ஒரு நாள் கயிலையில் சிவபெருமான் தனிமையில் இருந்தார். அப்பொழுது இறைவி இறைவனிடம், ''பெருமானே, நீங்கள் எனக்கு உபதேசித்த ஞான ரகசியங்களை நான் முற்றும் மறந்துவிட்டேன். மீண்டும் ஒரு முறை நீங்கள் எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்'' என்று வேண்டிக் கொண்டாள்.
இதைக் கேட்ட பரமசிவனுக்குக் கோபம் மூண்டது. ''சாதாரணப் பெண்களைப் போல, அரியவையான வேதாந்த உபதேசங்களை நீ உன் விளையாட்டுத் தனத்தால் மறந்து போனாய். அதனால் நீ புவியில் ஒரு வலைஞனின் மகளாகப் பிறக்கக்கடவாய்'' என்று சபித்துவிட்டார்.
அம்பிகை மிகவும் வேதனைப்பட்டாள். 'பரமனைப் பிரிந்து இருப்பது முடியாது' என்று எண்ணி அவள் துடிப்பதைக் கண்டு இறைவன் மனம் இளகினார். "தேவி, வருந்தாதே. விரைவில் உன்னை நான் அழைத்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.
அப்போது அங்கு விநாயகரும் முருகப்பெருமானும் வந்தனர். நடந்ததை அறிந்ததும் அவர்களும் கோபமுற்றனர். கயிலையங்கிரியில் இருந்த திருமுறைகளையெல்லாம் அவர்கள் இருவரும் எடுத்துக் கடலில் வீசி எறிந்து விட்டனர். அதைக் கண்ட சிவபெருமான் தம் வாயிற் காவலராகிய நந்தி தேவரை அழைத்தார்.
“நந்தியே, நாங்கள் ஏகாந்தமாக இருந்தபொழுது என் உத்தரவு இல்லாமல் நீ இந்த இரண்டு சிறுவர்களையும் உள்ளே விட்டமையால் குற்றம் உள்ளவனானாய். ஆகையால் நீ கடலில் கொம்பன் சுறா என்னும் மீனாகப் பிறக்கக் கடவாய்'' என்று சபித்தார். அதைக் கேட்ட நந்திதேவர் மிகவும் துக்கப்பட்டார். அதைக் கண்டதும், “சில காலத்திற்குப் பிறகு உன்னையும் நான் சாபத்திலிருந்து விடுவிக்கிறேன்'' என்று அருளினார் சிவபெருமான்.
புத்தகங்களை எடுத்து எறிந்த காரணத்தால் குமரப்பெருமான் ஊமையானார். விநாயகப்பெருமான் பாதிக்கப்படவில்லை.
நந்திதேவர் நீண்ட கொம்பினையுடைய ஒரு பெரிய சுறாவாகக் கடலில் பிறந்து, அதிலிருந்த ஜீவராசிகளை மட்டுமல்லாமல் எதிர்ப்பட்ட கப்பல்களையும் கட்டுமரங்களையும் மோதிச் சின்னபின்னப்படுத்தி அவற்றிலிருந்த மனிதர்களையும் கொன்று தின்று தீர்த்தார். பாண்டிய நாட்டில் இருந்த ஒரு துறைமுகத்தின் அருகில் அவர் வந்தடைந்தார்.
பார்வதிதேவி, அந்தக் கரையை அடுத்த ஓர் ஊரில் வாழ்ந்து வந்த செம்படவர் தலைவன் தாசபூபதியின் மகளாகப் பிறந்து வளர்ந்து வந்தாள்.
ஆண்டுகள் பல கழிந்தன. மீனின் உபத்திரவம் தாங்க முடியவில்லை. தாசபூபதி ஓர் அறிக்கை விடுத்தான். ''எந்த இளைஞன் அந்தச் சுறாவைப் பிடித்து வருகிறானோ, அவனுக்கே என் மகளை மணம் செய்து கொடுப்பேன்'' என்று அவன் அறிவித்தான்.
பல மீனவர்கள் வந்து வலைவீசிப் பார்த்து அந்த மீனுக்கே இரையானார்கள். சுறாவின் கொடுமை மேலும் மேலும் அதிகரித்தது.
ஒரு நாள், வலிமையும் வனப்பும் ஒருங்கே பொருந்திய ஒரு வாலிப வலைஞன் ஒரு பெரிய வலையை முதுகில் சுமந்துகொண்டு அந்த ஊருக்கு வந்தான். அவன் தாசபூபதியின் அறிக்கையை அறிந்ததும் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டு கட்டுமரத்தில் ஏறிக் கடலில் தன்னந்தனியே சென்றான். அந்த ஆணழகன் ஆபத்தை எதிர்கொண்டு சென்றதைக் கண்ட தாசபூபதி மனம் வருந்தினான்.
ஆனால் அந்த இளைஞன் நடுக்கடலை அடைந்ததும், தன் வலையை விரித்தான். அதை உதறிக் கடலுக்குள் வீசினான். பிறரால் எறியப்பட்ட வலைகளை எல்லாம் கிழித்தெறிந்த அந்தச் சுறா, இளைஞனின் வலையில் சிக்கி வலியிழந்து ஒடுங்கியது. இளைஞன் கட்டுமரத்தோடு கரை சேர்ந்தான். அதை எடுத்து அவன் வெளியே போட்டதும் அதன் மூச்சு ஒடுங்கியது, இறந்தது.
தாசபூபதி தன் மகளை அந்த வலைஞனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். கொம்பன் சுறா நந்திதேவராக மாறியது. அதன் மீது அமர்ந்தபடி பரமசிவனும் பார்வதியும் அவர்கள் அனைவருக்கும் காட்சியளித்து அருளினார்கள், மீனவர்கள் பெருமகிழ்ச்சி கொண்டனர்.
அவர்களை ஆசீர்வதித்துவிட்டு இறைவன் மற்றவர்களுடன் மறைந்தார்.