இந்திரப் பிரஸ்த நகரம். இராஜசூர்ய யாகம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
யாகம் முழுமையடைய வேண்டுமானால் இமயமலையில் தவம் செய்யும் புருஷா மிருகம் என்கிற ஒரு விலங்கை அழைத்து வர வேண்டும் என்றார் கண்ணன்.
தருமத்துக்கும் சிவபக்திக்கும் கட்டுப்பட்ட அந்த மிருகத்தை அழைத்து வர சிவபக்தனான பீமனே பொருத்தமானவன் என்று யோசனையும் தெரிவித்தார்.
ஆனால் மனித மாமிசம் அதற்கு விருப்பமானது என்று எச்சரிக்கையும் செய்தார்.
பீமன் இமயமலைக்குப் புறப்பட்டான். புருஷா மிருகத்திடம் கண்ணனின் வேண்டுகோளைச் சொன்னான். புருஷா மிருகமும் ஒப்புக் கொண்டது. கூடவே ஒரு நிபந்தனையும் போட்டது.
பீமன் முன்னால் நடக்க வேண்டும், அரை மைல் தள்ளி அந்த விலங்கு பின் தொடரும். அரை மைலுக்குள் அது வந்து விட்டால் பீமனை அது சாப்பிட்டு விடலாம். பீமனும் இதற்கு சம்மதித்தான்.
நடைப் போட்டி துவங்கியது. பலசாலியான பீமனால் புருஷா மிருகத்தை வெற்றி கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் தொட்டு விடும் போலிருந்தது.
புருஷா மிருகம் சிவபக்தி அதிகமுடையது என்பதுடன் சிவலிங்கத்தைப் பார்த்தால் அதற்கு பூஜைகள் செய்து விட்டு அதன் பின்புதான் அதன் வேலையைத் தொடரும் என்பதைக் கேள்விப் பட்டிருந்த பீமன் ஒரு பை நிறைய சிவலிங்கத்தை எடுத்து வந்திருந்தான்.
சிவனை மனதில் தியானித்தபடி ஒரு சிவலிங்கத்தை அங்கு வைத்து விட்டு ஓடினான்.
வழியில் சிவலிங்கத்தைப் பார்த்த புருஷா மிருகம் சிவபூஜை செய்தது.
இப்படியே மிருகம் தன்னை நெருங்கும் போதெல்லாம். ஒரு சிவலிங்கத்தை அங்கே வைத்தான். மிருகம் சிவபூஜை செய்து முடிப்பதற்குள் வெகுதூரம் போய் விடுவான்.
யாகசாலையினை நெருங்கும் போது கொண்டு வந்திருந்த சிவலிங்கம் தீர்ந்து விட்டது.
ஒரு காலை யாகசாலைக்குள் வைத்து விட்ட பீமனின் இன்னொரு காலை மிருகம் பற்றிக் கொண்டது.
பீமனின் குரல் கேட்டு எல்லோரும் அங்கு கூடி விட்டனர்.
யாகசாலையில் கால் வைத்து விட்டதால் தான் வெற்றி பெற்று விட்டதாக பீமன் கூற, வெளியில் இருந்த காலைப் பிடித்து விட்டதால் வெற்றி தனக்கே என்று அந்த மிருகமும் வாதிட்டது. இதற்கான தீர்ப்பு அளிக்கும் உரிமை தருமரிடம் வந்தது.
தருமர், பீமனின் ஒரு காலை மிருகம் பிடித்து விட்டதால் பீமனின் பாதி உடலை அதற்கு இரையாக்கிக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார்.
தருமரின் நேர்மையான இத்தீர்ப்பைக் கண்டு வியந்த அந்த புருஷா மிருகம் பீமனை விட்டு விட்டது. யாகம் முழுமையடையவும் ஒத்துழைத்தது.