கைதியின் கடிதம்
ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள்.
"அன்புள்ள கணவருக்கு... நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தித் தோட்டம் அமைத்துக் காய்கறி பயிரிட்டுக் குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்... ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை” என்று அந்தக் கடிதத்தில் இருந்தது.
கைதி பதில் எழுதினான்.
“அன்பே... குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது ஒரு வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் மட்டும் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்... நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்”
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.
“அன்புள்ள கணவருக்கு... யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப்புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர். இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே...?”
கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.
“அன்பே... அவர்கள் காவல் துறையினர். நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டுத் தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்... ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை... இப்போது நீ நினைத்தபடி காய்கறித் தோட்டம் அமைத்துக் குடும்பத்தையும் பராமரித்துக் கொள்...!”
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.