ஒரு காட்டில் பல விலங்குகள் வாழ்ந்து கொண்டிருந்தன.
அந்த விலங்குகளைப் பிடிக்கப் பலரும் அந்தக் காட்டுக்கு வேட்டைக்கு வருவது வழக்கம்.
ஒருமுறை வேட்டைக்காரன் ஒருவன் அந்தக் காட்டில் ஒரு கூண்டை வைத்து விட்டுப் போய் விட்டான். அந்தக் கூண்டில் ஒரு புலி மாட்டிக் கொண்டது.
அந்தக் கூண்டில் அகப்பட்ட புலி உறுமிக் கொண்டே நடை பயின்று கொண்டிருந்தது.
அப்போது அந்தக் காட்டு வழியே ஒரு வழிப்போக்கன் சென்று கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்து அந்தப் புலி, "ஐயா, தயவு செய்து என் பக்கம் வாருங்கள் "என்று அழைத்தது.
புலியைக் கண்டு பயந்து தூர விலகிச் சென்றவன் அதன் அழைப்பைக் கேட்டு கூண்டின் அருகே வந்தான்.
அவனைப் பார்த்த அந்தப் புலி, "ஐயா, எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. எனக்குக் கண்ணும் தெரியவில்லை. இந்த வேட்டைக்காரன் என்னைப் பிடித்துப் போய் துன்புறுத்துவான். தயவு செய்து என்னை விடுவித்து விட்டுப் போனால் உங்களுக்கு அந்தப் புண்ணியம் கிடைக்கும்" என்று பரிதாபத்துடன் உதவி கோரியது.
புலிக்கு உதவலாமென்று நினைத்த அந்த வழிப்போக்கன், அதன் முகத்தையும் கூர்மையான அதன் பற்களையும் பார்த்துப் பயந்து போனான்.
உடனே வழிப்போக்கன், "உனக்கு உதவலாம் . ஆனால், நீயோ கொடிய மிருகம். உன்னைக் கூண்டிலிருந்து வெளியேற்றி விட்டால் என்னைக் கொன்று தின்று விடுவாய்."என்று மறுத்தான்.
பின்னர் தன் வழியே போகத் தொடங்கினான்.
அப்போது அந்தப் புலி, "ஐயா, நான் சைவமாக மாறி ரொம்ப காலமாயிற்று. இப்போதெல்லாம் நான் மனிதர்களைத் தின்பதில்லை. என்னை வெளியே விட்டுப் பாருங்கள் ஐயா. அப்போதுதான் தெரியும் நான் எவ்வளவு நல்லவன் என்று உங்களுக்குத் தெரியும்" எனக் கெஞ்சியது.
தயங்கி நன்ற வழிப்போக்கனிடம் அது கெஞ்சியது. பின்னர், "உன்னைத் தின்னமாட்டேன்" என்று சத்தியம் செய்தது.
அதன் தவிப்பைப் பார்த்த அந்த வழிப்போக்கன் பாவமாயிருக்கிறதே என்று எண்ணியபடி புலியின் சத்தியத்தை நம்பி அந்தக் கூண்டிலிருந்து அதை விடுவித்தான்.
வெளியே வந்த புலி, ஒரே பாய்ச்சலில் பாய்ந்து அந்த வழிப்போக்கனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டது.
அவன் பயந்து அலறினான்.
"புலியே, என்னைத் தின்னமாட்டேன் என்று நீ சத்தியம் செய்தை நம்பித்தானே உன்னை விடுவித்தேன். ஆனால், இப்போது என்னையேக் கொல்ல வருகிறாயே..." என்றான் அவன்.
"அப்பாவி மனிதனே, பட்டினியாய் இருப்பவர் முன் உணவு இருக்கும் போது, அதை உண்ணாமல் இருப்பது முட்டாள்தனம் அல்லவா? இது கூட உனக்குத் தெரியவில்லையே?" என்றது புலி.
"புலியே, நீ செய்வது நியாயம் என்று யாராவது சொன்னால் நான் உனக்கு உணவாகிறேன்." என்று நடுங்கியவாறே அவன் சொன்னான்.
அப்போது ஒரு நரி அந்த இடத்துக்கு வந்தது.
நரியைப் பார்த்த வழிப்போக்கன் புலியிடம், "இந்த நரியிடம் நியாயம் கேட்போம்" என்றான்.
புலி "நரி நம் இனத்தைச் சேர்ந்ததுதானே. இது நமக்குச் சாதகமாகத்தான் சொல்லும்” என எண்ணிக் கொண்டு நரியிடம் நியாயம் கேட்க சம்மதித்தது.
அருகே வந்த நரியைப் பார்த்த புலி அதிகாரத்துடன், "நரியாரே, நீங்களே எனக்குச் சரியான நியாயம் சொல்லுங்கள். நான் கூண்டுக்குள் இருந்தேன், இந்த மனிதன் வெளியே போய்க் கொண்டு இருந்தார். இவரிடம் என்னை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவர் என்னை வெளியில் வந்து கொன்று விடக் கூடாது என்று கேட்டார். நானும் அதற்குச் சம்மதித்துச் சத்தியம் செய்து கொடுத்தேன். அவர் என்னை விடுவித்தார். என் கண் எதிரே நல்ல உணவாக இவர் இருக்கும் போது, அதை விடலாமா? அதனால்தான் இவரைப் பிடித்து வைத்திருக்கிறேன். இவரை நான் உணவாக்கிக் கொள்வது சரிதானே..?” என்றது.
நரி வழிப்போக்கனைப் பார்த்தது. அவன் பயத்தில் இருந்தான்.
நரி புலியைப் பார்த்து, “புலியாரே, நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை. இங்கு யார் கூண்டில் இருந்தது? யார் வெளியில் இருந்தது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்கு வயதாகிவிட்டதால் சரிவர புரியமாட்டேங்குது” என்றது.
புலி பொறுமையிழந்து உறுமியது.
அதைக்கண்டு பயப்படுவது போல் பாசாங்கு செய்த நரி, "புலியாரே, என்னை மன்னியுங்கள் எனக்கு வயதாகி விட்டதால் எனக்கு மறதியும் அதிகமாக இருக்கிறது. புலியாரே தாங்கள் எங்கு இருந்தீர்களோ அங்கு சென்று நின்று சொல்லுங்கள்” என்றது.
புலி உடனே கூண்டுக்குள் சென்று நின்று கொண்டு, "இதோ பார், நான் இங்குதான் இருந்தேன். இந்த மனிதன்..."என்று நரிக்கு தன்னுடைய தரப்பை விளக்கமாகச் சொன்னது.
நரி அந்த வழிப்போக்கனிடம், "புலியார் உள்ளே இருக்கும் போது கூண்டுக் கதவு திறந்திருந்ததா? மூடியிருந்ததா?” என்று கேட்டது.
வழிப்போக்கன், “நரியாரே, கூண்டின் கதவு மூடியிருந்தது” என்றான்.
உடனே நரி, “அப்படியானால், கூண்டை மூடி வையுங்கள்” என்றது.
வழிப்போக்கனும் கூண்டை மூடினான்.
நரி, "அய்யா, கொடியவர்களைக் கண்டால் ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாதா? உங்களிடம் “துஷ்டரைக் கண்டால் தூர விலகு "என்ற பழமொழி கூட இருக்கிறதே... அப்படியிருக்க இப்படிப் புலியைக் காப்பாற்றுகிறேன் என்று அதனிடம் மாட்டிக் கொண்டீர்களே...! இனியும் இப்படி இருக்காதீர்கள்... நீங்கள் உங்கள் வழியில் போங்கள்...” என்றபடி காட்டுக்குள் ஓடிவிட்டது.
“கொடியவருக்கு உதவி உயிரை இழக்கத் தெரிந்தேன். நல்லவேளை நரியின் உதவியால் தப்பித்தேன்” என்று எண்ணியபடி அங்கிருந்து சென்றான் அந்த வழிப்போக்கன்.
“அறியாமை, அவசரம், ஆணவத்தால் மீண்டும் கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே... நம்மினம்தானே என்று எண்ணி நரியின் பேச்சைக் கேட்டு மாட்டிக் கொண்டோமே” என்று எண்ணியபடி கூண்டுக்குள் வளைய வந்தது அந்தப் புலி.