சித்தார்த்தர் துறவியாகி ராஜகிருக நகரத்தின் வாயிலைக் கடந்து ஊருக்குள் பிரவேசித்தார். நேற்று அரச போகத்தில் இருந்தவர், இன்று கையில் திருவோடு ஏந்தி தெருவில் பிச்சை ஏற்கிறாரே என்று மக்கள் அவரைப் பார்த்து வியந்து நின்றனர்.
நகரத்தில், பிம்பிசார அரசனின் சேவகர்கள் முகப்பொலிவும், அழகான தோற்றமும் உள்ள இப்புதிய துறவியைக் கண்டு வியப்புற்று அரசரிடம் இவரைப் பற்றிக் கூறினார்கள்.
அரசன் அரண்மனைமேல்தளத்தில் நின்று இவரைப் பார்த்தான்.
பிறகு தனக்குள் ஏதோ நினைத்து, ''இவர் எங்கு செல்கிறார், என்ன செய்கிறார்? என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்'' என்று கட்டளையிட்டான்.
வீடுதோறும் சென்று பிச்சை ஏற்ற அத்துறவி போதுமான உணவு கிடைத்ததும் நகரத்திற்கு அப்பால் உள்ள பண்டவ மலையடியில் அமர்ந்தார்.
அங்கு முதன் முதலாகப் பிச்சை உணவை உண்ணத் தொடங்குகிறார்! ஒரு கவளம் வாயில் வைக்கிறார். குமட்டுகிறது. இந்த உணவை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது; குடலைப் புரட்டுகிறது. இந்தத் துறவி, புத்த நிலையை அடையப் போகிறவர்.
தம் மனதிற்கு அறிவுறுத்தினார்:
“சித்தார்த்த! நீ செல்வம் கொழித்த சிறந்த அரச குடும்பத்திலே பிறந்து வேளைதோறும் அறுசுவை உணவுகளை உண்டு பழகினாய். சாலி நெல் அரிசியால் சமைத்த மணமும், சுவையும் உள்ள சோற்றை உண்டாய். அமிர்தச் சுவையுடைய பாலும், தேனும், பாகும், பருப்பும் உட்கொண்டாய். இப்படியிருந்த நீ கந்தையை உடுத்தியிருந்த ஒரு துறவியைக் கண்டு, 'நானும், இவரைப் போலத் துறவு பூண்டு, உணவை இரந்துண்டு வாழும் நாள் எப்போது வரும்; அந்த நிலையை எப்போது அடையப் பெறுவேன்' என்று நினைத்து ஏங்கினாய். இப்போது நீ இல்லற வாழ்வை விட்டு, நீ விரும்பிய துறவற வாழ்வை மேற்கொண்டிருக்கிறாய்! பிச்சைச் சோற்றைச் சாப்பிடாமல் ஏன் வெறுக்கிறாய்? நீ செய்வது முறையல்லவே. துறவிகள் உண்ண வேண்டியது பிச்சைச் சோறுதானே”
இவ்வாறு இவர் தமக்குள் கூறியவுடன், அவர் மனதில் இருந்த வெறுப்புணர்ச்சி மறைந்தது. பிச்சை உணவை உட்கொண்டார்.
இவை யாவற்றையும் கவனித்த சேவகர்கள் விரைந்து சென்று பிம்பிசாரனிடம் கூறினார்கள்.
அரசரும் உடனே புறப்பட்டுச் சித்தார்த்தரிடம் வந்தார். அவரைக் கண்டவுடன் இவர் ஓர் அரசகுமாரன் என்பதை அறிந்தார். அவரிடம் கேட்டார்.
"தாங்கள் யார்? ஏன் தங்களுக்குத் துறவு வாழ்வு? நீங்கள் ஏன் வீடுகள் தோறும் பிச்சை ஏற்க வேண்டும்? இந்தத் துன்ப வாழ்க்கையை விடுங்கள். என் நாட்டிலே ஒரு பகுதியைத் தங்களுக்கு அளிக்கிறேன். தாங்கள் சுகமாக இருந்து அரசாட்சி செய்யுங்கள்"
சித்தார்த்தர் கூறுகிறார்: "மன்னா! அரச மரபில், உயர் குலத்தில் பிறந்தவன் நான். துய்ப்பதற்காக நிறைந்த செல்வமும், வேண்டிய பல இன்பங்களும், ஆட்சி செய்யக் கபிலவஸ்து நகரமும் எனக்கு உள்ளன. என் தந்தை சுத்தோதன அரசர், நான் அரசபோகங்களைத் துய்க்க வேண்டுமென்றுதான் விரும்புகிறார். ஆனால், அரசே! இன்ப நலங்களை நுகர்ந்தபடி ஐம்புலன்களில் திருப்தி கொண்டு காலம் கழிக்க நான் விரும்பவில்லை. உயர்ந்த அறிவை, பூரண மெய்ஞானத்தை அடையவே இல்லற இன்ப வாழ்க்கையைத் துறந்தேன். ஆகவே தாங்கள் அளிப்பதாகக் கூறும் எதுவும் எனக்கு வேண்டாம்"
சித்தார்த்தருடைய துறவு உள்ளத்தைக் கண்ட பிம்பிசார அரசர், வியப்புற்றார்; அவரது மனஉறுதியைப் போற்றினார்.
"தாங்கள் புத்த நிலையை அடையப்போவது உறுதி. அந்நிலையை அடைந்த பிறகு தாங்கள் முதன் முதலாக அடியேனது நாட்டிற்கு எழுந்தருள வேண்டும்" என்று அரசர் கேட்டுக் கொண்டார்.
அரசர் பேசும்போது அவரை அறியாமலே அவருடைய தலை வணங்கிற்று; கைகள் கூப்பின. சித்தார்த்தர் அவ்வாறே செய்வதாகக் கூறினார்.
அரசர் விடை பெற்றுக் கீழ்க்கண்டவாறு சிந்தித்தபடி அரண்மனை திரும்பினார்.
'நிறைந்த இன்பங்களையும், உன்னத அரச நிலையையும் வேண்டுமென்றே மனதறிந்து உதறித் தள்ளிய தூய துறவி இவர். இப்படிப்பட்ட உண்மைத் துறவிகளைக் காண்பது அரிதிலும் அரிது. இவர் கட்டாயம் புத்த நிலையை அடைவார். இவர் எண்ணம் நிறைவேறட்டும். இவர் முயற்சி வெல்வதாக!'