காட்டு வழியே சென்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கனைக் கண்ட புலி ஒன்று துரத்தியது.
தலை தெறிக்க ஓடத் துவங்கினான். மூச்சு இறைத்தது. அதிக தூரம் ஓட முடியாது என்பதால் அங்கிருந்த ஆலமரத்தைப் பார்த்து அதில் ஏறத் துவங்கினான். பாதி தூரம் ஏறிய அவன் அந்த மரத்தின் மேலிருந்த கரடியைப் பார்த்தான். பின் மேலே ஏறத் தயங்கினான்.
கரடி, "பயப்படாதே, மனிதா! மேலே ஏறி வா. உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்" என்றது.
வேறு வழியில்லாததால் அந்த வழிப்போக்கனும் மரத்தில் ஏறி ஒரு கிளையில் அமர்ந்து கொண்டான்.
புலிக்கு மரமேறத் தெரியாததால் மரத்தடியில் நின்று சீறிக் கொண்டிருந்தது.
கரடி, " மனிதா, நிறைய நேரம் விழித்திருக்க முடியாது. முதலில் நீ தூங்கு. நான் காவலிருக்கிறேன். பிறகு நான் தூங்குகிறேன். நீ காவல் காக்கலாம்" என்றது.
வழிப்போக்கனும் அசதியாக இருக்கவே வசதியான கிளையொன்றில் படுத்து உறங்கி விட்டான்.
கீழேயிருந்த புலி, "கரடியே! மனிதன் நம் இருவருக்கும் பகைவன். உன்னை அடித்து வித்தை காட்டி சம்பாதிப்பவன். அவனைக் கீழே தள்ளி விடு. இருவரும் சேர்ந்து அடித்துச் சாப்பிடலாம்." என்றது.
"பாவங்களில் கொடிய பாவம் நம்பிக்கைத் துரோகம். அதை நான் செய்ய மாட்டேன்." என்று உறுதியாகக் கூறி விட்டது கரடி.
புலியும் கரடியை விடாமல் மயக்கிக் கேட்டுப் பார்த்தது. கரடி சம்மதிக்கவில்லை.
பாதி இரவில் வழிப்போக்கனை எழுப்பிய கரடி,"எனக்குத் தூக்கமாக வருகிறது. நான் சிறிது நேரம் தூங்கிக் கொள்கிறேன். நான் உருண்டு விழுந்து விடாமல் பார்த்துக் கொள்" என்று சொல்லி விட்டுத் தூங்கியது.
மனிதனிடம் புலி, "நான் உன்னைத் துரத்தி வந்தது உண்மைதான். நான் மிகவும் பசியோடிருக்கிறேன். கரடிக்கு வயிறு மந்தமாக இருப்பதால் தூங்கி எழுந்ததும் உன்னைச் சாப்பிட்டு விடப் போகிறதாம். நீ முந்திக் கொண்டு அதைத் தள்ளிவிடு. கரடி எத்தனை நாள் பசியோடிருக்கும்? அது உன்னைத் தின்று விடும். அதற்கு முன்பு புத்திசாலியாக அதைத் தள்ளி விட்டு நீ பிழைத்துக் கொள்" என்றது.
மனிதனுக்கு புலி சொல்வது சரியென்று தோன்றியது.
அவன் கரடியைப் பிடித்துத் தள்ளினான். நல்ல வேளை! கரடியின் பெரிய உடல் ஒரு அடர்ந்த மரக்கிளையில் சிக்கியது. நிலைமையைப் புரிந்து கொண்டது கரடி.
"நன்றி கெட்ட மனிதனே, புலியின் சாகசப் பேச்சில் மயங்கி உன்னைக் காப்பாற்றிய என்னைப் புலிக்கு இரையாக்கத் தெரிந்தாயே... பொழுது விடியும்வரை உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். புலி போனதும் இறங்கி ஓடிப் போய் விடு" என்றபடி மேலே ஏறி வந்து அமர்ந்தது அந்தக் கரடி.
வழிப்போக்கன் அவமானத்தால் தலை குனிந்தான்.
காலையில் புலி அந்த இடத்தை விட்டுச் சென்றதும் அவனும் மரத்தை விட்டு இறங்கிச் சென்றான்.
இப்படித்தான் நம்பிக்கைத் துரோகம் செய்வது சில மனிதர்களுக்கு இயல்பாகப் போய் விட்டது. ஆனால் அவர்களுக்கு மிருகங்களுக்கு இருக்கும் அறிவு கூட இருப்பதில்லை.