ஒரு காட்டில் ஒரு தாய் முள்ளம் பன்றியும் அதன் குட்டியும் வசித்து வந்தன. குட்டி முள்ளம் பன்றி மிகவும் துருதுருவென இருக்கும். அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருக்கும். ஒரு நாள் அது காட்டில் உள்ள மற்ற விலங்குக் குட்டிகளுடன் விளையாடச் சென்றது.
மற்ற விலங்கு குட்டிகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தன.
முள்ளம் பன்றிக் குட்டி அங்கே சென்று, "என்னையும் விளையாட சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று வேண்டியது.
மற்ற குட்டிகளும் அதை விளையாடச் சேர்த்துக் கொண்டன.
எல்லா விலங்குக் குட்டிகளும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தன. முள்ளம் பன்றிக் குட்டி ஓடிப் பிடித்து விளையாடும் போது அதன் முட்கள் மற்ற குட்டிகள் மீது குத்தியது. இதனால் மற்ற குட்டிகள் முள்ளம் பன்றிக் குட்டியிடம் "உன்னுடைய முட்கள் எங்கள் மேல் குத்துகிறது. அதனால் எங்களுடன் விளையாட வேண்டாம்." என்று கூறின.
அதற்கு முள்ளம் பன்றிக் குட்டி "நான் உங்கள் மேல் குத்தாமல் விளையாடுகிறேன். என்னை விளையாட்டிலிருந்து நீக்க வேண்டாம்" என்று கேட்டது.
ஆனாலும் அதற்கு மற்ற குட்டிகள் சம்மதிக்கவில்லை.
இதனால் மிகவும் மன வருத்தம் அடைந்த முள்ளம் பன்றிக் குட்டி சோகமாக வீடு திரும்பியது.
அம்மாவிடம் வந்து அழுதது. அது தன் அம்மாவிடம் "அம்மா எனக்கு இந்த முட்கள் வேண்டாம். எல்லாவற்றையும் வெட்டி விடு" என்று கூறியது.
அதற்கு அதன் அம்மா "நீ அப்படிச் சொல்லக் கூடாது. இயற்கையில் கிடைத்துள்ள அந்த முட்கள்தான் நமக்கு அழகு. நம்மை எதிரிகள் யாராவது தாக்க வந்தால் நாம் அந்த முட்களால் அவர்களைக் குத்தித் தப்பித்து கொள்ளலாம்" என்றது.
ஆனால் குட்டி அதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை. "அதெல்லாம் கிடையாது. எனக்கு இப்போதே எனது முட்களை வெட்டி விடு" என்று அடம் பிடித்தது.
அதற்கு அதன் அம்மா "நான் அந்த முட்களை வெட்டி விட்டு விடுவேன். ஆனால் திரும்பி வேண்டுமென்றால், அது உடனடியாக கிடைக்காது" என்றது.
"அதனால் பரவாயில்லை" என்றது குட்டி.
தாயும் தன் குட்டியின் ஆசைப்படியே அதன் முட்களை வெட்டி விட்டது.
முட்களைக் கத்தியால் சரித்து விட்ட பின் முள்ளம் பன்றிக் குட்டி மொழு மொழுவென இருந்தது. உடனே முள்ளம் பன்றிக் குட்டி மீண்டும் தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றது. மொழு மொழுவென இருந்த முள்ளம் பன்றிக் குட்டியைப் பார்த்தவுடன் எல்லாக் குட்டிகளும் கொல்லெனச் சிரித்து விட்டன.
உடனே கோபம் கொண்ட முள்ளம் பன்றிக் குட்டி "நீங்கள் எல்லாரும் குத்துகிறது என்று சொன்னதால்தான், நான் என் அம்மாவிடம் சொல்லி முட்களை வெட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் இப்படிச் சிரித்தால் எனக்குக் கோபம் வரும்" என்று கூறியது.
உடனே மற்ற குட்டிகள் "சேச்சே, அப்படியெல்லாம் இல்லை. இப்போது நீ மிகவும் அழகாக இருக்கிறாய்" என்று கூறி சிரித்துக் கொண்டன.
"உன்னை நாங்கள் மறுபடியம் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறோம்." என்று கூறின.
முள்ளம் பன்றிக் குட்டி மொழு மொழுவென இருந்ததால் எல்லாக் குட்டிகளும் அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தன. பிறகு ஒரு குரங்கு குட்டி அதைக் கிள்ளி, கிண்டல் செய்தது. மீண்டும் கோபம் கொண்ட முள்ளம் பன்றிக் குட்டி, குரங்குக் குட்டியுடன் சண்டைக்கு சென்றது. இப்படியாகச் சண்டை அதிகரித்தது.
இதனால் மிகவும் மன வருத்தம் அடைந்த முள்ளம் பன்றிக் குட்டி, மீண்டும் சோகமாக வீடு திரும்பியது.
அதைப் பார்த்த தாய் முள்ளம் பன்றி, குட்டியைப் பார்த்து "ஏன் மிகவும் சோகமாக வீடு திரும்பி விட்டாய்?" என்று கேட்டது.
முள்ளம் பன்றிக் குட்டி, நடந்ததைக் கூறியது.
உடனே அதன் அம்மா "இதற்குத்தான் நான் முள்ளை எல்லாம் வெட்ட வேண்டாம் என்று கூறினேன்" என்றது.
அப்போது முள்ளம் பன்றிக் குட்டி, "எனக்கு மறுபடியும் எனது முட்கள் வேண்டும். எப்போது அவை வளரும்?" என்று கேட்டது.
அதன் அம்மா "அவை வளர ஒரு மாதம் வரை ஆகும்" என்றது.
அதற்குக் குட்டி "ஐயோ, அது வரை நான் என்ன செய்வது?" என்று வருத்தப்பட்டது.
அதன் அம்மா "அது வரை விளையாட எங்கும் போக வேண்டாம். வீட்டில் பாடம் படித்துக் கொண்டு சும்மா இரு" என்றது.
இப்படியாக ஒரு மாதம் ஓடியது. அதற்குள் குட்டிக்கு முட்கள் மீண்டும் வளர்ந்து விட்டன. மறுபடியும் முள்ளம் பன்றிக் குட்டி தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றது. இப்போது மற்ற குட்டிகள் அதைப் பார்த்து "மீண்டும் நீ முட்களுடன் வந்து விட்டாயா? நீ எங்களுடன் விளையாடினால் உன் முட்கள் எங்கள் மேல் குத்தும்" என்றன.
மீண்டும் கோபம் கொண்ட முள்ளம் பன்றிக் குட்டி, "என்ன நீங்கள் எல்லாம் விளையாடுகிறீர்களா? முள் இல்லாமல் வந்தால் கிண்டல் செய்து என்னைக் கிள்ளுகிறீர்கள். முட்களுடன் வந்தால் குத்தும் என்கிறீர்கள். இப்போது என்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறீர்களா? அல்லது எல்லாரையும் எனது முள்ளால் நன்றாகக் குத்தி விடட்டுமா? " என்று அதட்டியது.
இதைப் பார்த்துப் பயந்த மற்ற குட்டிகள் அதை விளையாட்டுக்குச் சேர்த்துக் கொண்டன. இப்போது முள்ளம் பன்றிக் குட்டி தனது நண்பர்களுடன் விளையாடிச் சந்தோசமாக நாட்களைக் கழித்தது.