ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது, அரசாங்கம் அந்தக் கோயிலை பராமரித்து வந்தது. அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளைச் சரி பார்ப்பது வழக்கம்.
அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார். கோயில் நிர்வாக அதிகாரி கணக்குப் புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்.
வந்த அதிகாரி, கோயில் செலவுக் கணக்கைப் பார்த்து கொண்டு வந்தார். "சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு..." என்று தினசரிச் செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.
அதை பார்த்த அவர், "சும்மா இருக்கிறவருக்கு எதுக்காகச் சோறு போடணும்? அதை உடனே நிறுத்துங்கள்!” என்று ஆணையிட்டார்.
உடனே ஆலய ஊழியர்கள், அதிகாரிகளை நெருங்கி மெல்லச் சொன்னார்கள்.
"ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம்!"
இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார். வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்.
"சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே!" என்று பார்த்தார். மனம் அலைய ஆரம்பித்தது... அடங்க மறுத்தது.
சரி, கொஞ்ச நேரம் கண்களை மூடித் தியானம் செய்து பார்க்கலாம், என்று நினைத்தார். “வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே!” என்று நினைத்தார்.
ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டினார். கவனத்தை அதில் செலுத்தினார். காகம் ஒன்று எங்கோ கத்துகிற சத்தம், அவர் காதில் விழுந்தது. கண்களையும் காதுகளையும் கட்டுப்படுத்த முயன்றார்.
மனம் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. மகளுக்கு மாப்பிள்ளை தேட வேண்டும், மகனுக்கு வேலை தேட வேண்டும், மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்.
திடீர் என ஒரு மணம் வந்து மூக்கைத் தொடுகிறது. கண் விழித்துப் பார்க்கிறார்.
மனைவி கொண்டு வந்து வைத்து விட்டுப் போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது. அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்.
"மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது" என்று நினைக்கிறார். அது அப்படி அல்ல, மனம் முடிந்து போகிற இடத்திலதான் தியானம் ஆரம்பமாகிறது.
எனவே, தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை. மனம் செயல்படுகின்ற வரையில் தியானமும் தொடங்குவதில்லை "
அதிகாரி திணறிப் போனார். அவருக்கு ஊழியர்கள் கட்டுப்படுகிறார்கள், உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது.
அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று, அது முடியாமல் சோர்ந்து போனார்.
"சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம்!” என்பது அவருக்குப் புரிந்தது.
உடனே மறுபடியும் புறப்பட்டு அந்தக் கோவிலுக்கு போனார், பதிவேட்டைக் கொண்டு வரச் சொன்னார்.
அதில் இப்படி எழுதினார்
"சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு!"