ஒரு நாட்டின் மன்னர் திடீரென்று இறந்து விட அவருடைய மகளான இளவரசிக்கு பட்டத்து ராணியாக முடிசூட்டப்பட்டது. மிகச் சிறந்த குணமுடைய அவள் ஒரு பெண்ணால் மிகச் சிறந்த நிர்வாகத்தைத் தர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினாள். மக்களும் அவளுடைய செயலையும் துணிச்சலான முடிவையும் வியந்து பாராட்டினர்.
அந்த வருடம் அவளின் பிறந்த நாள் வந்தது. பிறந்த நாளன்று நாட்டு மக்களுக்கு பரிசுகள் வழங்கவிருப்பதாகவும் மகாராணியே கைப்பட பரிசுகள் வழங்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
பிறந்த நாளன்று மகாராணியிடம் பரிசு வாங்க கூட்டம் முண்டியடித்தது. வரிசையாக வந்த அனைவருக்கும் மகாராணி பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கே ஒரு வாலிபன் இதையெல்லாம் கைகளைக் கட்டியபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ராணியும் இதைக் கவனித்தாள்.
பலரும் பரிசு வாங்கிச் செல்லும் வேளையில் அந்த வாலிபன் மட்டும் மகிழ்ச்சியுடன் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
ராணி அவனை உற்றுப் பார்த்தாள். அவனுடைய கம்பீரம் அவளைக் கவர்ந்தது. இருந்தாலும் அவன் தன்னிடம் பரிசு வாங்காமல் தனியே நின்றிருப்பது உள்ளத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. அருகிலுள்ள வீரர்களிடம் அவனை அழைத்து வரும்படி சொன்னாள்.
"நானும் நீண்ட நேரமாகப் பார்க்கிறேன். நீ இதுவரை என்னிடம் பரிசு கோரி வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறாயே. உனக்கு ஏதாவது பரிசு தர விரும்புகிறேன். கேட்டுப் பெற்றுக் கொள் " என்று கூறினாள்.
அந்த இளைஞன் கம்பீரமாகக் கூறினான்.
"மகாராணி நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்வதற்காகவே இங்கு வந்தேன். நீங்கள் என்னை அழைத்துப் பரிசு தருகிறேன் என்று சொல்கிறீர்கள். இது உங்களது உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது. நான் இங்கே வந்தது, தங்களிடம் பரிசு பெற அல்ல."
"பிறகு?" என்றாள்.
தங்களின் இரக்க குணம், மற்றவர்கள் மீது தாங்கள் காட்டும் பரிவு போன்றவைகளை தங்களை அறிந்தவர்கள் சொல்லக் கேட்டிருந்தேன். அதைக் காண வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்தேன். தாங்கள் பரிசுகள் கொடுத்து முடிக்கவும் தங்களை பல்லாண்டு வாழ வாழ்த்தி விட்டுச் செல்லலாம் என்றுதான் நான் காத்திருந்தேன்.
அரசி சொன்னாள்.
"என்னைப் பார்த்துவிட்டு நீ வெறுங்கையுடன் ஊருக்குச் செல்லக் கூடாது. உனக்கு நான் அணிந்திருக்கும் ஆபரணங்களையேப் பரிசாகத் தருகிறேன். ஏற்றுக் கொள்."
"வேண்டாம் அரசி. அதை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்?" என்று அதை மறுத்தான்.
"என் அரசின் ஒரு பகுதியை உனக்கு அளிக்கிறேன். அதை நீ அரசாண்டு வா" என்றாள்.
"இல்லை அரசி. எனக்கென்று சிறிது பூமி இருக்கிறது. அதை வைத்து நான் பிழைத்துக் கொள்கிறேன். அரச பாரமெல்லாம் எனக்கு வேண்டாம்."
"உனக்கு எதைக் கொடுத்தாலும் வாங்க மறுக்கிறாய். நான் என்ன செய்ய?" என்று அரசி அவனைப் பார்த்தாள்.
"ராணியாரே நீங்கள் நீண்ட காலம் வாழுங்கள். நன்றாக ஆட்சி செய்யுங்கள்." என்றபடி கிளம்பினான்.
"நில் வாலிபனே " என்று அவள் கட்டளையிட்டாள்.
"துளிக்கூட சுயநலமில்லாத இத்தகைய மனிதன் ஒருவனைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். நீ என்னை மனைவியாக ஏற்றுக்கொள். இதைவிடப் பெரிய பரிசு என்னிடம் கிடையாது " என்றாள்.
எதையும் விரும்பாதவர்களுக்கு அவர்களே எதிர்பாராத பரிசுகள் தானே வந்து சேரும் என்பதில் ஐயமில்லை.