விபத்து ஒன்றில் சிக்கிய ஒரு சிறுவன் அவசர அவசரமாக அந்த மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டான். அந்தச் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தது. அந்த மருத்துவமனையிலிருந்து மருத்துவருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவர் மருத்துவமனை நோக்கி விரைந்தார்.
அவரின் வருகைக்காகக் காத்திருந்த சிறுவனின் தந்தை, “என்னங்க, உங்களுக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் சொல்லி எவ்வளவு நேரம் கழித்து வருகிறீர்கள்?” என்று கடிந்து கொண்டார்.
மருத்துவர், “ஐயா, என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு இப்போது பணி இல்லை. நான் ஒரு முக்கியமான வேலையில் இருந்தேன். விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்பதால் மட்டுமே வந்தேன்” என்றார்.
“என் மகன் உயிர் சிறிது சிறிதாகப் போய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் இப்படி காலதாமதம் செய்கிறீர்களே...?” என்று கோபப்பட்டார்.
அவருக்கு அவரது மகனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்கிற பதற்றத்துடன் இருந்தார்.
மருத்துவர், “ஐயா, தங்கள் நிலை எனக்குப் புரிகிறது. மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தவுடனேயே நான் புறப்பட்டு வந்துவிட்டேன். சிறிது பொறுமையாக இருங்கள்” என்றார்.
“என்னது பொறுமையாக இருப்பதா? என் மகன் இருக்கும் ஆபத்தில் தங்கள் மகன் இருந்தால் நீங்கள் இப்படிப் பேசுவீர்களா? உங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால்தான் எங்கள் நிலை தெரியும்...” என்று பொறிந்து தள்ளினார்.
மருத்துவர் மெலிதாகச் சிரித்தபடி, “ஐயா, மருத்துவர்களுக்கு நோயாளிகள் எல்லோரும் ஒன்றுதான். எந்த உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். நாங்கள் உயிரைக் காப்பாற்றும் கருவியாகத்தான் செயல்படுகிறோம். உயிர்களைக் காப்பதும், காக்காமல் விடுவதும் இறைவனின் செயல். கடவுளிடம் வேண்டுங்கள்...” என்று சொல்லிவிட்டு அறுவைசிகிச்சை அறைக்குள் சென்று விட்டார்.
“பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் செய்வது மிக சுலபம். அவர்களின் பதற்றம் இந்த மருத்துவர்களுக்குத் தெரியாது...” என்று புலம்பியபடி அங்கிருந்த நாற்காலி ஒன்றில் போய் அமர்ந்தார்.
அந்த தீவிர அறுவை சிகிச்சை சில மணிநேரங்களுக்கு நடைபெற்று முடிந்து வெளியே வந்த மருத்துவர் அந்தச் சிறுவனின் தந்தையிடம், “ஐயா, தங்கள் மகனுக்கான அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்தது. தங்கள் மகனைக் காப்பாற்றியாச்சு...” என்றார்.
“மருத்துவர் ஐயா, நீங்க என் மகனைக் காப்பாற்றி விட்டீர்கள். நன்றி ஐயா... நான் தங்களைக் கோபத்தில்...” என்று இழுத்தார் அந்தத் தந்தை.
“ஐயா... நன்றிகளை எனக்குச் சொல்வதை விட அந்தக் கடவுளுக்குச் சொல்லுங்கள்...” என்றபடி வெளியேறினார்.
அப்போது அங்கு வந்த உதவி மருத்துவரிடம், “என்னங்க இந்த மருத்துவர் சரியா பதில் சொல்லாமல் கூட இப்படி ஓடுறாரே... இவர்களெல்லாம் மனிதர்களாகவே இல்லை” என்று சலித்துக் கொண்டார் அவர்.
உதவி மருத்துவர், “ஐயா, நீங்க தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவரோட மகன் நேற்று நடந்த சாலை விபத்தில் இறந்து போய் விட்டான். நாங்கள் அவரை அழைத்த போது அவர் அவரது மகனின் இறுதிச் சடங்கில் இருந்தால். இங்கு ஒரு சிறுவன் விபத்தில் சிக்கி அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டு இருக்கிறான் வாருங்கள் என்று சொன்னதும் வந்து விட்டார். இப்போது அவருடைய மகன் இறுதிச் சடங்கைச் செய்ய அவசர அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறார். வேறொன்றுமில்லை...” என்றார்.
அவசரத்தில் நாம் எதையும் முடிவெடுக்கக் கூடாது... என்று உணர்ந்து கொண்டிருந்தார் அந்த தந்தை.