துவாபர யுகத்தில் யுதிஷ்டிரர் பரீட்சித்துக்கு முடிசூட்டனார். மன்னன் பரீட்சித் தர்மநெறியில் பாட்டனார் யுதிஷ்டிரரையும் மிஞ்சக் கூடியவனாக இருந்தான். அவன் கலியை வென்று கட்டுப்படுத்தினான். மக்களின் துன்பங்களை தன் துன்பமாக கருதும் பெரிய மனம் படைத்திருந்தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த மன்னனுக்கும் விதி பாம்பின் உருவத்தில் காத்திருந்தது.
ஒருநாள் பரீட்சித் மகாராஜன் காட்டில் வேட்டையாட சென்றான். ஒரு மானை துரத்தி ஓடியபோது வழி தப்பியது. தாகத்தோடு மிகுந்த களைப்புடன் நடந்த மன்னனின் பார்வையில் ஓர் ஆசிரமம் தென்பட்டது. அதன் எதிரில் தம்மை மறந்த நிலையில் ஓர் மகரிஷி தவத்தில் ஆழ்ந்திருந்தார். மன்னர் அவரை மரியாதையுடன் அழைத்து பார்த்தான். பதில் இல்லை. மீண்டும், ``தண்ணீர், தண்ணீர்!'' என்று கேட்டுப் பார்த்தான். அதற்கும் பதில் வரவில்லை.
இந்த நிலையில் தன் உடல் வருத்தத்தை பெரிதாக எண்ணிய மன்னனிடம் லேசான அகம்பாவம் தலை தூக்கியது. எனவே, தாகம் தீராத வருத்தம் பதில் பேசாத ரிஷியின் மீது கோபமாக மாறியது.
பரீட்சித் சுற்றும் முற்றும் பார்த்தான். இறந்த பாம்பு ஒன்று கண்ணில் பட்டது. தன் வில்லின் நுனியால் அந்தப் பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் மாலையாகப் போட்டான். அப்போதும் முனிவர் கண் திறக்கவில்லை. பரீட்சித் வந்த வழியே நடந்தான்.
அந்த மாமுனிவரின் பெயர் சமீகர். சமீக ரிஷியின் புதல்வன் சிருங்கி. இவன் இளைஞன்.
சிருங்கியின் நண்பர்கள் ஆசிரமத்திற்குச் சென்ற போது மாமுனிவர் சமீகரின் கோலம் கண்டு நையாண்டி செய்தனர். அவரது நிலையை சிருங்கியிடம் கூறி சிரித்தனர்.
எனவே சிருங்கி, ``என் தந்தையை இந்த நாட்டு மன்னன் அவமதித்துவிட்டான். அவனது அகங்காரத்தை ஒழித்து அவனுக்கும் தண்டனை அளிப்பேன். இன்னும் ஒருவாரத்தில் கொடிய நாகமாகிய தக்ஷகன் அவனைத் தீண்டி அவன் இறந்து போக வேண்டும்!'' என்று சாபமிட்டான்.
சிருங்கியும் அவன் நண்பர்களும் போட்ட இரைச்சலில் மாமுனியின் சமாதி கலைந்தது.
அவர் தமது தோல் மீதிருந்த செத்த பாம்பை சாதாரணமாக நினைத்து அப்பால் தள்ளினார். பிறகு தம் மகனிடம், ``என்ன இங்கே சத்தம்?'' என்று கேட்டார்.
நடந்தவற்றை விவரித்த சிருங்கி தான் மன்னனுக்கு இட்ட சாபத்தையும் சொன்னான்.
மாமுனி சமீகர் சிருங்கியின் அவசர புத்திக்கு மிகவும் வருந்தியதுடன் தம் மகனையும் கண்டித்தார்.
`என்ன முட்டாள் தனம் இது! தாயின் கர்ப்பத்தில் சிசுவாக இருந்தபோதே விஷ்ணு தரிசனம் பெற்றவன் பரீட்சித். அவனைப் போன்ற ஒரு நல்ல அரசனை உலகில் பார்ப்பதே மிகவும் அபூர்வம். கலியின் கோரப் பிடியிலிருந்து உலகை ரட்சிக்க வந்த புண்ணியமூர்த்தி அல்லவா அவன்? பசியோடும் தாகத்தோடும் வந்த மன்னனின் குரல், என் காதில் விழாமல் போனது என் குற்றமே. அதனால் அவன் வெறுப்புற்றுக் குழந்தைத்தனமாகச் செத்த பாம்பை எடுத்து என் கழுத்தில் போட்டது குற்றமே இல்லை. அதற்காக ஒரு நல்ல மனிதனை உலகம் இழக்கும்படி செய்து விட்டாயே! உலகில் நல்லவர்கள் பிறப்பதே மிகவும் அபூர்வம். நீ அவனுக்குச் சாபம் கொடுத்ததுதான் மன்னிக்க முடியாத பெரிய குற்றம். ஆகவே நீ என் கண்முன்னால் நிற்காதே. தன்னடக்கம் ஏற்படும் வரையில் தவம் செய். விழுந்துவிட்ட சாபத்தை என்னால் எடுத்துக்கொள்ள முடியாது. குறைந்தபட்சம் பரீட்சித்துக்கு இன்னும் ஒரு வாரத்தில் வர இருக்கும் மரணத்தை முன்னதாகத் தெரியப்படுத்தலாம். மறு உலகத்தில் அவன் சிறந்த நிலையைப் பெற வேண்டும் என்று நான் அவனை வாழ்த்துவதைத் தவிர என்னால் ஆவது ஒன்றுமில்லை'' என்றார் அந்த மகரிஷி.
சிருங்கியின் சாபம் பரீட்சித்து மன்னனுக்குத் தெரிய வந்தது.
தர்மாத்மாவாதலால் அவன் விதியின் முடிவைப் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டான். சமீக முனிவரிடம் தான் நடந்துகொண்ட முறைக்கு வருத்தம் தெரிவித்தான்.
பின்பு அவன் தன் மகன் ஜனமேஜயனுக்கு முடிசூட்டிவிட்டுத் தவக்கோலம் பூண்டு கங்கைக் கரைக்குச் சென்றான். நிலத்தின் மீது தர்ப்பைப் புல்லைப் பரப்பினான். பிராயோபவேசம் என்று சொல்லப்படும் சாகும்வரையில் இருக்கும் உண்ணவிரதம் மேற்கொண்டான்.
அப்போது அத்திரி, வசிஷ்டர், சியவனர், சாரத்வதர், பிருகு, ஆங்கிரஸர், பராசரர், விசுவாமித்திரர், பரசுராமர், நாரதர் ஆகியோர் அங்கே வந்தனர். அவர்களைப் பார்த்ததும் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
``என் பிராயோபவேச விரதத்தை ஆசீர்வதிக்க மகரிஷிகளான நீங்கள் எல்லாரும் வந்திருப்பது, என் பூர்வஜன்ம புண்ணியமேதான். எனக்குச் சாபம் தந்த அந்தணச் சிறுவன் உண்மையில் எனக்கு நல்லதையே செய்திருக்கிறான். நான் உலகைத் துறந்துவிட்டேன். மரணத்திற்கு நான் தயார். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள்; இன்னும் நான் உலகில் வாழ வேண்டிய ஏழு நாட்களும், என் செவி இறைவனின் பெருமைகளினால் நனையட்டும்'' என்றான்.
அதற்கு மகரிஷிகள், ''கிருஷ்ணனின் மறைவைத் தொடர்ந்து பாண்டவர்கள் உலகைத் துறந்தனர். அந்தப் பரம்பரையில் வந்த அரசன் அல்லவா நீ? உன் முடிவும் பாராட்டும் வகையிலேயே அமைந்திருக்கிறது'' என்றனர்.
''மகரிஷிகளே, மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் பாவச் செயல்களே இல்லாமல் இருந்து, இறைவனை எப்படி அடைவது என்று சொல்வீர்களா?'' என்று வினவினான் மன்னன்.
பரீட்சித்தின் கேள்விக்கு மகரிஷிகளால் சரியான பதில் தரமுடியவில்லை. ஒருவர் யாகம் என்றார். மற்றவர் யோகம் என்றார். இன்னொருவர் தானம் என்றார். பிறிதொருவர் தவம் என்றார். இப்படித்தான் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வழியைச் சொன்னார்கள். எனவே பரீட்சித்தினால் தான் உடனடியாகப் பின்பற்ற வேண்டிய வழி இன்னதுதான் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
தானம் என்பதைப் பொறுத்த வரையில் பரீட்சிததுக்கு அது நடந்துபோன விஷயம். மற்றப்படி யாகம், யோகம், தவம் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கு ஒரு வாரக் காலம் போதுமானதல்ல. இவ்விதம் மகரிஷிகளும் பரீட்சித்தும் உரையாடிக் கொண்டிருந்த சமயத்தில், மகரிஷிகளுக்கெல்லாம் மகரிஷியாக விளங்கிய சுகப்பிரம்மம் அங்கே விஜயம் செய்தார்.
அவரை மகிழ்ச்சி ததும்ப வரவேற்ற மன்னன், மகரிஷிகளிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடமும் கேட்டான்.
சுகதேவர் பரீட்சித்தை ஆசீர்வதித்து அமர்ந்தார். அவரைச் சூழ்ந்து மற்ற மகரிஷிகளும் அமர்ந்தனர்.
சுகதேவர் மன்னனை நோக்கிச் சொன்னார்: ''நான் இங்கு வந்த நோக்கமே உனக்குப் பிறவாநிலைக்கு வழிகாட்ட வேண்டும் என்பதுதான். பூஜைக்கு உரிய என் தந்தை வியாச பகவான் பாகவத புராணம் இயற்றியிருக்கிறார். உயர்வற்ற உயர் நலமுடைய இறைவனான ஸ்ரீமந்நாராயணனின் மகத்துவம் அதில் அடங்கியுள்ளது. நாராயணனின் திவ்யக் கதைகளை இந்த ஏழு நாளும் நான் உனக்குச் சொல்கிறேன். அதுவே முக்திக்குச் சிறந்த வழி. இந்த ஏழு நாட்களை எந்தப் பாவச் செயல்களுக்கும் வழி இல்லாமல் நீ கடக்கலாம்.''
சுகதேவர் மேலும் சொன்னார்: ``மரணம் மனிதனை நெருங்கும்போது மனிதன் மரணபயத்தை ஒழிக்க வேண்டும். துறவு என்ற வாளை ஏந்தி, மனைவி மக்கள் மற்றும் வசதிக்கு உரிய பொருள் பற்று முதலிய பந்தங்களை அறுத்துக்கொள்ள வேண்டும். வீட்டைத் துறந்து, காடு சென்று, புனித நதியில் நீராடித் தியானம் செய்ய வேண்டும். அப்போது ஜீவன் உடலை உகுத்ததும் நாராயணனைச் சென்றைடயும். நாராயணனின் பெருமையைக் கேளாத செவிகள் பயனற்ற ஓட்டைச் செவிகள். நாராயணனைச் சேவிக்காத தலைகள் வெறும் சுமையே. நாராயணனைத் துதிபாடாத நாவு தவளையின் நாவே. கைகளுக்கு ஆபரணங்களும் சந்தனப் பூச்சும் இருந்தும், மலர்களால் நாராயணனை அர்ச்சனை செய்யாத கைகளைப் பிணத்தின் கைகள் என்றே சொல்ல வேண்டும். நாராயணன் நடந்த புனித ஸ்தலங்களுக்குச் செல்லாத கால்கள் மரத்தின் வேர்களே. ஆதலால் அனந்த கல்யாண குணங்களுக்கு உறைவிடமாகத் திகழும் திவ்ய வடிவத்தை மனதில் நிலைநிறுத்திக் கொள்வாயாக! இனி நீ வாழப்போகும் இந்த ஏழு நாளும் எந்தப் பாவமும் உன்னை அணுகாமலிருக்க வேண்டுமானால், நாராயணனைப் பற்றிய சிந்தனையிலேயே நீ வாழ வேண்டும். இந்த ஏழு நாளும் நான் பரமபவித்திரமான பாகவத புராணத்தை உனக்குச் சொல்கிறேன்''
சுகப்பிரம்மம் சொன்னதைப் பரீட்சித்து மகாராஜன் வரப்பிரசாதமாகவே கருதினான்.
சுகதேவர் தமது கிருபையால் பரீட்சித்தின் உள்ளத்தில் பகவான் நாராயணனை நிலைநிறுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றியும் பரீட்சித்துக்கு விளக்கமாகச் சொன்னார்.
ஏழாம் நாள் வந்ததும் சுகப் பிரம்மம் இவ்விதம் சொன்னார்: ``பகவானின் அவதார லீலைகளை ஏழுநாளும் உனக்கு சொன்னேன். இந்த பாகவதக் கதைகளைக் கேட்பவர்களை துன்பம் அணுகாது. மரணபயம் அணுகாது. ஆதலால் உனக்கு இன்று வரப்போகும் மரணத்தைப் பற்றிப் பயப்படாதே. உடல் என்பது ஆரம்பத்தில் இல்லை; நடுவில் வந்ததுதான்; கடைசியிலும் அது இருக்கப் போவதில்லை. ஆனால் ஆத்மா நித்தியமானது; அதற்கு அழிவில்லை. அமரத்துவம் வாய்ந்த ஆத்மாவை நீ தியானிப்பாய். பரமனுடன் கலந்து முக்திப் பெறுவாய்''
சுகப்பிரம்மத்தின் அருள் மொழிகளால் பரீட்சித் மன்னன் அஞ்ஞானத்தில் இருந்து விடுபட்டான். அவருக்கு அவன் தனது மனப்பூர்வமான நன்றியறிதலை தெரிவித்து வழியனுப்பி வைத்தான். ஒரு வீரனைப் போல அவன் மரணத்தை எதிர்நோக்கி தயாராக இருந்தான். காடு சென்று சுகப்பிரமத்திடம் பாகவதம் கேட்டுக் கொண்டிருந்த சமயத்திலும் அவன் அறியாத வகையில் ஜனமே ஜயன் பரீட்சித்தை பாம்பு எதுவும் நெருங்க முடியாதபடி பலத்த காவலுக்கு ஏற்பாடு செய்து இருந்தான்.
சுகதேவர் சென்ற பிறகு மற்ற மகரிஷிகளும் விடைபெற்றுச் சென்றனர். பரீட்சித் தனிமையில் விடப்பட்டான். தர்ப்பைகளை நிலத்தில் பரப்பி அமா்ந்து, அனந்த நாராயணனின் திருவுருவத்தை மட்டும் உள்ளத்தில் நிலை நிறுத்தினான்.
வெளியுலக நினைவின்றிப் பரீட்சித் தியானத்தில் ஆழ்ந்திருந்தான். அப்போது தக்ஷகன் பிராம்மண வடிவில் வந்து மன்னனின் அருகில் நின்றான்.
காவலர்கள் பிராம்மணன் என்று நினைத்துத் தக்ஷகனை விட்டுவிட்டனர். பரீட்சித்தை நெருங்கிய தக்ஷகன் தன் பிராம்மண வடிவிலிருந்து விலகி, நாகவடிவம் எடுத்து, தியானநிலையில் தன்னை மறந்திருந்த பரீட்சித்தைத் தீண்டினான்.
தக்ஷகன் வாயிலிருந்து வந்த விஷத்தீயால் பரீட்சித்தின் உடல் வெந்து சாம்பலாயிற்று. அவனது ஆன்மா எப்போதோ நாராயணனிடம் சென்று பிறவாத்தன்மையைப் பெற்றுவிட்டது