கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படை வலிமையுள்ளதாக இருந்தது. சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதன்படி, ஒரு வீட்டிற்கு ஒரு குதிரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு அளவு பணமும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக் கொண்டு, குதிரையை நன்கு உணவளித்து வளர்த்து வந்தார்கள் மக்கள்.
அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்துப் புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய துவாரம் வைத்திருந்தான். அந்தத் துவாரத்தின் வழியாகப் புல்லை நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கவ்விக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக, நோஞ்சானாக இருந்தது. குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.
ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி, குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.
அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்குத் தெனாலிராமனோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால்தான் இங்கே கொண்டு வரவில்லை." என்றான். "குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான்.
இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவரைத் தெனாலிராமனுடன் அனுப்பினார்.
குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாகக் குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து, அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமுடியாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை.
இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.
அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பிரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக் கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு கொடுத்து வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.
இதைக் கேட்ட மன்னர் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனையும் மன்னித்து விட்டார்.