காட்டு வழியாக ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. அங்கிருந்த ஒரு மரத்தில் உயரத்தில் பழங்கள் இருப்பதைக் கண்டான்.
பசியின் வேகத்தில் மரத்தின் மேல் வேகமாக ஏறி, அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
மேலும் சில பழங்களைப் பறிப்பதற்காக முயன்றான். பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறித்து விடலாமென்று கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது, அவனது எடையைத் தாங்காமல் அந்தக் கிளை முறிந்து விட்டது.
முறிந்து விட்ட கிளையிலிருந்து கீழே விழுந்த அவன், அந்தக் கிளையின் கீழே இருந்த கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.
கீழே குனிந்து பார்த்தான். தரை மிகவும் கீழாக இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து போனான்.
மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டிருந்த அவனது கைகளின் பிடி தளர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்தான்.
கண்ணை மூடிக் கொண்டு "என்னை யாராவது காப்பாற்றுங்கள்' என்று சப்தம் போட ஆரம்பித்தான்.
அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு முதியவர், மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார்.
அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.
கல் பட்ட வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது.
"பெரியவரே, உதவச் சொன்னால் என்னைக் கல்லால் அடிக்கிறீர்களே... உங்களுக்கு அறிவில்லையா" என்று கோபத்துடன் கேட்டான்.
அந்தப் பெரியவர் பதில் எதுவும் சொல்லவில்லை.
கீழே குனிந்து, அங்கு கிடந்த மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார்.
அந்தக் கல் பட்ட வலியில், மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து தனது ஒரு கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றைப் பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரிக்கை செய்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை எடுத்து அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்துக் கிளை மேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரைச் சரமாரியாகத் திட்டினான்.
"உம்மை நான் உதவிதானே கேட்டேன்? ஆனால், நீங்கள் என்னைக் கல்லால் அடித்துக் கோபப்படுத்துகிறீர்களே..." என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார்.
இளைஞன் எதுவும் புரியாமல் அவரைப் பார்த்தான்.
அந்தப் பெரியவர். "நான் உன்னை முதலில் பார்த்த போது, நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். அதனால் உன் மூளை வேலை செய்யவில்லை. நான் உன் மேல் கல்லை விட்டு எறிந்ததும், உன் பயம் மறைய ஆரம்பித்து, நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்