அரசவையில் ஒரு நாடகம் நடித்துக் காண்பிக்கப்பட்டது. நாடகத்தில் துறவியாக நடித்தவர் மிகச் சிறப்பாகத் தன் பங்கைச் செய்திருந்தார்.
நாடகம் முடிந்ததும் துறவியாக நடித்த நடிகருக்குப் பரிசு தருவதாக அறிவித்தார் அரசர்.
ஆனால், அரங்கிற்குப் பின்னால் சென்ற நடிகர், தன் வேடத்தைக் களைந்துவிட்டு இயல்பான உடையுடன் வெகு நேரம் கழித்து வந்தார்.
அங்கிருந்த அனைவருக்கும் கடும் கோபம். அர்சர் பரிசளிக்கிறார் என்று தெரிந்திருந்தும் அவரை காக்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டாரே என்று கோபமடைந்தனர். அரசரும், அவர் உண்டாக்கிய தாமதத்தால் பொறுமை இழந்துதான் போனார்.
அதன் பின்னர் அந்த நடிகர் அங்கு வந்தார்.
அரசரும் அரசவையில் இருப்பவர்களும் கடுங்கோபத்தில் இருப்பதையும் தெரிந்து கொண்டார்.
அவர் சொன்னார்;
“அரசரும், அவையிலிருப்பவர்களும் என்னை மன்னித்தருள வேண்டும். இங்கு அரசர் எனக்குப் பரிசளித்திருப்பது என்னுடைய துறவி வேடத்தில் நான் காட்டிய ஈடுபாட்டிற்குத்தான். எல்லாம் துறந்த துறவி வேடத்தில் நடித்த நான், அதே வேடத்தில் வந்து பரிசை வாங்கிக் கொள்வது எனக்கு சரியாகப்படவில்லை. அதனால் அந்தத் துறவி வேடத்தைக் களைந்து விட்டு என் இயல்பான உடைக்கு மாற்றமாகி வருவதற்கு சற்று தாமதமாகி விட்டது... தங்களனைவரையும் காக்க வைத்ததற்காக என்னை இங்கிருக்கும் அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன்” என்றார்.
இதைக் கேட்ட அரசர் அவருக்கான பரிசுத்தொகையை இரட்டிப்பாக்கி வழங்கினான்.