மாம்பழச் சிங்கக் கவிராயர் தன் சிறு வயதிலேயே தன் பார்வையை இழந்து விட்டார். இருப்பினும், தன்னுடைய முயற்சியால் வடமொழியிலும், தமிழ் மொழியிலும் நல்ல புலமை பெற்றார்.
அவருடைய புலமையை மதித்து இராமநாதபுரம் மன்னர்கள் பொன்னுச்சாமி, முத்துராமலிங்க சேதுபதி ஆகியோர் அவரை அரசவைப் புலவர்களாக வைத்துக் கொண்டனர்.
ஒருநாள் விசுவநாத பாரதியார் எனும் புலவர் அவைக்கு வந்தார்.அவர், தாம் அரசர் பொன்னுச்சாமியைப் பாராட்டி நூறு பாடல்கள் எழுதியிருப்பதாகவும், அவற்றைச் சபையில் அரங்கேற்றம் செய்ய விரும்புவதாகவும் சொன்னார்.
அவருக்குச் சபையிலிருந்த மாம்பலச் சிங்கக் கவிராயரைக் கண்டு அவருக்குள் ஒரு அச்சம் வந்தது. எனவே, அவர் சபையில் இருப்பது சரியல்ல எனும் பொருள்பட “அவைக்களம் மங்களகரமாக இருந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
மன்னர் பொன்னுச்சாமிக்கு எதுவும் புரியவில்லை. சபையைச் சுற்றிலும் பார்த்தார். “சபை மங்களகரமாகத்தான் இருக்கிறது. நீங்கள் உங்கள் நூலை அரங்கேற்றம் செய்யலாம்” என்றார்.
ஆனால், மாம்பலச் சிங்கக் கவிராயர் விசுவநாத பாரதியாரின் பழிப்பைப் புரிந்து கொண்டு விட்டார். அவருடைய அகந்தையை அடக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்.
விசுவநாத பாரதியார் தம் நூலின் நூறு பாடல்களையும் ஒரு தடவை படித்து முடித்து விட்டு, பிறகு ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லத் தொடங்கினார்.
அப்பொழுது மாம்பழச் சிங்கக் கவிராயர் எழுந்து, “இந்நூல் ஏற்கனவே எம்மால் ஒரு செல்வரிடம் அரங்கேற்றம் செய்யப்பட்டு, அவரிடம் நாம் செல்வமும் பெற்றோம். நாம் இயற்றிய நூலை இவர் தம் நூல் என்று கூறுகிறார். எனவே, மன்னர் இதுகுறித்து விசாரித்துப் புலவருக்குத் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும்” என்றார்.
இதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். விசுவநாத பாரதியாருக்குக் கடுங்கோபம் ஏற்பட்டது.
உடனே அவர், “கவிராயர் கூறுவது அத்தனையும் பொய். இது இவர் இயற்றிய நூல் என்றால், இவற்றிலிருந்து சில செய்யுள்களை மட்டும் இவர் சொல்லட்டும்” என்றார்.
கவிராயர், “சில செய்யுள்கள் என்ன? நூலிலுள்ள நூறு செய்யுள்களையும் இப்போதே முழுமையாகச் சொல்கிறேன்” என்று நூறு செய்யுளையும் சொல்லி முடித்தார்.
மன்னர் பொன்னுச்சாமிக்கோ ஒன்றும் விளங்கவில்லை. விசுவநாத பாரதியாரைப் பார்த்தால் செய்யுளைத் திருடி எழுதியதைப் போல் தோன்றவில்லை. ஆனால் கவிராயரோ இந்த நூலைத் தானே இயற்றியதாகவும், நூறு பாடல்களையும் அப்படியே சொல்லி முடித்து விட்டார்.என்னசெய்வது என்று புரியாமல் விழித்தார்.
மன்னர் சிறிது நேரத்துக்குப் பின்பு, இந்த விசயத்தில் மாம்பழச் சிங்கக் கவிராயரிடமே கேட்கலாம் என்று முடிவு செய்தார்.
உடனே மன்னர், “மாம்பழச் சிங்கக் கவிராயரே, இந்தப் பாடலை உண்மையில் யார் இயற்றியது? என்று தாங்களே கண்டறிந்து சொல்ல வேண்டும்” என்றார்.
மாம்பலச் சிங்கக் கவிராயர், “இந்த நூலை இயற்றியது நான் என்று சொன்னது உண்மையில் தவறானது. இந்த நூலை விசுவநாத பாரதியார்தான் இயற்றியிருக்கிறார்” என்றார்.
மன்னர், “அப்படியானால், இந்த நூறு பாடல்களையும் தாங்கள் அப்படியே தங்கு தடையின்றி சொன்னீர்களே” என்றார்.
“அதில் கஷ்டம் ஏதுமில்லை அரசே, புலவர் நூறு பாடல்களுக்கான விளக்கத்தைச் சொல்வதற்கு முன்பு நூறு பாடல்களையும் சொன்னபோதே அவை என் மனத்தில் பதிந்து போய் விட்டன்” என்றார் கவிராயர்.
“அப்படியெனில், இந்தப் பாடல்கள் அனைத்தையும் நீங்கள் இயற்றியதாக ஏன் சொல்ல வேண்டும்?” என்று கேட்டார் மன்னர்.
“விசுவநாத பாரதியாரின் அகந்தையை அடக்குவதற்காகத்தான். பார்வையில்லாதவன் நான் இங்கு இருக்கக் கூடாது என்று என்னைப் பழிப்பதற்காக, தொடக்கத்தில் அவர், “அவை மங்களகரமாக இருக்கட்டும்” என்று முதலில் சொன்னார். அவருடைய தவறான எண்ணத்தைப் போக்கவே நான் இப்படிச் செய்தேன்” என்றார் கவிராயர்.
உடனே விசுவநாத பாரதியார் மாம்பழச் சிங்கக் கவிராயரின் காலில் விழுந்து, “கவிராயரே, நான் செய்த தவறை மன்னித்தருள வேண்டும்” என்று மன்னிப்பு கோரினார்.