ஓர் அரசனுடைய சபைக்குப் பல சன்னியாசிகள் வருவது வழக்கம். சபைக்கு வரும் எல்லா சன்னியாசிகளிடமும் அரசன், 'உலகத்தைத் துறந்து சன்னியாசியாக வாழ்வது நல்லதா? அல்லது உலகத்தோடு ஒட்ட ஒழுகி இல்லறத்தானாக வாழ்வது நல்லதா? எது சிறந்த வாழ்க்கை என்று சொல்லுங்கள்' என்று கேட்டு வந்தான்.
எவ்வளவோ துறவிகள் அரசனின் கேள்விக்குப் பதிலாக எதை எதையோ சொன்னார்கள். சில சன்னியாசிகள், 'துறவற வாழ்க்கைதான் மேலானது' என்று சொன்னார்கள். அவ்விதம் சொன்னவர்களிடம், 'அது எப்படி? துறவற வாழ்க்கைதான் மேலானது என்றால் விளக்கிக் காட்டுங்கள். இல்லாவிட்டால் நீங்களும் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுங்கள்' என்று கேட்டான் அரசன்.
'இல்லை, இல்லை. இல்லற வாழ்க்கைதான் சிறந்தது' என்று சிலர் பதில் சொல்லிவிட்டால், 'அது எப்படி? எதை வைத்து நீங்கள் இல்லற வாழ்க்கை சிறந்தது என்று சொல்கிறீர்கள்? அதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் செர்ன்னதை சரி என்று நிரூபித்துக் காட்டுங்கள்' என்று கேட்டு அரசன் தொந்தரவு செய்து வந்தான்.
இவ்விதம் பலகாலம் சென்றது. ஒருசமயம் அரசனின் அரண்மனைக்கு ஓர் இளம் துறவி வந்தார். அவரிடமும், 'இல்லற வாழ்க்கை சிறந்ததா? துறவற வாழ்க்கை சிறந்ததா?' என்று வழக்கமாக தான் கேட்கும் கேள்வியைக் கேட்டான் அரசன்.
'இரண்டுமே சிறந்ததுதான். அவரவர் தர்மத்திற்கு ஏற்ப இரண்டு வாழ்க்கையுமே சிறந்தது' என்று பதில் சொன்னார் இளம்துறவி.
அரசன் அப்போதும் திருப்தி அடையவில்லை. 'அது எப்படி? நிரூபியுங்கள் பார்க்கலாம்' என்று வழக்கம் போலவே அவரிடமும் கேட்டான்.
'சரி. நிரூபித்துக் காட்டுகிறேன். ஆனால், அரசே, நீங்கள் என்கூடவே சில நாட்கள் இருக்க வேண்டும். என்னுடனேயே நான் போகும் இடங்களுக்கு எல்லாம் வர வேண்டும். அப்போது தான் நான் சொல்வதன் உண்மை உங்களுக்குப் புரியும்' என்ற ஒரு நிபந்தனையைச் சன்னியாசி விதித்தார்.
அரசன் அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டான்.
சன்னியாசியும் அரசனுமாகப் பல ஊர்களையும் பல நாடுகளையும் கடந்து சென்றார்கள். நீண்ட தூரம் பயணம் செய்த பிறகு, ஒரு புதிய நாட்டின் தலைநகருக்கு வந்து சேர்ந்தார்கள்.
அங்கே அப்போது ஒரு பெரிய விழா நடந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக, இசையும் மேளமும் முழங்கியபடி நகரமே, விழாக்கோலம் பூண்டிருந்தது. அரசனும் சன்னியாசியும், 'இங்கே என்ன விழா?' என்று விசாரித்தபோது, அந்த ஊர் ராஜகுமாரிக்குச் சுயம்வரம் என்பது தெரிய வந்தது.
ஊரின் நடுவிலிருந்த முக்கியமான ஓர் இடத்தில் பல தேசத்து அரசகுமாரர்களும் கூடியிருந்தார்கள். இந்த ராஜகுமாரன் இப்படிப்பட்டவன் என்று ஒவ்வொரு அரசகுமாரனுக்கும் கட்டியம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தத் தேசத்து ராஜகுமாரி ஒரு பல்லக்கிலே வந்தாள். ஒவ்வொரு ராஜகுமாரனுக்கும் முன்பும் பல்லக்கு நிறுத்தப்பட்டது. அந்த ராஜகுமாரன் யார், எப்படிப்பட்டவன், அவனிடம் விசேஷமாக என்ன என்ன தகுதிகள் இருக்கின்றன என்பவைகளை எல்லாம் ஒருவர் விளக்கமாக எடுத்துச் சொல்வார். ராஜகுமாரி, 'உம், அடுத்து' என்பாள். பல்லக்கு நகர்ந்து அடுத்த ராஜகுமாரனிடம் போய் நிற்கும். அவனைப் பற்றிய விவரங்களைச் சொல்வார்கள். பிறகு அரசிளங்குமரி, 'உம், அடுத்து' என்று சொல்வாள்.
இவ்விதம் அங்கே கூடியிருந்த எல்லா இளவரசர்களைப் பற்றித் தெரிந்து கொண்டும், ஒருவரையும் அவள் மனம் நாடவில்லை.
அவளோ மிகவும் அழகாக இருந்தாள். அவளை அடைய மாட்டோமா என்று அங்கே குழுமியிருந்த அத்தனை ராஜகுமாரர்களும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள்.
'இங்கே இவ்வளவு அரசகுமாரர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட எனது உள்ளத்திற்கு இனியவராக இல்லையே' என்று நினைத்து ராஜகுமாரி வருந்தினாள். அவ்விதம் வருத்தப் பட்டுக்கொண்டே அவள் திரும்பியபோது வழியிலே ஒருவரை அவள் கண்டாள்.
அந்த ஊருக்குப் புதிதாக ஒரு பாலசன்னியாசி வந்திருந்தார். அவர், அங்கே ஏராளமாகக் கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்து விட்டு, 'அங்கே என்ன கூட்டம்?' என்று அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தார்.
அந்த இளம் துறவியின் முகத்தில் அறிவும் அழகும் சுடர்விட்டுப் பிரகாசித்தன. அரசகுமாரிக்கு அவரைப் பார்த்ததுமே பிடித்துவிட்டது. 'இவர்தான் நான் விரும்பும் கணவர்' என்று சொல்லிக் கொண்டே, அவள் திடீரென்று பாலசன்னியாசியின் அருகே சென்று, தனது கையிலிருந்த சுயம்வர மாலையை அவருடைய கழுத்தில் போட்டுவிட்டாள்!
இளந்துறவி அதைச் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அவர் அப்படியே பதறிப்போய் மாலையைத் தூக்கி வீசி எறிந்தார். 'இது என்ன பைத்தியக்காரத்தனம்? நானோ ஒரு சன்னியாசி. எனக்காவது, கல்யாணமாவது?' என்று சொல்லிக் கத்தினார்.
ராஜகுமாரியின் தந்தை, அதாவது அந்த நாட்டின் அரசன், 'இந்த பாலசன்னியாசி மிகவும் ஏழை போல இருக்கிறது. அதனால்தான் ராஜகுமாரியைத் திருமணம் செய்வதற்கு இவர் தயங்குகிறார். இதற்கு நாம் ஒரு வழியைச் செய்துவிடலாம்' என்று நினைத்தான்.
ஆகவே, அவன் இளம் துறவியைப் பார்த்து, ‘அப்பா, பேரழகியாகிய இந்த ராஜகுமாரியை நீ திருமணம் செய்துகொள். உடனே நான் என்னுடைய ராஜ்ஜியத்தில் பாதியை உனக்குத் தந்துவிடுகிறேன். எனது காலத்திற்குப் பிறகு, முழு ராஜ்ஜியமும் உனக்கே கிடைக்கும்' என்று சொன்னான்.
இப்படிச் சொல்லிவிட்டு, மன்னன் மலர் மாலையை எடுத்து மறுபடியும் பாலசன்னியாசியின் கழுத்திலே இட்டான்.
திரும்பவும் சன்னியாசி வெகுவேகமாக மாலையை உதறி எறிந்தார். 'எனக்குக் கல்யாணம் வேண்டவே வேண்டாம்' என்று சொல்லிவிட்டு, அந்த இடத்திலிருந்தே விடுவிடுவென்று விரைவாகக் கிளம்பி நடந்தார்.
ராஜகுமாரிக்கோ மிகவும் ஏமாற்றமாகிவிட்டது. 'நான் அவரையே விரும்புகிறேன். கல்யாணம் என்றால், அவரைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்' என்று சொல்லி, அவளும் அந்த இளம் துறவியைப் பின்தொடர்ந்து விடுவிடுவென்று நடந்தாள்!
இவைகளை எல்லாம் சந்தேகம் கேட்ட அரசனும், அவனுக்கு விளக்கம் தர ஒப்புக்கொண்ட சன்னியாசியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சன்னியாசி, அரசனிடம், 'நாம் இவர்களைப் பின் தொடர்ந்து செல்லலாம்' என்று சொன்னார்.
பாலசன்னியாசிக்கும் ராஜகுமாரிக்கும் தெரியாமல் சற்று தூரத்தில் அரசனும் இந்தத் துறவியும் நடந்தார்கள்.
'ராஜகுமாரியை மணக்க முடியாது' என்று சொல்லி விர்ரென்று வெளியேறிய பாலசன்னியாசி, வேகவேகமாக நகரத்தை விட்டே வெளியேறி நீண்டதூரம் நடந்தார். அடர்ந்த ஒரு காட்டிற்குள்ளே சென்று விட்டார். பிறகு அவர் எங்கே போனார், எப்படிப் போனார் என்பதை ஒருவராலுமே கண்டுபிடிக்கவே முடியவில்லை.
அதுவரையிலும் பாலசன்னியாசியைத் தொடர்ந்து நடந்து வந்த ராஜகுமாரிக்கு, மேற்கொண்டு அவரைத் தொடர முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அவள் திகைத்தாள். காட்டிலே ஒரு மரத்தின் அடியில் நின்றுகொண்டு அழத் தொடங்கிவிட்டாள். அரண்மனைக்குத் திரும்பலாம் என்றால், அதற்குக்கூட அவளுக்கு வழி தெரியவில்லை.
அந்த சமயத்தில் நமது அரசனும் சன்னியாசியும் அங்கே வந்தார்கள். அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லித் தேற்றினார்கள். அரண்மனைக்கு வழி காட்டுவதாகச் சொன்னார்கள்.
ஆனால் அப்போது பொழுதுசாய்ந்து இருட்டி விட்டது. இதுவே பெரிய மரமாகத்தான் இருக்கிறது. இங்கேயே இரவுப் பொழுதைக் கழித்து விட்டு, காலையில் வழி கண்டுபிடித்து ஊருக்குத் திரும்பலாம்' என்று முடிவு செய்தார்கள்.
அந்த மரத்திலே ஒரு ஆண் பறவையும், ஒரு பெண் பறவையும் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. அவைகளுக்கு மூன்று பறவைக் குஞ்சுகள் இருந்தன. ஆண்பறவை தன் மனைவியைப் பார்த்து, 'பெண்ணே, நம்மைத் தேடி மூன்று விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். இப்போது நாம் என்ன செய்வது? இதுவோ குளிர்காலம். நம்மிடம் குளிர்காயக்கூட ஒன்றும் இல்லையே?' என்று வருத்தத்துடன் சொல்லியது.
இப்படிச் சொல்லிவிட்டு, உடனே ஆண் பறவை பறந்து சென்றது. தனது சின்னஞ் சிறிய அலகினால் இங்கும் அங்கும் கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து ஒரு பெரிய குவியலாகக் குவித்தது. பிறகு எங்கிருந்தோ எரியும் தணல் ஒன்றைக் கொண்டு வந்தும் போட்டது. மரத்தின் கீழே உட்கார்ந்திருந்த மூன்று பேரும் அவைகளைக்கொண்டு தீ மூட்டிக் குளிர் காயத் தொடங்கினார்கள்.
அவ்வளவு செய்த பிறகும் அந்தச் சிறிய ஆண் பறவையின் மனம் திருப்தி அடையவில்லை. ஆகவே அது தன்னுடைய மனைவியைப் பார்த்து, 'பெண்ணே, இந்த விருந்தாளிகளுக்கு உணவாக அளிக்க நம்மிடம் ஒன்றுமேயில்லையே! அவர்களோ மிகவும் பசியாக இருக்கிறார்கள். நாமோ இல்லறத்தார்கள். நம்மிடம் வருபவர்களுக்கு ஏதாவது கொடுத்து உபசரிப்பது நமது கடமை. இப்போது நாம் என்ன செய்வது? என்னதான் செய்ய முடியும்? சரி, என்னையே நான் அவர்களுக்குக் கொடுத்து விடுகிறேன்' என்று சொல்லி, விர்ரென்று பறந்து எரியும் நெருப்பிலே விழுந்து பொசுங்கியது!
மரத்தடியில் இருந்த மூவரும் பறவையின் செயலைப் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் ஓடிவந்து தடுப்பதற்கும் முன்னாலேயே பறவை சட்டென்று நெருப்பில் விழுந்துவிட்டது!
சிறுபறவையின் பெண்பறவை தனது கணவன் செய்ததைப் பார்த்தது. 'இங்கே இருப்பதோ மூன்று பேர்கள். அவர்களின் பசிக்கு ஒரேஒரு பறவையின் இறைச்சி எப்படிப் போதும்? அது போதாது. என் கணவர் ஈடுபட்ட முயற்சிக்கு நானும் உதவாவிட்டால், நான் என்ன மனைவி? அவர்கள் எனது உடலையும் சேர்த்துச் சாப்பிடட்டும்' என்று சொல்லி, அதுவும் விர்ரென்று எரியும் நெருப்பில் விழுந்து உயிரை விட்டது.
மரத்திலே கூட்டில் இருந்த மூன்று பறவைக் குஞ்சுகளும், தங்கள் பெற்றோர்களின் செயல்களைப் பார்த்து, ''அப்பாவும் அம்மாவும் தங்கள் கடமையைச் செய்திருக்கிறார்கள். இருந்தாலும் விருந்தாளிகளுக்கு அது போதாது. பெற்றோர் ஈடுபட்ட முயற்சியில் உதவுவது குழந்தைகளாகிய நம்முடைய கடமை அல்லவா? உத்தமக் குழந்தைகளின் இலட்சணமே அதுதானே. ஆகவே நாமும் விருந்தாளிகளுக்கு உதவுவோம்' என்று சொல்லி மூன்றுமாகச் சேர்ந்து நெருப்பிலே விழுந்து விட்டன.
மரத்தின் கீழே இருந்த மூவரும் இந்தக் காட்சிகளைக் கண்டு பிரமித்தார்கள். அவர்களுக்கு, அந்த உத்தமப் பறவைகளை எடுத்துச் சாப்பிட மனம் வரவில்லை. இரவு முழுவதும் அந்தப் பறவைகளின் பெருமையைப் பற்றியே அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பொழுது விடிந்தது. சன்னியாசியும் அரசனும், அரசகுமாரிக்கு அவளது ஊருக்குப் போகும் வழியைக் காட்டினார்கள். அவள் தனது தந்தையின் அரண்மனைக்குத் திரும்பினாள்.
சன்னியாசி அரசனை நோக்கித் திரும்பினார்: "அரசே! இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா? என்பதற்கான பதிலை இப்போது தாங்கள் புரிந்து கொண்டீர்களா? உலகத்தோடு ஒட்டி இல்லற வாழ்க்கை வாழ வேண்டுமானால் இந்தப் பறவைகளைப் போலவே வாழ வேண்டும். எந்த நிமிஷமும் ஏதாவது நோக்கத்திற்காகத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். துறவியாக இருக்க வேண்டும் என்றால், அந்தப் பாலசன்னியாசியைப் போலவே வாழ வேண்டும். ஓர் அழகிய ராஜகுமாரியோ, பாதி அரசுரிமையோ அவருடைய மனதைக் கலைக்கவே இல்லை. அப்படிப்பட்ட உறுதியான மனம் கொண்டிருக்க வேண்டும். இல்லறத்தானாக வாழ்ந்தால், மற்றவர்களுடைய நலனுக்காகவே வாழ்ந்து தியாகங்கள் செய்யச் சித்தமாக இருக்க வேண்டும். துறவியாக வாழ்ந்தால், பொன்னையும் பொருளையும் அழகையும் அதிகாரத்தையும் பெரிதாக மதிக்காத மனப்பக்குவம் பெற வேண்டும். இல்லற வாழ்க்கையும் சிறந்தது. துறவற வாழ்க்கையும் சிறந்தது. ஆனால் அவரவர்களுடைய தர்மத்தை அவரவர்கள் கடைப்பிடித்து வாழ வேண்டும். அதுதான் சரியானது' என்ற ஒரு சிறந்த விளக்கத்தை அந்தப் பெரிய உள்ளம் கொண்ட சன்னியாசி அரசனுக்குக் கொடுத்தார்.