காட்டில் உள்ள விலங்குகள் அனைத்தும் கூட்டம் போட்டன. நம்மில் யாரை அரசனாக்குவது என்று ஆராய்ந்தன.
குரங்கு செய்த கோமாளித்தனங்கள் எல்லா விலங்குகளையும் கவர்ந்தன. சிரித்து மகிழ்ந்த அவை குரங்கையே அரசனாக்குவது என்று முடிவு செய்தன.
கால தாமதமாக அங்கு வந்த நரி நடந்ததை எல்லாம் அறிந்தது. "கோமாளிக் குரங்கு நமக்கு அரசனா? அதற்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்" என்று நினைத்தது.
குரங்கை வணங்கிய அது, "நீங்கள் இப்பொழுது எங்களுக்கு அரசர். இந்தக் காட்டில் ஓரிடத்தில் புதையல் ஒன்றைக் கண்டேன். நீங்கள் என்னுடன் வந்தால் அதைக் காட்டுகிறேன்" என்றது.
மகிழ்ச்சி அடைந்த குரங்கு அந்த நரியைப் பின் தொடர்ந்து சென்றது.
விலங்குகளைப் பிடிக்கும் பொறி ஒன்றைக் குரங்கிடம் காட்டியது நரி.
"அரசே! இதன் அருகில்தான் நான் சொன்ன புதையல் உள்ளது" என்றது.
அதைப் பொறி என்று அறியாத குரங்கு அதில் கையை வைத்தது. அந்தப் பொறிக்குள் நன்றாக மாட்டிக் கொண்டு தவித்தது.
அதன் பிறகு காட்டுக்குள் சென்று மற்ற விலங்குகளை அங்கே அழைத்து வந்த நரி, "தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத முட்டாள் இந்தக் குரங்கு. இதுவா நமக்கு அரசன்? இந்தக் கோமாளியையா அரசனாகத் தேர்ந்து எடுத்தீர்கள்...?" என்று கேட்டது.
எல்லா விலங்குகளும் தங்கள் தவறை உணர்ந்தன. குரங்கை அரசனாக்கும் எண்ணத்தைக் கை விட்டன.