முடியாது. இந்த ஜனங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க நம்மால முடியாது. கடவுள்கிட்டே பாரத்தைப் போட்டு, பிரார்த்தனை செய்வோம்:
''கடவுளே, இந்தப் பாலை இந்தக் குழந்தைங்க சாப்பிடாம இருக்க ஏதாவது செய்யுங்க'' அம்மா கூறக் கூற, குட்டிகள் திருப்பிக் கூறின.
பிறகு அந்த ஐந்து ஜீவன்களும் ஆண்டவனை வேண்டின. சற்று நேரத்தில் கோடை மதிய வேளையில் எல்லாம் தூங்கியும்விட்டன.
நான்கு மணி. மணியடித்தது. குழந்தைகளுக்குப் பால் வழங்கும் நேரம். அலறியடித்து விழித்தது தாய் கரப்பான்பூச்சி. அதன் இறக்கைகளிலிருந்து ஒவ்வொரு பூச்சியாகச் சோம்பல் முறித்துக் கொண்டு மெல்ல வெளிவந்தன.
''டேய் பசங்களா, எங்கேடா நம்ம சின்னக்குட்டி? எங்கே போயிட்டான் பாரு?'' தாய்ப்பூச்சி பரபரத்தது. மற்ற பூச்சிகளும் தேடின.
சமையலறையில் சட்டென்று ஒரு குண்டு பல்பு எரிந்தது. இரண்டு பேர் உள்ளே தடதடவென்று நுழைந்தார்கள்.
''சேச்சே, நம்ம சமையல்காரனுக்கு எத்தனை முறை சொன்னாலும் எதையும் ஒழுங்கா வைக்கிறதில்லே... பாரு, பால் பாத்திரத்தை மூடவே இல்லே'' மேனேஜர் எரிந்து விழுந்தார்.
''சார் இந்தப் பாலைத் தந்தா பிள்ளைங்களுக்கு வயித்தாலப் போகும்'' என்றார் ஆயா.
''வயித்தாலே மட்டுமில்ல என்னோட வேலையும் போயிடும். இந்தப் பாலைக் கொட்டிடு. இதுங்களுக்கு வேற ஏதாச்சும் சீக்கிரமா பண்ணிப் போடு'' என்றார் மேனேஜர் எரிச்சலாக.
ஆயா பாலைக் கொட்டினாள். அதில் கடைக்குட்டி கரப்பான்பூச்சி விழுந்து இறந்து கிடந்தது, தியாகசீலனாக.