ஓர் ஊரில் இரண்டு கழுதைகள் இருந்தன. அதில் ஒன்று உழைத்து உழைத்து மெலிந்த, வயதான கழுதை. மற்றொன்று உழைக்காத கொழுத்த இளங்கழுதை.
சின்னக் கழுதை பெரிய கழுதையிடம், ‘‘அண்ணே! நீ ஏன் இப்படி இளைத்துள்ளாய்?’’ என்று கேட்டது.
‘‘நான் சூளையில் வேலை செய்பவன். என் முதலாளி எனக்கு வேலை அதிகம் தருவார். ஆனால் தீனி போடவே மாட்டார். சரி, நீ என்ன செய்கிறாய்?’’ என்று கேட்டது பெரிய கழுதை.
‘‘நான் ஒரு வண்ணானிடம் வேலை செய்கிறேன். எல்லோரும் இப்போது துவைக்கும் இயந்திரம் வாங்கிவிட்டதால் எனக்கு வேலை ஒன்றும் கிடையாது. சாப்பிடுவது மட்டுமே வேலை’’ என்றது சின்னக் கழுதை.
‘‘ம், நீ கொடுத்து வைத்தவன்’’ என்றது பெரிய கழுதை.
‘‘நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய்? என்னுடன் வா, என் முதலாளியிடம் வேலை செய்யலாம்.’’
‘‘எனக்கும் வரத்தான் ஆசை. ஆனால் என்னால் வர முடியாதே!’’
‘‘ஏன்?’’
‘‘என் முதலாளிக்கு ஒரு மகள். அவர் தினமும் அவளைத் திட்டி, ‘நீ திருந்தவில்லை என்றால் இந்தக் கழுதைக்குத்தான் உன்னைக் கட்டி வைப்பேன்’ என என்னைக் காட்டி அடிப்பார். அதான் யோசிக்கிறேன்...’’ என்றது.