ஒருவனுடைய மகன் இறக்கும் நிலையிலிருந்தான்.
அதைப் பார்த்த அவன் தந்தை மிகவும் வருந்தினார். பல வைத்தியர்களை அழைத்து வந்து காண்பித்தார். இருப்பினும் மகனின் நிலைமையில் எவ்வித மாற்றமுமில்லை.
அப்போது அங்கு வந்த சாது ஒருவர் இறக்கும் நிலையிலிருந்தவனைச் சோதித்துப் பார்த்தார்.
பின்னர் அவன் தந்தையை அழைத்து, “இவன் பிழைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது” என்றார்.
அவன் தந்தையும், “என்ன வழி சுவாமி. எதுவாக இருந்தாலும் நான் அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
சாதுவும், “ஒரு மனிதனுடைய மண்டை ஓட்டில், சுவாதி நட்சத்திரம் உச்சமாகும் வேளையில் மழை பெய்து விழும் மழைத்துளி நீரில் நல்ல பாம்பின் விசம் சிறிது சேர்ந்து அதைக் கொண்டு வந்தால் , அது உன் மகனைப் பிழைக்கச் செய்யும்” என்றார்.
அந்தத் தந்தை காலத்தைப் பார்த்தார். மறுநாள் காலை சுவாதி நட்சத்திரம் உச்சமாகும் வேளை இருந்தது.
அதை அறிந்த அவர் ஈசுவரனை நினைத்து, “ஈசுவரனே! என் மகன் பிழைக்க சாது காட்டிய வழியில் அந்த நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற உதவி புரிய வேண்டும்” என்று வணங்கியபடி மண்டை ஓட்டைத் தேடிச் சென்றார்.
ஒரு மரத்தினடியில் ஒரு மண்டை ஓடு கிடைத்தது. அதை எடுத்து அருகில் வைத்துக் கொண்டார்.
அங்கு மரத்தடியில் அமர்ந்தபடி, மீண்டும் ஈசுவரனை நினைத்தபடி, “ஈசுவரனே! தங்கள் உதவியால் எனக்கு தற்போது மண்டை ஓடு கிடைத்து விட்டது. என் மகன் பிழைக்க, சாது சொன்ன மற்ற நிபந்தனைகள் நிறைவேற ஒத்துழைக்க வேண்டுகிறேன்” என்றபடி மனமுருக வேண்டினார்.
அவர் வேண்டிக் கொண்டிருந்த போதே மழை விழத் தொடங்கியது. அந்த மழையில் சில துளிகள் அந்த மண்டை ஓட்டினுள் விழுந்தன.
இதைப் பார்த்த அவரின் மனதிற்குள் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. “ஈசுவரனே, என் மகன் பிழைப்பதற்கான இரண்டு நிபந்தனைகள் நிறைவேறி விட்டன. கடைசி நிபந்தனையை நிறைவேற்றி உதவிட வேண்டும்” என்று வணங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த மண்டை ஓட்டின் அருகில் தவளை ஒன்று வந்தது.
தவளையைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அருகிலிருந்த புல்வெளியிலிருந்து பாம்பு ஒன்று தவளையை நோக்கிப் பாய்ந்தது.
தன்னை யாரோ தாக்க வருகிறார்கள் என்பதை உணர்ந்த தவளை மண்டை ஓட்டைத் தாண்டித் தாவியது.
தவளையைத் தாக்க வந்த பாம்பு தவளையைப் பிடிக்கும் நோக்கத்தில் விசத்தை வெளியிட அது அந்த மண்டை ஓட்டில் சென்று விழுந்து மழைத்துளியுடன் கலந்தது.
இதைப் பார்த்த அந்த தந்தை மகிழ்ச்சியுடன், “ஈசுவரா! என் மகனைப் பிழைக்க வைக்க நீ எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு நன்றி” என்றபடி அந்த மண்டை ஓட்டைக் கையில் எடுத்துக் கொண்டு மகனைப் பிழைக்க வைக்கப் புறப்பட்டான்.
உண்மையான வேண்டுதல் எப்போதும் நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.