அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம். அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிகத் துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.
அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மேல் பட்டது. உடனே தமது தேரை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிட்சுவின் காலில் விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.
ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்குக் கவலை. "இந்த நாட்டின் மன்னன், ஒரு துறவியின் காலில் போய் விழுவதா? தனது தலையில் சூடியிருக்கும் முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!" என்ற நினைத்து உள்ளுக்குள் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.
அவர் அரண்மனைக்குச் சென்றதும் அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால், அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.
மன்னர் அமைச்சரிடம், “அமைச்சரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.
அமைச்சர் நாட்டின் படை வீரர்கள் சிலருடன் மூன்று தலைகளையும் கொண்டு வரச் சென்றார்.
ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது. புலித்தலைக்குச் சில நாட்கள் காட்டிற்குள் அலைய வேண்டி இருந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.
ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டித் தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.
மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்றுப் பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.
மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. பதிலுக்கு வேறு பொருட்கள் கிடைத்தன. புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருப்பு கொண்டு ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர்.
மன்னரிடம் மனிதத் தலை மட்டும் மிச்சமிருப்பதாக விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.
“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.
நாள் முழுக்க அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.
விஷயத்தைக் கேட்ட மன்னர் புன்சிரிப்புடன், “அமைச்சரே! நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.
அமைச்சர் எதுவும் பேசாமல் இருந்தார்.
“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை எதுவுமில்லை. சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் கூட வாங்க மறுத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள். இருந்தும், இந்த உடல் உயிர்த் துடிப்புடன் உள்ளபோது ஆடும் ஆட்டங்கள்தான் எத்தனை? இறந்த பின்பு நமக்கு எந்தவிதமான மதிப்புமில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும் போது. தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள். அத்தகைய ஞானிகளை நாம் விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.
அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!