ஒரு காட்டில் இரண்டு பெரியபாறைகள் அருகருகே கிடந்தன.
பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெய்யிலில் வாடிக்கிடந்த அந்தக் கற்களுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது. ‘நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா?’ என்று மிகவும் ஏக்கத்தோடு பேசிக்கொண்டன.
அந்தக்காட்டுக்குப் பக்கத்தில் ஒரு நகரம். அங்கிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோவில் கட்டத் தீர்மானித்தார்கள்.
புதுக்கோவிலுக்கு மூலவர், உற்சவர், மற்ற சிலைகள் எல்லாம் வேண்டுமல்லவா? அதற்காக ஏழெட்டுச் சிற்பிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சிற்பங்களைச் செதுக்குவதற்கான கற்களைத் தேடிக் காட்டுக்குள் வந்தார்கள்.
அவர்களில் ஒரு சிற்பி இந்தப்பாறைகளைக் கவனித்தார். மற்றவர்களிடம் அவற்றைக் காண்பித்துச் சொன்னார். “இந்தப் பாறைகள் இரண்டும் சரியான அளவில இருக்கிற மாதிரி தெரிகிறது. நாளைக்கு இந்தப்பாறைகளை இங்கிருந்து எடுத்துச் செல்லலாம்!”
சிற்பிகள் திரும்பிச் சென்ற பிறகு முதல் பாறை, “நம் பல நாள் கனவு நிறைவேறப் போகிறது. நாளைக்கு நாம் நகரத்துக்குப் போகிறோம்...”
இரண்டாவது பாறை கோபமடைந்தது. அது முதல் பாறையைப் பார்த்து, “நீ என்ன முட்டாளா? அவர்கள் உன்னை நகரத்தைச் சுற்றிக் காட்டவாப் போகிறார்கள். உன்னை அங்கு கொண்டு போய் உன்னைச் சிலையாக்குகிறேன் என்று உன்னை அடித்து உடைத்துக் காயப்படுத்தப் போகிறார்கள்” என்றது.
“அதுக்கு என்ன பண்றது? ஒன்றை அடைய வேண்டுமென்றால் மற்றொன்றை இழந்துதானே ஆகணும்? நான் அதற்காக வலியைத் தாங்கத் தயாராக இருக்கிறேன்” என்றது முதல் பாறை.
“என்னால் அது முடியாது!” உறுதியாகச் சொன்னது இரண்டாவது பாறை. “நாளைக்கு அவர்கள் வரும்போது நான் இன்னும் உள்ளே சென்று உட்கார்ந்து கொள்வேன். அவர்கள் என்னை தூக்கமுடியாது” என்றபடி பூமிக்குள் நன்றாகப் புதைந்து கொண்டது.
மறுநாள் அந்தச் சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள். இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்ல என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டுச் சென்றார்கள்.
“சரி இந்த ஒரு பாறையே நன்றாகத்தான் இருக்கிறது. இதுவே போதும்” என்று அவர்கள் சென்றார்கள்.
சிற்பிகள் அந்த முதல்பாறையை அழகிய கடவுள் சிலையாக மாற்றினார்கள்.
கடவுள் சிலையான அந்தப் பாறையை இப்போது எல்லோரும் கைகுவித்து வணங்குகிறார்கள். இரண்டாவது பாறை இன்னும் அப்படியே காட்டுக்குள் பலரின் கால்களில் மிதிபட்டுக்கொண்டு கிடக்கிறது...