யார் அழகு?
ஸ்ரீதேவி என்பது லட்சுமியையும், மூதேவி என்பது துர்தேவதையையும் குறிக்கும். ஸ்ரீதேவி வந்தால் வளம்; மூதேவி வந்தால் அழிவு.
ஒருவனிடம் ஸ்ரீதேவி, மூதேவி இருவரும் வந்து, “எங்களில் யார் அதிக அழகு?” என்று கேட்டார்கள்.
ஒருவரை அழகு என்று சொன்னால், அடுத்தவர் கோபம் கொண்டு தன்னைத் தண்டித்துவிடுவாரே என்று, பதில் சொல்லத் தயங்கினான் அவன். லட்சுமி அவனைவிட்டு அகன்றுவிட்டாலோ, மூதேவி அவனைச் சபித்துவிட்டாலோ அவனால் மீள முடியாதே! இருவரையும் திருப்தி செய்யும்படியாக ஒரு பதிலைச் சொல்ல வேண்டும். அதே நேரம், உண்மையையும் சொல்ல வேண்டும்...
சிறிது நேரம் யோசித்த அவன், இருவரையும் சிறிது தூரம் நடந்து திரும்பி வரச்சொன்னான்.
அவர்களும் அவன் சொன்னது போல் சிறிது தூரம் சென்று திரும்பினார்கள்.
பின்பு ஸ்ரீதேவியிடம், ‘நீங்கள் வரும்போது அழகு’ என்றும், மூதேவியிடம் “நீங்கள் போகும்போது அழகு” என்றும் சாமர்த்தியமாகச் சொல்லித் தப்பித்தான்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.