ஒரு நாள் ஓர் அரசன், தன் வீரர்களுடன் வேட்டையாடச் சென்றான்.
காட்டில் அவன், ஒரு பறவை 'படபட'வென்று சிறகடித்துக் கொண்டு கூவியதைக் கண்டான்.
அரசன் பறவைகளின் மொழியை அறிந்திருந்த தன் வீரன் ஒருனை அழைத்து, "அந்தப் பறவை இப்போது என்ன கூறியது?” என்று கேட்டான்.
அதற்கு வீரன், "அது நம்மைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்த வழியே ஓர் உழவன் செல்வான். அவன் இன்று பாம்பு கடித்து இறந்துவிடுவான் என்றது” என்று பதிலளித்தான்.
'அது உண்மைதானா?' என்று அறிய விரும்பிய அரசனும் அவனது வீரர்களும், வேட்டைக்குச் செல்லாமல் அங்கேயே இருந்தார்கள்.
சுமார் ஒரு ஒரு மணி நேரம் கழிந்தது. அப்போது அந்த வழியாக உழவன் ஒருவன் கையில் ஓர் அரிவாளோடு சென்றான்.
சில நேரம் கழிந்தது. அந்த உழவன் தலையில் புல்கட்டைச் சுமந்தபடியே வந்துகொண்டிருந்தான். அதில் அவனது அரிவாளும் சொருகப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த அரசன் தன் வீரனிடம், "நீ 'இந்த உழவன் பாம்பு கடித்து செத்துவிடுவான்' என்றாய். அப்படி எதுவும் நடக்கவில்லையே. எனக்கு ஒரு நாள் வீணாயிற்று!
"பறவை பொய் கூறியதா? அல்லது நீ என்னை ஏமாற்றி விட்டாயா? அல்லது இந்த உழவன் மரணத்திலிருந்து தப்பித்தானா? அது எப்படி? இதற்கெல்லாம் நீ சரியான விளக்கம் சொல்ல வேண்டும். இல்லையேல் உன் தலை உன் உடம்பில் இருக்காது!” என்று கோபத்துடன் கூறினான்.
வீரன் பணிவுடன், "அரசே! பறவை கூறியது இது வரையில் பொய்த்ததில்லை! 'உழவன் உயிரோடு இருப்பதற்குக் காரணம் என்ன?' என்று எனக்கும் தெரியவில்லை. உழவன் சென்ற இடத்தில் என்ன நடந்தது என்று அவனையே கேளுங்கள்!” என்று கூறினான்.
இதற்குள் உழவன், அரசன் இருக்கும் இடத்தை நெருங்கினான். அவனிடம் வீரன், "உங்களது புல்கட்டைக் கீழே போடுங்கள்!” என்றான்.
உழவனும் அப்படியே செய்தான். புல்கட்டு கீழே விழுந்த வேகத்தில் அதில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து, புற்கள் சிதறின. அப்போது புல்கட்டு நடுவில் ஒரு பாம்பு, அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து போயிருப்பது தெரிந்தது.
வீரன் அரசனிடம், "அரசே! உழவன் இந்தப் பாம்பு கடித்து இறந்து போயிருக்க வேண்டும்! அவ்விதம் நடக்காததற்கு, இவன் சென்ற இடத்தில் முக்கியமான நிகழ்ச்சி ஏதாவது நடந்ததா என்று அவனிடமே விசாரியுங்கள்” என்று கேட்டுக் கொண்டான்.
அரசன் உழவனிடம், "நீ சென்ற இடத்தில் ஏதாவது வித்தியாசமான நிகழ்ச்சி நடந்ததா?” என்று கேட்டான்.
அதற்கு உழவன், "அரசே, அப்படி புதுமையான நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை. மகான் ஒருவர் வந்ததைக் கண்டு அவரை நான் வணங்கினேன். அதற்கு அவர், 'நீ நீடூழி வாழ்க!' என்று என்னை ஆசீர்வதித்தார். இதுதான் நடந்தது” என்றான்.
அப்போது வீரன் அரசனிடம், "அரசே! இவன் பாம்புக் கடியால் மடிந்திருக்க வேண்டும்! ஆனால் அந்த மகானின் ஆசீர்வாதம், இவனுடைய விதியே மாறியிருக்கிறது. மகான்களின் ஆசீர்வாதத்திற்கு விதியை மாற்றும் வலிமை உண்டு” என்றான்.
அரசனும் மகிழ்ச்சியடைந்து அந்த வீரனுக்கும் உழவனுக்கும் பரிசுப் பொருட்கள் கொடுத்தான்.