யார் புத்திசாலி?
ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அந்த இடம் ஒரு மனநல மருத்துவமனைக்கு அருகில் இருந்தது. சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா? என்று பார்த்தார். எதுவுமே இல்லாததால் அவரே அந்த டயரைக் கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.
நான்கு போல்ட்டையும் கழட்டி வைத்து விட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார். ஸ்டெப்னி எடுத்து வரும் போது அவர் கால் இடறி நான்கு போல்ட்டும் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது. எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்.
அப்போது “ஏதாவது பிரச்சனையா?” என்று ஒருவர் கேட்டார்.
அவரைப் பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர், எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.
உடனே அந்த நபர், “மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டைக் கழற்றி, இந்த சக்கரத்தில் மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி அனைத்து சக்கரத்திலும் மாட்டிக் கொள்” என்று ஆலோசனை சொன்னார்.
“இவ்வளவு தெளிவா இருக்கறீங்களே? நீங்க எப்படி இந்த மருத்துவமனையில்...” என்று கேட்டார்.
“இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லோரும் முட்டாள்களும் இல்லை, வெளியில் இருக்கிற எல்லோரும் புத்திசாலிகளும் இல்லை” என்றார் மனநல நோயாளி.
ஒருவன் தோற்றத்தை வைத்து மட்டும் நாம் எதையும் முடிவு செய்யமுடியாது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.