ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனாக இருந்தாலும் அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான் அவன்.
ஒருநாள் அவனை அழைத்து, "நம் வண்டியை எடுத்துக் கொண்டு பனங்காட்டுக்குச் செல், அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!'' என்றான்.
அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர் கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் வேலைக்காரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"என்ன இவர்கள் எல்லாரும் முட்டாள்களாக இருக்கின்றனர். மரம் வெட்டும் போதே அதற்குக் கீழாக வண்டியை வைத்தால் மரம் அதில் சரியாக விழும். வீணாக ஒரு முறை பூமியில் கிடக்கும் மரத்தை வண்டியில் ஏற்ற வேண்டாமே!” என்று நினைத்தான்.
"என் திட்டத்தை இவர்கள் கண் முன்னாலேயே செய்து காட்டி, நான் எத்தகைய அறிவாளி என்பதை இவர்களுக்குப் புரிய வைப்பேன்” என்ற எண்ணத்தில், தான் வெட்ட வேண்டிய பெரிய மரத்தை தேர்ந்தெடுத்தான்.
கோடாரியால் அந்தப் பனை மரத்தின் அடிப்பகுதியைப் பாதி அளவு வெட்டி முடித்தான். பிறகு, அந்த மரம் விழக்கூடிய இடத்திற்கு நேராக மாட்டுடன் வண்டியை நிறுத்தினான். மரம் வெட்டிக் கொண்டிருந்த மற்றவர்கள், "ஏன் இவன் இப்படிப் பைத்தியக்கார வேலை செய்கிறான்!' என்று நினைத்தனர்.
சிறிது நேரத்தில் அந்த மரம், "சடசட”வென்ற சத்தத்துடன் சாய்ந்து வண்டியின் மீது வேகமாக விழுந்தது. அவ்வளவுதான், வண்டி உடைந்து போனது. வண்டியுடன் கட்டப்பட்டிருந்த மாடு கால்கள் உடைந்து உயிருக்குப் போராடியது. இதைக்கண்டு அவன் திகைத்து விட்டான். தன் திட்டத்தில் என்ன குறை என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
"என் திட்டம் நல்ல திட்டம் தான். வண்டிக்குத்தான் வலிமை இல்லாமல் போய்விட்டது” என்ற முடிவுடன் வீடு திரும்பினான். நடந்ததை அறிந்த வணிகன், முட்டாளாக இருக்கிறாயே! இப்படிச் செய்யலாமா? என்று வேலைக்காரனைத் திட்டினான்.
சில நாட்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில் மண்ணெண்ணெய்ப் பஞ்சம் வந்துவிட்டது.
"தன்னிடம் இருக்கும் இருபத்தைந்து பீப்பாய் எண்ணெய்யைப் பதுக்கி வைத்தால் நிறைய இலாபம் கிடைக்கும்!” என்று நினைத்தான் அந்த வணிகன். உடனே வேலைக்காரனை அழைத்து, "கடையில் இருக்கும் மண்ணெண்ணெய் எல்லாவற்றையும் இன்றிரவு நம் தோட்டத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்துவிடு. யாருக்கும் தெரியக் கூடாது!'' என்றான்.
அவனும் வணிகன் சொன்னபடியே, நள்ளிரவில் பெரிய பள்ளம் தோண்டினான். ஒவ்வொரு பீப்பாயாக உருட்டிச் சென்று அதிலிருந்த மண்ணெண்ணெய்யைப் பள்ளத்தில் ஊற்றினான். இப்படியே அனைத்துப் பீப்பாய்களில் இருந்த எண்ணெய்யையும் ஊற்றி முடித்தான்.
அப்போது அவனுக்குச் சந்தேகம் எழுந்தது. "மண்ணெண்ணெய்யைத் தோட்டத்தில் மறைக்கச் சொன்ன முதலாளி, இந்தக் காலிப் பீப்பாய்களை என்ன செய்வது? என்று சொல்லாமல் விட்டுவிட்டாரே...” என்று நினைத்தபடி வீட்டிற்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த முதலாளியை எழுப்பி,"ஐயா! நீங்கள் சொன்னபடி மண்ணெண்ணெயைப் பள்ளம் தோண்டிப் புதைத்துவிட்டேன். காலி பீப்பாய்களை என்ன செய்வது?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டான்.
வணிகன், “ஐயோ, என் மண்ணெண்ணெய் எல்லாம் போய்விட்டதே” என்று அலறினான்.
அன்றே அவனை வேலையிலிருந்து நீக்கினான்.