ஒரு சுவர். அது தன் பாட்டிற்கு நின்று கொண்டிருந்தது.
அதில் ஒருவன் கையை வைத்திருக்கிறான்,
உடனே அந்தச் சுவர் ‘பொத்' என்று இடிந்து கீழே விழுந்துவிட்டது!
“ஏன்டா, இந்தச் சுவரை இடித்தாய்?" என்று, அவனைக் கேட்டிருக்கிறார்கள்.
"ஐயோ.... என்மீது தவறு இல்லைங்க! சுவர் உறுதியாக இல்லை... அதைக் கட்டிய கொத்தனார்தான் சுவர் இடிந்து விழுந்ததற்குக் காரணம்!" என்று அவன் கூறிவிட்டான்.
உடனே கொத்தனாரைத் தேடிக்கொண்டு சென்றார்கள்... அவரைக் கேட்டார்கள்.
அதற்குக் கொத்தனார் கூறினார்:
"என்மேல் தப்பே இல்லீங்க... சிமிண்டையும் மணலையும் கலந்து கலவை போட்டுக் கொடுத்தவர்தான் சுவர் இடிந்து விழுந்ததற்குக் காரணம்! அவர்தான் கவனக்குறைவாகக் கலவையில் தண்ணீரை அதிகமாக ஊற்றிவிட்டார்” என்றார்.
உடனே கலவைப் போட்டவரைத் தேடிக்கொண்டு போனார்கள். அவரை விசாரித்தார்கள்.
அவர், "அந்த மண்பானையின் வாய் அகலமாக இருந்தது... அதனால் அதை லேசாகக் கொஞ்சம் சாய்த்ததும் தண்ணீர் அதிகமாகக் கொட்டிவிட்டது... அதனால் அந்தப் பானையைச் செய்தவர்தான் சுவர் இடிந்து விழுந்ததற்குக் காரணம்!” என்று கூறிவிட்டார்.
உடனே பானை செய்தவரைத் தேடிக் கொண்டு சென்றார்கள். அவரை விசாரித்தார்கள்.
பானை செய்தவர், “என் மீது தவறு இல்லை. நான் அந்தப் பானையைச் செய்து கொண்டிருந்த போது, அந்த வழியாக ஒரு நாட்டியக்காரி சென்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தபடியே இந்தப் பானையைச் செய்ததால், அது இப்படி ஆகிவிட்டது. அந்த நேரத்தில் அவள் அந்த வழியாகப் போகாமல் இருந்திருந்தால், பானையின் வாய் இப்படி அகலமாகப் போயிருக்காதுங்க!" என்று கூறிவிட்டார்.
உடனே அந்த நாட்டியக்காரி யார்? என்று தேடிக் கொண்டு புறப்பட்டார்கள்,
நாட்டியக்காரியை விசாரித்த போது அவள் கூறினாள்:
"சலவைத் தொழிலாளி ஒருவரிடம் என்னுடைய ஆடைகளையெல்லாம் வெளுப்பதற்காகப் போட்டிருந்தேன். சொன்ன நேரத்தில் அவர் என் துணிகளைக் கொண்டு வந்து கொடுக்கவில்லை. எனக்கு அவை அவசரமாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத் தேவைப்பட்டது. ஆகவே, நானே அவர் இருந்த இடத்திற்குத் தேடிப் போனேன். அதனால்தான் அந்த வழியாகப் போக வேண்டியதாயிற்று... அவர் உரிய நேரத்தில் என் துணிகளை வெளுத்துக் கொண்டு வந்து கொடுத்திருந்தால், அந்த வழியாக நான் போக வேண்டிய அவசியமே எனக்கு இருந்திருக்காது!" என்றாள்.
உடனே சலவைத் தொழிலாளியைத் தேடிக்கொண்டு சென்றார்கள்.
"ஐயா... நான் வழக்கமாக ஆற்றில் துணி துவைக்கிற கல்லின் மீது அப்போது சந்நியாசி ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் கண்களை மூடித் தியானம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தியானத்தைக் கலைப்பதற்கு எனக்கு மனம் வரவில்லை . ஆதலால் பேசாமல் இருந்து விட்டேன்!" என்று சலவைத் தொழிலாளி கூறினார்.
உடனே எல்லோரும் சந்நியாசியைத் தேடிக்கொண்டு போனார்கள்.
அவர் அப்போதும் தியானத்தில்தான் இருந்தார்... மௌன சந்நியாசி அவர்... எதுவும் பேசமாட்டார்.
அவர் எதிரில் இவர்கள் போய் நின்று, "என்ன சாமியாரே.... அந்தச் சுவர் இடிந்து விழுந்ததற்கு நீங்கள்தானே காரணம்?" என்று கேட்டு அதட்டினார்கள். அவர் மௌனமாக இருந்தார்.
"மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி... இவர்தான் குற்றவாளி!" என்று ஒருவன் கூறினான்.
"பலமாக இவன் தலையில் ஒரு போடு போடுங்கள்!” என்று இன்னொருவன் கூறினான்.
உடனே அந்த சந்நியாசியின் தலையில் ஓங்கி ஓர் அடி அடித்தார்கள், அவ்வளவுதான்! அவர் 'பொத்' என்று மௌனமாகவே, அந்தச் சுவர் போலவே கீழே சாய்ந்துவிட்டார்!
பாருங்கள் சார்.... சில சமயம் மௌனமாக இருப்பது கூட ஆபத்தாக வந்து முடியும்போல் இருக்கிறது.