ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார். அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது. ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் பழுதைச் சரி செய்யச் சொன்னார் ஆனால் யாராலும் அந்தக் கப்பலில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாகச் சொன்னார்.
அதற்கு கப்பல் வியாபாரியும் சரி என்று ஒப்புக் கொண்டார். அந்த மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பல கருவிகள், கப்பல் எஞ்சினின் உதிரி பாகங்கள் எல்லாம் வைத்து இருந்தார்.
கப்பல் வியாபாரிக்கு வயதான மெக்கானிக் எப்படியும் கப்பலின் பழுதைச் சரி செய்து விடுவார் என்கிற நம்பிக்கை வந்து விட்டது.
அந்த வயதான மெக்கானிக் கப்பலின் இஞ்சினை நான்கு பக்கமும் சுற்றி வந்து பார்த்தார். பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார். பின்னர் கப்பலின் இஞ்சினை இயக்கிப் பார்த்தார். இஞ்சின் வேலை செய்யத் தொடங்கி விட்டது.
கப்பல் வியாபரி அந்த மெக்கானிக்கிடம் பழுது நீக்கியதற்கு எவ்வளவு பணம் வேண்டும்? என்று கேட்டார்.
அந்த மெக்கானிக் அவரிடம், நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் எனது பழுது நீக்கத்துக்கான பில்லைக் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
மறுநாள் அந்த மெக்கானிக்கின் ஒர்க்சாப்பில் வேலை செய்யும் பையன் மெக்கானிக் கொடுத்த பில்லைக் கொண்டு வந்து கொடுத்தான்.
அதைப் பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார். அதில் பழுது நீக்கத்திற்கான கூலி ஐம்பதாயிரம் ரூபாய் என்று இருந்தது.
இதைக் கண்ட அவர் அந்த பையனிடம் இந்த பில்லில் மொத்தத் தொகை மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்ன என்ன செலவு என்று உங்க முதலாளியிடம் பிரித்துப் போட்டு வாங்கிக் கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
மறுநாள் அந்தப் பையன் கொண்டு வந்து கொடுத்த பில்லைப் பார்த்தார் கப்பல் வியாபாரி, அதில்;
1 - கப்பலின் இஞ்சின் பழுது நீக்கத்திற்காகச் சுத்தியலால் அடித்த கூலி- ரூ. 25
2- இஞ்சினின் பழுது நீக்க எங்கு சுத்தியலால் அடிக்க வேண்டும் என்று கண்டறிந்த கூலி - ரூ. 49,975
ஆக மொத்தம் - ரூ. 50,000
என்று எழுதி இருந்தது.
கப்பல் வியாபாரியும் மெக்கானிக்கின் புத்திசாலித்தனத்தை அறிந்து அவர் கொடுத்த பில்லுக்கான தொகையைக் கொடுத்தனுப்பினார்.