கிராத நகரத்தில் தேவராஜன் என்றொரு ஏழை பிராமணன் ஒருவன் இருந்தான்.அவனுக்கு வேதநூல் ஞானம், கல்வி, கேள்வியறிவு ஏதுமில்லை. அவன் ஒரு நாள் கூட கடவுளையோ, தர்மத்தையோ நினைத்ததில்லை.
பிராமண குலத்திற்கு அப்பாற்பட்ட கள் வியாபாரம் செய்வது, நம்பியவர்களை மோசடி செய்வது, கொலை, கொள்ளை போன்றவைகளை எவ்வித அச்சமுமின்றி செய்வது என அவன் தீய செயல்களையே செய்து வந்தான்.
இதனால் அவனுக்கு செல்வம் அதிகமாகச் சேர்ந்தது. அவனைத் திருத்த அவனுக்கு, அவனது பெற்றோர் திருமணமும் செய்து வைத்தனர். ஆனால், அதிலும் எந்தப் பயனுமில்லை.
அவன் ஒரு நாள் குளிப்பதற்காகக் குளக்கரைக்குச் சென்றான்.
அங்கு பேரழகியான கார்ஜியஸ் என்கிற தாசியைக் கண்டான்.அவள் மீது விருப்பம் கொண்டான்.
கார்ஜியசும் தேவராஜனின் செல்வச் செழிப்பைக் கண்டு அவனுடன் இருக்கச் சம்மதித்தாள்.
இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். ஆண்டுகள் சில ஓடின. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகக் குடித்தும், சாப்பிட்டும், உறங்கியும் பொழுதைக் கழித்தனர்.
இதைக் கண்ட அவனது பெற்றோர் கெஞ்சலோ, மனைவியின் கண்ணீரோ அவனை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அவர்கள் மீது கோபம் கொண்டான்.
ஒரு நாள் இரவு, குடிபோதையில் தன்னிலை மறந்தான். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், தந்தை, மனைவி என மூவரையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.
வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு கார்ஜியஸ் வீட்டிற்குச் சென்று அவளுடன் மகிழ்ச்சியாக இருந்து வந்தான்.
அவன் ஒருநாள் பிரதிஷ்டானம் என்ற நகருக்குச் சென்றான். அங்கிருந்த சிவன் கோயில் அருகில் தங்கினான்.
அங்கு, பிராமணோத்தமர்கள் சிவபுராணம் ஓதிக் கொண்டிருந்தனர். இச்சூழ்நிலையில் அவன் சிவபுராணம் கேட்க நேர்ந்தது.
இந்நிலையில், நோய்வாய்ப்பட்டு தேவராஜன் மரணமடைந்தான்.
எமதூதர்கள் அவனை எமபுரிக்கு அழைத்துச் செல்வதற்காக அங்கு வந்தனர்.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.
அங்கு உடல் முழுக்க திருநீறு அணிந்து, ருத்திராட்சம் அணிந்து சூலம் தாங்கிய சிவகணங்களும் தோன்றினர்.
அவர்கள் எம தூதர்களை விரட்டியடித்து, தேவராஜனை சிவலோகத்துக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினர்.
எம தூதர்கள் திரும்பியதை அறிந்த எமன் கோபமாகக் கிளம்பி அங்கு வந்தான்.
அவன் சிவகணங்களிடம், “கொலை, கொள்ளை என பல்வேறு பாவங்கள் புரிந்த அவனை என்னிடம் விட்டுச் செல்லுங்கள்” என்று வேண்டினான்.
சிவகணங்கள் அவனை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும், முழு விவரமறிய சிவபெருமானைச் சந்திக்கவும் அறிவுறுத்திச் சென்றனர்.
எமன் சிவபெருமானிடம் இதுகுறித்துப் புகார் தெரிவித்தான்.
சிவபெருமான், “எமனே, நீ சொல்வது உண்மைதான். அவன் முன்பு பல்வேறு பாதகங்களைச் செய்து பாவியாக இருந்தான். அவன் சாவதற்கு முன்பு சில காலம் சிவபுராணம் கேட்டான். இதனால், அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிப் புனிதமானவனாக ஆகி விட்டான். இதனால் அவனுக்கு சிவலோகத்தில் இடமளிக்கப்பட்டது” என்றார்.
விளக்கமறிந்த எமன் திரும்பினான்.
சிவபுராணத்திற்கு இவ்வளவு சிறப்பா?