துணிச்சலான மலைவாழ் மக்கள் மிக்க ஒரு வீரப் படையை உருவாக்கினார் சத்ரபதி சிவாஜி. அவர் பல போர்களில் முகலாயப் பேரரசின் படைகளை வெற்றி கொண்டு ஓர் இந்து சாம்ராஜ்யத்தை நிறுவியவர்.
ஒரு நாள் சிவாஜி தன் செயலாளரான பாலாஜியை அழைத்தார். பாலாஜி, சிவாஜியின் கட்டளைகளை விரைந்து செயலாற்ற வல்லவர்.
சிவாஜியின் ஆட்சியின் கீழுள்ள கோட்டைகளைக் கண்காணிப்பதிலும், பிற நாட்டு விருந்தாளிகளையும், அரசர் பங்கேற்க வேண்டிய விழாக்களை ஏற்பாடு செய்வதிலும் பாலாஜி விரைந்து செயல்பட்டார்.
பரபரப்பான ஒரு சமயம், சிவாஜி பாலாஜியிடம் கொங்கண் பகுதியின் படைத்தலைவருக்கு ஓலை ஒன்றை அன்று இரவுக்குள் எழுதித் தயாராக வைத்திருக்க உத்தரவிட்டார்.
அடுத்த நாள் அதிகாலை பதில் ஓலையை அவசரமாக அனுப்ப வேண்டியிருந்தது. அன்று வழக்கத்தைவிட பாலாஜிக்கு வேலை மிக அதிகம்.
குமாஸ்தாக்கள், அதிகாரிகள், படைத் தலைவர்கள் என அனைவரிடமும் முக்கிய விஷயங்களைச் சொல்ல வேண்டியிருந்தது. தபால்களோ பெருமளவில் இருந்தன. பல கடிதங்களைத் தயார் செய்ய வேண்டிய நிலை.
இந்த நிலையில் திடீரென மகாராஜா சிவாஜி பாலாஜியை அழைத்து, கோட்டைத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய உத்தரவு ஓலை தயாராகி விட்டதா என்று விசாரித்தார்.
பாலாஜிக்கு நேரமில்லாததால் ஓலை எழுத முடியவில்லை. தன் தயக்கத்தை வெளிக்காட்டாமல் சுதாரித்துக் கொண்டு ஓர் ஓலையை எடுத்துக் கொண்டு, ‘‘ஓலை தயார் மகாராஜா’’ என்றார். பாலாஜி ஓலையைப் படித்துக் காட்டத் தயாராக இருந்தார். சிவாஜி சாய்வான இருக்கையில் அமர்ந்தார்.
இரவு நேரம். தீப வெளிச்சத்திற்காகத் தீவட்டி ஏந்துபவர் பாலாஜியின் பக்கமாக வந்து தீவட்டியைப் பிடித்துக் கொண்டார். பாலாஜி படிக்கத் தொடங்கிய ஓலை, ஒன்றுமே எழுதப்படாத வெற்று ஓலை. அதனைக் கவனித்த தீவட்டிக்காரரால் தன் வியப்பை மறைக்க இயலவில்லை.
சிவாஜி அதைக் கவனித்து என்ன என விசாரிக்க, தன் பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் தீவட்டிக்காரர் நிலைமையைச் சமாளித்தார்.
பாலாஜி கடிதத்தைப் படிக்கத் தொடங்கினார்.
‘மாதா பவானியின் ஒப்பற்ற கருணை முன்னிற்க’ என்று தொடங்கி, நிஜ ஓலையைப் படிப்பதுபோல எழுத வேண்டிய செய்தியை விவரித்தவாறு படித்துக் காட்டினார். மகாராஜா பாலாஜியிடமிருந்து அந்த ஓலையைச் சரி பார்ப்பதற்காக வாங்கிப் பார்த்தார்.
சிவாஜிக்கு மிகவும் ஆச்சரியம்! எழுதப்பட்ட ஓலைபோல் சிறப்பாகச் சமயோசிதத்துடன் செயல்பட்ட பாலாஜியை மனதில் பாராட்டிக் கொண்டார்.
பிறகு சிவாஜி, ‘என்ன இது?’ என்பதுபோல் பாலாஜியைப் பார்க்க, பாலாஜிக்கோ என்ன நேருமோ என அச்சம்.
உடனே சிவாஜி, ‘‘பலே பாலாஜி, பலே! கடிதம் அருமை!’’ எனப் பாராட்டி உரக்கச் சிரித்தார். அவர் மேலும், ‘‘பாலாஜி, உங்களைப் போன்ற சாதுரியமான செயலாளரைப் பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன்’’ என்றார்.
பாலாஜி, ‘‘உங்களைப் போன்ற ஓர் ஒப்பற்ற பண்பாளரை நாங்கள் அரசராகப் பெற்றது அன்னை பவானியின் திருவருளே’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.