மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?
புத்தர் தனது சீடர்களிடம்,"ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?" என்று கேட்டார்.
ஒரு சீடர் எழுபது என்றார், இன்னொருவர் அறுபது என்றார். மற்றொருவர் ஐம்பது என்றார்.
அனைத்துமே தவறு என்று புத்தர் சொல்ல, சரியான விடையை அவரே சொல்லும்படி அனைத்து சீடர்களும் வேண்டினர்.
புத்தர் புன் முறுவலுடன் சொன்னார், "ஒரு மூச்சு விடும் நேரம்" என்றார்.
சீடர்கள் வியப்படைந்தனர்.
“மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?" என்றனர்.
"உண்மை. மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான். ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது. ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும். அந்தக் கணத்தில் முழுமையாக வாழ வேண்டும்" என்றார் புத்தர்.
ஆம், பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும்,கவலையிலும் வாழ்கிறார்கள். நிகழ்காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது என்பதை உணர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.