முருகன் கண்ணுச்சாமி வீட்டில் அனைத்துக் கணக்குகளையும் பார்த்து அவரது நிர்வாகியாக வேலை செய்து வந்தான்.
கண்ணுச்சாமியின் வீட்டில் அவன் எந்த வேலையாக இருந்தாலும் செய்தான். அந்த வேலை அவனுடையதாக இல்லாவிட்டாலும் கூட தன் முதலாளியின் பெயரில் அவன் வைத்திருந்த நம்பிக்கையில் அந்த வேலையை முடித்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தில் இழுத்துப் போட்டு செய்வான்.
அவனுடைய உழைப்பில் முதலாளி முன்னுக்கு வந்து கொண்டிருந்தார். முதலாளியும் முருகனின் வேலையால் தான் முன்பிருந்ததை விட மிகவும் உயர்ந்த நிலைக்கு வந்து விட்டிருந்ததை நினைத்து மகிழ்ந்திருந்தார். கண்ணுச்சாமியின் முன்னேற்றத்திற்கு முருகனின் உழைப்பும், அறிவும்தான் காரணம் என்று ஊரிலிருக்கும் பலரும் பேசத் துவங்கினர்.
இந்நிலையில் முருகனை அழைத்தார். "என்னிடம் நிறைய பேர் வேலை பார்த்தாலும் என்னுடைய நம்பிக்கைக்குரிய ஆளாக நீ மட்டுமே இருக்கிறாய். இனி நான் செய்யும் வேலை அனைத்தையும் நீயே பார்க்க வேண்டும். உனக்கு முதலாளி போன்ற அந்தஸ்து அளிக்கிறேன்." என்றார்.
தன் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாரே என்று முருகனும் மகிழ்ச்சி அடைந்தான். நேரம் பார்க்காமல் மேலும் கூடுதலாக பல வேலைகளைத் தேடித் தேடிச் செய்யத் துவங்கினான். முருகன் தனது குடும்பத்தைப் பற்றியோ தனது வீட்டைப் பற்றியோ நினக்காமல் கண்ணுச்சாமியின் முன்னேற்றத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான்.
கண்ணுச்சாமியின் வேலைகளை முருகனே பார்த்துக் கொண்டதால் கண்ணுச்சாமியின் கவனம் வேறு பக்கம் திரும்பியது. தன் உதவிக்கு வைத்திருந்த சிலருடன் சேர்ந்து தவறான பாதையில் செல்லத் துவங்கினார். அவர்களின் சொல்படி தனது பாதையை மாற்றிக் கொண்டு நடக்கத் துவங்கினார்.
அவர்களும் "முதலாளி நீங்க இவ்வளவு முன்னேறியதற்கு முருகன் தான் காரணம் என்று இந்த ஊரில் இருக்கும் பலரும் சொல்கிறார்கள். இது உங்களுக்கு நல்லதில்லை. உங்களைப் பற்றிப் பேசாமல் உங்களிடம் வேலை பார்க்கும் முருகனைச் சொல்கிறார்களே. அவனை வேலையை விட்டு எப்படியாவது நிறுத்தி விடுங்கள். அப்போதுதான் இந்த சொத்துக்களை நீங்க சம்பாதித்தது என்பார்கள். மேலும் உங்கள் சொத்தை அவனுடைய சொத்து என்று சொல்வதற்கு முன்பு அவனை வேலையை விட்டு அனுப்பி விடுங்கள்" என்று கண்ணுச்சாமியிடம் தூபம் போட்டு விட்டனர்.
கண்ணுச்சாமி நிறைய படித்தவராக இருந்தாலும் உண்மையை உணரும் தன்மை அவரிடம் இல்லை. தன்னுடைய முன்னேற்றத்திற்குக் காரணம் என்று இந்த ஊரே சொல்லிக் கொண்டிருக்கும் முருகனை வேலையை விட்டு நிறுத்தி விட வேண்டுமென்று முடிவு செய்தார். முருகனைத் தான் வேலையை விட்டு அனுப்பி விட்டால் ஊரில் அவனுக்கு மேலும் நல்ல பெயர் கிடைத்து விடும், தனக்கும் கெட்ட பெயராகி விடும் என்பதால் முருகனே வேலையை விட்டுப் போகும்படி செய்ய வேண்டுமென்று முடிவு செய்தார்.
மறுநாள் தனது உதவியாளராய் இருந்தவர்களுக்கு முருகனைக் காட்டிலும் அதிகமான சம்பளம் அளிக்கத் துவங்கினார்.
முருகன் தன் முதலாளியிடம் சென்று," அய்யா, உங்கள் வேலை அனைத்தையும் நான் பார்க்கிறேன். எனக்கு அதற்கு தனியாக சம்பளம் எதுவும் வழங்கவில்லை. மேலும், பத்து வருடங்களுக்கு மேலாக வேலை செய்து வரும் எனக்கு குறைவான சம்பள உயர்வும் வேலை எதுவும் செய்யாமல் உங்களுடன் இருக்கும் சிலருக்கு மட்டும் என்னைக் காட்டிலும் அதிக சம்பளம் தருகிறீர்களே? அதுவும் அவர்கள் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் கூட ஆகவில்லையே..."என்று கேட்டான்.
"அவங்க காலையிலிருந்து இரவு வரை என்னுடன் இருக்கிறார்கள். என்னுடனேயே இருக்கும் அவர்களுக்கு நான் இன்னும் அதிகமாகக் கூட சம்பளம் தருவேன். அதையெல்லாம் நீ கேட்கக் கூடாது. போ... போ..." என்று விரட்டினார்.
தனது சொந்த வேலையெல்லாம் தவிர்த்து விட்டு முதலாளியின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பாடுபட்ட தன்னை இப்படி அவமானப்படுத்தி விட்டதை நினைத்தபடியே வீட்டிற்குச் சென்ற முருகனுக்கு அன்றிரவு முழுக்க தூக்கமே வரவில்லை.
மறுநாள் முதலாளியைச் சந்தித்துத் தான் வேலையை விட்டு நின்று விடப் போவதாகச் சொன்னான்.
அதைப்பற்றி அவர் சிறிது கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. முருகனும் அந்த வேலையை விட்டு நின்று விட்டான்.
ஊரிலிருப்பவர்கள் கண்ணுச்சாமியிடம் முருகன் வேலையை விட்டுப் போய் விட்டது குறித்துக் கேட்ட போது, "நான் அவனுக்கு முதலாளி அந்தஸ்து கொடுத்திருந்தேன். அப்படியிருந்தும் அவனாகவேப் போயிட்டான்." என்று சொன்னார்.
முருகனும் தன்னுடைய உழைப்பு பத்து வருடங்கள் ஒரு முட்டாள் முன்னேற்றத்திற்காக வீணாகப் போய் விட்டதே என்று வருத்தப்பட்டு அந்த ஊரிலேயே இருக்கப் பிடிக்காமல் வெளியூருக்குச் சென்று விட்டான்.
முருகன் பார்த்து வந்த வேலைகளைப் பார்க்கத் தகுதியான ஆட்கள் இல்லாததாலும் உதவியாளர்களாக இருந்தவர்கள் காட்டிய வழியில் எல்லாம் கண்ணுச்சாமி சென்றதாலும் கண்ணுச்சாமி தனது சொத்துக்களைப் பராமரிக்க முடியாமல் ஒவ்வொரு சொத்தாக, அனைத்தையும் இழந்து தெருவிற்கே வந்து விட்டார்.
"துவக்கத்திலிருந்து நம் மேல் நம்பிக்கையுடனும் அனைத்து வேலையையும் ஆர்வத்துடனும் செய்யும் முருகனை ஊக்கப்படுத்தாமல் விரட்டி விட்டேனே... அடுத்தவர் பேச்சைக் கேட்டு அவமானப்படுத்தி அனுப்பி விட்டேனே... அதனால்தான் என்னுடைய நிலை இப்படி மோசமாகப் போய்விட்டது" என்று கண்ணுச்சாமி இன்றும் பலரிடம் ஊருக்குள் புலம்பிக்கிட்டுத் திரிகிறாராம்.
"தகுதியானவர்களை ஆயிரமாயிரமாகக் கொட்டிக் கொடுத்தாவது நம்மை விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுபோல் தரமில்லாதவர்களை ஆயிரமாயிரமாகக் கொட்டிக் கொடுத்தாவது ஒதுக்கி விட வேண்டும்" என்பது தெரியாமல் பல கண்ணுச்சாமிகள் தங்களையும் இழந்து, தங்கள் சொத்துக்களையும் இழந்து பைத்தியங்களாய்த் திரிவதை உங்கள் ஊரிலும் பார்க்கலாம்.