அரசர் மாலை வேளையில் அமைச்சரைச் சந்திக்கச் சொல்லியிருந்தார். அமைச்சர் வரக் காலதாமதமானது. எனவே அரசரே அமைச்சர் வீட்டிற்கு நேரடியாகச் சென்றார்.
அங்கு அமைச்சர் வீட்டிற்குள் இருந்தார். அரசர் வெளியில் நின்றபடியே அமைச்சரை அழைத்தார்.
அரசரின் குரல் கேட்ட அமைச்சர், வேகமாக வெளியில் வந்து, “அரசே, என்னை மன்னிக்க வேண்டும்.” என்றார் அமைச்சர்.
“அமைச்சரே, நான் மாலையில் சந்திக்க வேண்டுமென்று சொல்லியிருதேனே ஞாபகமில்லையா? ஏன், இந்தக் காலதாமதம்?” என்று கேட்டார்.
”அரசே நான் நீராடிவிட்டு, மாலை நேரத்தில் செய்ய வேண்டிய சந்தியாவந்தனத்தைச் செய்து முடித்தேன். அதனால், சிறிது தாமதமாகி விட்டது” என்றார்.
“சந்தியா வந்தனமா? அப்படியென்றால் என்ன? அதை எனக்குக் கற்றுக் கொடும்” என்று கேட்டார் அரசர்.
“அரசே, அதைக் கற்றுக் கொடுக்கும் தகுதி எனக்கு இல்லை. தாங்கள் தகுந்த ஒரு ஆசானைக் கேட்டுத் தெரிந்து கொள்வதே நல்லது. தங்களுக்கு உரிமை உள்ளது என்றால், அவர் அதைத் தங்களுக்குக் கற்றுக் கொடுப்பார்” என்றார் அமைச்சர்.
“சந்தியா வந்தனத்தின் முக்கியப் பகுதி என்ன?” என்று கேட்டார் அரசர்.
“அதன் முக்கியப் பகுதி காயத்ரி மந்திரம்தான்” என்றார் அமைச்சர்.
“அப்படியானால், அதையாவது எனக்குக் கற்றுக் கொடு” என்று கேட்டார் அரசர்.
அமைச்சர், “அரசே, தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். மந்திரம் எதையும் ஓர் ஆச்சாரியன் உபதேசிக்கக் கற்றுக் கொள்வதே நல்லது. இல்லாவிட்டல் அதற்கு மதிப்பில்லை” என்று சொல்லி மறுத்து விட்டார்.
அரசர் இதை ஒரு அவமானமாகக் கருதினார்.
பின்னர் அவர், காயத்ரி மந்திரத்தை ஒரு சுவடியிலிருந்து எடுத்து வரச் சொல்லிப் படித்துப் பார்த்து அதைத் தெரிந்து கொண்டார்.
இருந்தாலும் அரசருக்கு நிம்மதி கிடைக்கவில்லை.
இதுகுறித்து அமைச்சரிடமே தெரிந்து கொள்வோம் என்று எண்ணினார் அரசர்.
அரச சபையில் அன்றைய பணிகள் முடிவடைந்ததும் அரசர், அமைச்சர் மற்றும் தளபதியை மட்டும் அங்கிருக்கும்படி சொன்னார்.
அரசர், அமைச்சரிடம் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, “இது சரிதானே?” என்று கேட்டார்.
அமைச்சர், “மந்திரம் இதுதான். ஆனால் மந்திர உச்சரிப்பும், அதைச் சொல்லும் முறையும் சரியில்லை. தாங்கள் ஓர் ஆசானிடம் கற்றிருந்தால், அவர் தங்களுக்குச் சரியாகக் கற்றுக் கொடுத்திருப்பார்” என்றார்.
அரசர், “ஏன், அதற்கு என்ன அவசியம்?” என்று கேட்டார்.
அமைச்சர் அருகில் நின்றிருந்த தளபதியைப் பார்த்து, “தளபதியாரே, இவரைக் கைது செய்து சிறையில் அடையுங்கள்” என்று அரசரைச் சுட்டிக் காட்டினார்.
தளபதி நடுங்கிப் போனார். அரசரைக் கைது செய்வதா? என்று நினைத்தபடி திகைத்து நின்றார்.
ஆனால் அரசர் அமைச்சரின் செயலைக் கண்டு கோபமடைந்தார். அவர் தளபதியைப் பார்த்து, “இவரைக் கைது செய்து சிறையில் அடையுங்கள்” என்று உத்தரவிட்டார்.
தளபதியும் அரசரின் உத்தரவைக் கேட்டு அமைச்சரைக் கைது செய்ய முற்பட்டார்.
அமைச்சர் புன்னகையுடன், “அரசே! மன்னிக்க வேண்டும். நான் கூறியதன் பொருளைத் தங்களுக்கு விளக்கவே அப்படிச் செய்தேன்” என்றார்.
அரசரும், “அது எப்படி?” என்று கேட்டார்.
“அரசே, நான் சொல்லிய அதே சொற்களைத்தான் நீங்களும் சொன்னீர்கள். அதற்குப் பலன் கிடைத்தது. ஏனென்றால், அந்த சொற்களைப் பயன்படுத்தியவரும், அதைச் சொன்ன விதமும், அதற்குரிய அதிகாரமும்தான் அதற்கு மதிப்பைத் தந்தன. அதையே நான் சொன்ன போது பயனில்லை. மந்திரங்களின் விசயமும் அப்படியே” என்றார் அமைச்சர்.