கடவுளைக் காட்ட முடியுமா?
துறவி ஒருவரிடம் வந்த நாத்திகன், “கடவுள்...கடவுள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே... உம்மால் கடவுளைக் காட்ட முடியுமா...?” என்று கேட்டான்.
துறவியும் அவனிடம் கடவுள் பற்றி நிறைய விளக்கங்களைத் தந்தார். இருப்பினும், நாத்திகன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அவன், “கடவுளை எனக்குக் காண்பிக்க வேண்டும். இல்லையெனில் நீர் ஒரு போலிச் சாமியார் என்று ஒத்துக் கொள்ள வேண்டும்” என்றான்.
அது மதிய வேளை.
துறவி அவனிடம், “கடவுள் நம் தலைக்கு மேலே இருக்கிறார். வானத்தைப் பார்” என்றார்.
நாத்திகனும் தலைக்கு மேலே வானத்தைப் பார்த்தான். சூரிய ஒளி அவனது கண்களைக் கூசச் செய்தது.
“என் கண்கள் கூசுகின்றன” என்றான் நாத்திகன்.
“கடவுளின் படைப்புகளில் ஒன்றான சூரியனையே உன்னால் பார்க்க முடியவில்லையே... உன்னால் எப்படி கடவுளைக் காண முடியும்? என்றார் அந்தத் துறவி.
நாத்திகன் வெட்கித் தலை குனிந்தான்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.