மிகச் சிறந்த ஓவியர் அவர். அவரிடம் பல ஊர்களிலிருந்தும் மாணவர்கள் வந்து ஓவியப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு இளைஞன் தன் பயிற்சியை நிறைவு செய்தவுடன், ஆசிரியரான ஓவியரிடம் விடைபெற்றுக் கிளம்பிச் சென்றான்.
தான் கற்றுக் கொண்ட ஓவியத்திறன் குறித்து சுய மதிப்பீடு செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. அவன் தான் கற்றுக் கொண்டதைப் பயன்படுத்தி, நான்கு நாட்களில் ஒரு அழகிய ஓவியத்தை வரைந்தான். இந்த ஓவியம் சிறப்பாக இருக்கிறதா என்பது குறித்து, பிறரின் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. எனவே தனது ஓவியத்தை எடுத்துச் சென்று அந்த ஊரின் சந்தையின் மையப் பகுதியில் அனைவரின் பார்வையிலும் படும்படி வைத்திட முடிவு செய்தான்.
அந்த ஓவியத்தை ஒரு இடத்தில் மாட்டி, அதனருகில், “சிறப்பு பெற்ற ஓவியரிடம் ஓவியக்கலை குறித்து நல்ல பயிற்சி பெற்று வந்திருக்கிறேன். நான் கற்றுக்கொண்ட ஓவியக் கலை குறித்து எனக்கு ஒரு சுய மதிப்பீடு தேவைப்படுகிறது. இந்த ஓவியத்தில் தவறுகள் ஏதேனும் இருக்கலாம். அப்படி எங்காவது தவறு காணப்பட்டால் அந்த இடத்தில் தவறுக்கான ‘X’ குறியீட்டை இட வேண்டுகிறேன்” என்று எழுதி ஒரு பேனாவையும் அதில் கட்டி தொங்க விட்டுச் சென்றான். ஓவியம் குறித்த கருத்தை எழுதுவதற்காக ஒரு நோட்டையும் கட்டித் தொங்க விட்டிருந்தான்.
மாலை நேரம், தாம் வரைந்த ஓவியத்துக்கு மக்கள் என்ன மதிப்பீடு அளித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று அந்த இடத்துக்கு வந்தான். அங்கு அவனது ஓவியம் முழுக்க ‘X’ குறியீடுகளாக இருந்தன. அந்த நோட்டில் அவன் ஓவியத்தைப் பற்றிப் பல குறைகளை எழுதியிருந்தனர். சிலர், “இதெல்லாம் ஒரு ஓவியமா? இதைப் பொது இடத்தில் வேறு வைத்துக் கருத்து வேறு கேட்க வந்துவிட்டாய்…?” என்று மோசமாகவும் எழுதியிருந்தார்கள்.
இதைப் பார்த்த அவனுக்கு அழுகையே வந்து விட்டது. அழுதபடியே தனது ஓவிய ஆசிரியரிடம் சென்றான். தனது ஓவியம் இருக்கும் பரிதாப நிலையைக் காண்பித்து அழுதான்.
அந்த ஓவிய ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார். பின்னர், “நீ மிகச் சிறந்த ஓவியன். மற்றவர்களால் குறைகளே கண்டுபிடிக்க முடியாத ஓவியத்தை உன்னால் வரைய முடியும் என்று நான் நிரூபிக்கிறேன்” என்றார்.
அவனுக்கு ஓவியம் முழுக்க ‘X’ குறியீடுகளாக இருந்ததால் அவனுடைய திறன் மேலிருந்த நம்பிக்கையே போய் விட்டிருந்தது.
இருப்பினும் தனது ஆசிரியர் என்ன சொல்கிறார்? என பார்ப்போம் என்று அமர்ந்திருந்தான்.
அவர், “இளைஞனே, உன் கற்பனைத் திறத்தைப் பயன்படுத்தி நீ மறுபடியும் அதே ஓவியத்தை வரைந்து எடுத்து வா” என்றார்.
இளைஞன் அரைமனதுடன் ஒப்புக்கொண்டு செல்கிறான். அதே போல ஒரு ஓவியத்தை மேலும் நான்கு நாட்கள் பாடுபட்டு வரைந்து கொண்டு வந்தான்.
ஓவிய ஆசிரியர் அந்த ஓவியத்தை வாங்கிப் பார்த்து விட்டு, “சரி என்னுடன் வா!” என்று அவனை சந்தைக்கு அழைத்து சென்றார்.
அந்த ஓவியத்தை ஒரு இடத்தில் மாட்டி, அதனருகில், “சிறப்பு பெற்ற ஓவியரிடம் ஓவியக்கலை குறித்து நல்ல பயிற்சி பெற்று வந்திருக்கிறேன். நான் கற்றுக்கொண்ட ஓவியக் கலை குறித்து எனக்கு ஒரு மதிப்பீடு தேவைப்படுகிறது. இந்த ஓவியத்தில் தவறுகள் ஏதேனும் இருக்கலாம். அப்படி எங்காவது தவறு காணப்பட்டால் அந்த இடத்தில் இங்கிருக்கும் வண்ணங்கள் மற்றும் தூரிகையைப் பயன்படுத்தித் தவறைத் திருத்தம் செய்து உதவிட வேண்டுகிறேன் ” என்று எழுதி அதனருகில் தூரிகை மற்றும் வண்ணங்களை வைக்கச் சொன்னார்.
மாலை நேரம் அவனும் ஓவிய ஆசிரியரும் அந்த இடத்துக்கு மீண்டும் திரும்பி வந்தனர். ஓவியத்தை பார்த்த இளைஞனுக்கு மிகுந்த ஆச்சரியம். ஓவியம் எந்த இடத்திலும் திருத்தப்படவில்லை.
குருவுக்கு உள்ளுக்குள் தாம் எதிர்பார்த்தது மாதிரியே நடந்தது குறித்து மகிழ்ச்சி. இருந்தாலும் அவர் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.
“ஒருவேளை மக்களுக்குக் குறைகளை கண்டுபிடித்து அவற்றை திருத்தம் செய்ய ஒரு நாள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். இங்கே இந்த வார இறுதி முழுக்க இருக்கட்டும். நாம் அடுத்த வாரம் வந்து பார்க்கலாம். ஒருவேளை யாராவது திருத்தம் செய்யக்கூடும்…” என்று கூறிவிட்டு அவனை அழைத்து சென்றார்.
அடுத்த வாரம் வந்து பார்க்கிறார்கள். ஓவியம் எந்தவிதமான திருத்தமும் செய்யப்படாமல் அப்படியே இருந்தது. பல நாட்கள் வைத்துப் பார்த்தார்கள். அப்போதும் அப்படியே இருந்தது.
இளைஞன் நன்றியுடன் தனது குருநாதரின் கால்களில் வீழ்ந்தான்.
“குருவே என் திறமை மீது இப்போது எனக்கு முழு நம்பிக்கை வந்துவிட்டது. அதே போல இந்த உலகத்தையும் மக்களையும் நன்கு புரிந்து கொண்டேன். இனி அதற்கேற்றார்போல நடந்து கொள்வேன்!” என்றான்.
உலகத்திலேயே சுலபமான வேலை ஒருவர் பணியை விமர்சனம் செய்வது. ஆனால் அந்தப் பணியை செய்வது மிகமிகக் கடினமான ஒன்று என்பதை அவன் மட்டுமா புரிந்து கொண்டான்?