அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்கத் தினமும் நாட்டின் முக்கியப் புள்ளிகள் பலரும் வந்து கொண்டிருந்தனர்.
ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.
அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதைத் தெரிவித்தன.
அவன் மன்னனிடம், “அரசே... உங்கள் உடல் நலம் பெற வேண்டுமென்று எங்கள் ஊர் அம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். எங்கள் ஊர் அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால், எந்த நோயும் பறந்து ஓடிவிடும்” என்றான்.
அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு, தன் கழுத்தில் இருந்த முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்குப் பரிசாக அளித்து அனுப்பினான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், “அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு...?” என்று கேட்டார்.
மன்னனோ, “அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலை அவனது அன்புக்கு ஈடாகாது” என்று கூறினான்.