ஒரு நாட்டில் மழை இல்லாததால் வறுமை சூழ்ந்தது. மக்கள் உணவு, குடிதண்ணீர் இல்லாமல் மிகவும் வாடினார்கள்.
அந்த நாட்டின் மன்னன் மிகவும் நல்லவன். மக்கள் வாடுவதைக் கண்டு அவனும் வாடினான்.
அந்த நாட்டு அரசவை சோதிடர், “காளி தேவிக்குப் பூசை செய்தால் மழை வரும்“ என்று சொன்னதும், மன்னனும் மாபெரும் பூசை செய்தான்.
மூன்று நாள் பூசை. முடிந்தது. அன்று இரவு வானத்தில் கொஞ்சம் கருமேகம் கூடியதைக் கண்டதும் மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர்.
இருந்தாலும் மன்னன் சற்று யோசித்தான். இந்த மழை பெய்து நிலம் ஈரமாகி பின்பு விதை விதைத்து, நாற்று வந்து வளர்ந்து அது பயிராகி அதன் பிறகு தான் பசிப்பிணி போகும். அதுவரை தன் நாட்டு மக்கள் படும் பாட்டை எண்ணி மனம் வருந்தி அப்படியே தூங்கிப் போனான்.
அப்பொழுது, தன்னை யாரோ அழைப்பது போல் குரல் கேட்டு விழிக்க, எதிரில் காளி தேவி நின்றிருந்தாள்.
மன்னனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. எழுந்து வணங்கினான்.
காளி, “மன்னனே நீ எனக்குச் செய்த பூசையால் மனம் மகிழ்ந்தேன். உனக்கு விருப்பமான வரத்தைக் கேள் தருகிறேன்“ என்றாள்.
மன்னனும் உடனே “தேவியே... என் நாட்டு மக்களுக்குப் பசியே எடுக்காத வரத்தைக் கொடு” என்று கேட்டான்.
காளியும் அவன் கேட்ட வரத்தைத் தந்து மறைந்தாள்.
மன்னன் உடனே தன் மந்திரியை அழைத்து நடந்ததை மகிழ்ச்சியோடு சொன்னான்.
மந்திரி சிறிது நேரம் பேசாமலிருந்தார். பின்னர், “அரசே, காளிதேவியிடம் நீங்கள் சரியில்லாத ஒரு வரத்தைக் கேட்டுவிட்டீர்கள்” என்றார்.
மன்னனுக்கு உடனே கோபம் வந்தது. “என்ன... நான் சரியில்லாத வரத்தைக் கேட்டேனா...? என் நாட்டு மக்கள் என்றும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. இனி அவர்களுக்குப் பசியே எடுக்காது. அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்“ என்றான்.
மந்திரியும் மன்னனின் கோபத்தைக் கண்டு பேசாமல் இருந்து விட்டார்.
சில நாட்கள் கழித்து ஒற்றர்களிடமிருந்து “மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்“ என்று செய்தி வந்திருந்தது.
இதனால் மன்னனும் மகிழ்ச்சியடைந்தான். இந்த மகிச்சி நிறைய நாட்கள் நீடிக்கவில்லை. அரண்மனைக்கு வேலைக்கு வரும் பணியாட்கள் குறைந்து விட்டார்கள். காவல் காப்பவர்களும் வரவில்லை. வீரர்களும் வரவில்லை. இன்னும் சில நாட்களில் மன்னனையும் அரசியையும் தவிர அரண்மனையில் வேறு யாருமே இல்லை என்ற நிலை வந்துவிடும் போலிருந்தது.
மந்திரி கூட வரவில்லை. இதைக் கண்ட மன்னனுக்குக் கோபம் பெருகியது.
பொறுமையிழந்த மன்னன், அவனே தேரைப் பூட்டிக் கொண்டு மந்திரியின் இருப்பிடம் சென்று மந்திரியிடம் நடந்தவைகளைச் சொன்னான்.
மந்திரியும் “நீங்கள் சொல்வது உண்மைதான் மன்னா. நம் நாட்டு மக்களுக்குப் பசியே எடுக்காததால் அவர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போய்விட்டது. மழை பொழிந்து தானே வளர்ந்த மரம் செடி கொடிகளின் பழங்கள் கூட கேட்பாரற்று கிடக்கிறது. வயலில் பயிரெல்லாம் முற்றிக் காய்கிறது. அதை வாங்க யாரும் இல்லாததால் பயிர் வயலிலேயே கிடந்து வீணாகிறது. மக்கள் தம் போக்கில் வாழுகிறார்கள். நாம் என்ன செய்ய முடியும்...?” என்றார் மந்திரி.
அப்பொழுது தான் மன்னன் தான் காளியிடம் கேட்ட வரத்தால் வந்த வினையை உணர்ந்தான்.
மனம் வருந்தித் திரும்பவும் காளியிடம் சென்று, “தான் தவறான வரத்தைக் கேட்டுவிட்டேன்” என்று சொல்லி அழுதவன் அப்படியே தூங்கி விட்டான்.
மறுநாள் கண்விழித்ததும் எதிரில் நின்றிருந்த மந்திரி, “மன்னா... நம் நாட்டில் நேற்று இரவு நல்ல மழை பொழிந்தது. வயலை உழுவதற்கு உழவர்கள் ஏருடன் செல்லும் கண்கொள்ளாக் காட்சியை வந்து பாருங்கள்“ என்று மகிழ்ச்சியுடன் சொல்லி அழைத்தார்.
குழப்பத்துடன் எழுந்த மன்னன் சற்று நேரத்தில் தெளிந்தான். இது வரை நடந்தது எல்லாம் கனவு தான் என்று புரிந்ததும், தன்னைத் தானே நொந்து கொண்டான்.
தான் கனவில் கண்டது போல் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்? அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை...