வானம் போல் பரந்துள்ள பாலைவனம் அது. அங்கு அப்துல்காதிர் என்ற சிறுவன் ஆடுகளை மேயவிட்டு, வானத்தை நோக்கியவாறு ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுவான்.
ஒரு நாள் வானிலிருந்து ஓர் அசரீரி கேட்டது: ‘மகனே, ஆடுகளை மேய்ப்பதற்காகவா நீ பிறந்துள்ளாய்?’
உடனே காதிரின் அகத்திலும் தீர்க்கமாக ஒரு குரல் ஒலித்தது: ‘ஆம், இதற்காகவா நான் பிறந்தேன்?’
உடனே அவனுக்குப் பயம் வந்துவிட்டது. ஏழ்மையான தனது நிலைமையை எண்ணிப் பரிதவித்தான்.
தூரத்தில் அராஃபத் மலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஹஜ் யாத்திரிகர்களை அவன் கண்டான்.
அது போல் நீண்ட பயணம் மேற்கொண்டு உலகில் ஒரு யாத்திரிகனாக வாழ வேண்டும்; இறைஞானம் பெற வேண்டும் என்று அவன் யோசித்தான்.
இதற்கு யாரை அணுகுவது? அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஏழ்மையான எளிய அவனது தாய் மட்டுமே.
ஓடிச் சென்று தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டு, ‘‘அம்மா, நான் பாக்தாத் சென்று இஸ்லாத்தைப் பற்றி நன்கு கற்க வேண்டும். தயவு செய்து என்னை அனுமதியுங்கள்’’ என்றான்.
அப்துல் காதிர் கேட்டிருந்த அசரீரி, அன்னைக்கும் கேட்டிருந்தது போலும். அதனால் மகன் அவ்வாறு அனுமதி கேட்டதும் உடனே சம்மதித்தார்.
அவனை உச்சிமுகர்ந்த அன்னை, ‘‘என் செல்வமே, உனக்காக நான் உன் குடும்பச்சொத்தான நாற்பது தங்க நாணயங்களைத் தருகிறேன். அவற்றை உன் மேலங்கியின் ஓரத்தில் வைத்துத் தைத்து விடுகிறேன். உனக்கு வேண்டும்போது அதைப் பயன்படுத்து’’ என்றார் அழுதவாறு.
காதிரும் கண்ணீருடன், ‘‘அம்மா, நான் தூர தேசம் போகிறேன். நான் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறுங்கள்’’ என்று கேட்டான்.
‘‘மகனே, அல்லாவின் ஆணைப்படி, நீ செல்கிறாய். உன்னை மீண்டும் எப்போது காண்பேனோ எனக்குத் தெரியாது. அல்லாவின் அருள் பெற்ற உனக்கு எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது. ஒன்றை மட்டும் நினைவுபடுத்துகிறேன்.
‘‘உன் உயிருக்கு ஆபத்து வந்தாலும் எப்போதும் உண்மையே பேசு. உண்மை பேசினால் அல்லாவின் பாதுகாப்பு உனக்கு என்றும் இருக்கும். போய் வா மகனே’’ என வாழ்த்தி அனுப்பினார்.
பண்டிதர்களும் செல்வந்தர்களும் சென்ற கூட்டத்தோடு அப்துல் காதிரும் பாக்தாத் நகரை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கினான். பாலைவனத்தில் கடும் பயணம்.
திடீரென்று ஒரு கொள்ளைக்காரக் கூட்டம் அங்கு தோன்றிக் கத்திமுனையில் அனைவரையும் சூறையாடியது.
அனைவரும் பயத்தில் அலறியபோது, காதிர் மட்டும் நடந்து கொண்டிருந்த கொள்ளையைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு கொள்ளைக்காரன் சிறுவனிடம், ‘‘ஏய், உன்னிடம் என்ன இருக்கிறது?’’ என்று கேட்டான்.
துறுதுறுக்கும் கண்களுடன், ‘‘அண்ணா, என்னிடம் தங்கக் காசுகள், அதுவும் நாற்பது உள்ளன. இதோ...’’ என்று தன் மேலங்கியைக் காட்டினான்.
கொள்ளைக்காரன் சிரிக்க ஆரம்பித்தான். ‘‘ஹ, ஹா, உளறாதே. உன்னிடமாவது தங்கம் இருப்பதாவது. போ போ, போய் விளையாடு’’ என்றான்.
‘‘அண்ணா, என்னிடம் உண்மையிலேயே தங்கக்காசுகள் இருக்கின்றன’’ என்றான். மற்ற யாத்திரிகர்கள் காதிரைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.
சற்று தூரத்திலிருந்த கொள்ளைக்காரத் தலைவன் அப்துல் காதிரின் பேச்சைக் கேட்டு கொள்ளைக்காரனை அழைத்தான்.
வந்தவன் நடுங்கியபடி, ‘‘தலைவா, இவன் வேடிக்கை செய்கிறான்’’ என்று கூறினான்.
தலைவன் நடந்ததைக் கேட்டறிந்தான். காதிரின் ஆடையில் தங்கக்காசுகள் இருப்பதைக் கண்டான். ஏன் இந்தச் சிறுவன் இப்படி உண்மையைக் கூறி மாட்டிக் கொண்டான் என்று தலைவனே பரிதாபப்பட்டான்!
என்ன காரணத்தாலோ தலைவனுக்கு காதிரிடம் அன்பு பிறந்தது.
அவன் மெதுவாக காதிரிடம், ‘‘தம்பி, இப்படியெல்லாம் உண்மை பேசி இனியும் எங்கும் மாட்டிக் கொள்ளாதே. நீ உன்னிடம் தங்கக்காசுகள் இல்லையென்று கூறியிருந்தால் நாங்கள் அதை எடுத்திருக்க மாட்டோம். நீ ஏன் இப்படி முட்டாள்தனமாக உண்மையைச் சொன்னாய்?’’ என்று அவன் தோளைப் பிடித்துக் கேட்டான்.
காதிர் துடிப்புடன், ‘‘பெரிய அண்ணா, ‘உயிருக்கே ஆபத்து வந்தாலும் நீ உண்மையே பேசு. உண்மை பேசினால் அல்லா உன்னைப் பாதுகாப்பார்’ என்று என் அம்மா கூறினார்.
அல்லாவின் பாதுகாப்புதான் எப்போதும் தேவை. அதனால்தான் உண்மையைக் கூறினேன். ஏன், உங்களுக்கு அல்லாவின் பாதுகாப்பு வேண்டாமா?’’ என்று கேட்டான்.
அதுவரை அந்தத் தலைவன் வாழ்வில் சாத்தானின் சாமர்த்தியங்களை மட்டுமே கண்டவன். இன்று சத்தியத்தின் சாந்நித்தியம் அங்கே வெளிப்பட்டதால் அவன் திக்குமுக்காடிப் போனான்.
யாரும் எதிர்பார்க்காதபடி அந்தப் பாலைவனத்தில் ஓர் ஊற்று வெளிப்பட்டது. ஆம், காதிரைப் பிடித்துக் கொண்டு தலைவன் அழ ஆரம்பித்தான்.
சிறிது நேரம் அழுதபின் அவன், ‘‘தம்பி, உன் உத்தமமான அம்மாவை நினைத்து மெய்சிலிர்க்கிறேன். என் அம்மா உண்மை பேசு என்று சொல்லியிருந்தும் நான் கேட்கவில்லை. அதனால் நான் இப்படி இந்த ஈனத் தொழில் செய்து பிழைக்கிறேன். அதனால் நான் அல்லாவின் பாதுகாப்பின்றியே பிழைத்துக் கொண்டிருக்கிறேன். எப்போதும் நானே என்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. யாராவது என்னைக் கொன்றுவிடுவார்களோ என எப்போதும் பயந்து பயந்து வாழ்கிறேன்’’ என்றான்.
காதிருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தலைவனின் கண்ணீரைத் தன் மெல்லிய கைகளால் துடைத்துவிட்டான். அதனால் தலைவன் மேலும் உணர்ச்சிவசப்பட்டு, ‘‘தம்பி, இன்று நான் உனக்குச் சத்தியம் செய்து தருகிறேன். இனிமேல் நான் இந்தக் கொடுந்தொழிலைச் செய்ய மாட்டேன்’’ என்றான்.
உடனே தலைவன் கொள்ளையடித்த எல்லாவற்றையும் திருப்பித் தரும்படி கட்டளையிட்டான். பிற கொள்ளைக்காரர்கள் அதிர்ச்சியுடன், ‘‘தலைவா, எல்லாவற்றையும் திருப்பித் தந்துவிட்டால் நாம் பிச்சைக்காரர்களாகி விடுவோம்’’ என்றனர்.
தலைவன் கம்பீரமாக, ‘‘இல்லை, இன்றுதான் உண்மையிலேயே நாம் சிறந்த கொள்ளைக்காரர்களாகி இருக்கிறோம். அற்பப் பொருள்கள் அல்லாமல் ‘அல்லாவின் பாதுகாப்பு’ என்ற பெரும் செல்வத்தைப் பெற்றுள்ளோம். அதற்கு வழிகாட்டிய இவரே இனி நமக்கு என்றென்றும் வழிகாட்டி’’ என்று கூறி காதிரின் கையைப் பிடித்து முத்தமிட்டான்.
பிற்காலத்தில் அப்துல்காதிர் கைலானி இஸ்லாம் மதத்துப் புனித ஞானிகளுள் ஒருவரானார்.
அன்னையரின் சிறந்த வளர்ப்பே மகான்களையும், அறிஞர்களையும் உருவாக்கித் தந்திருக்கிறது; தரவும் செய்கிறது.