அந்தத் தோட்டத்திலிருந்த பெரிய மரத்துக்கு நீண்ட நாட்களாகவே ஓர் ஆசை! அதைப் பிற மரங்களிடமும் அடிக்கடிச் சொல்லும். இதனால் மற்ற மரங்களுக்கும் அந்த ஆசை வந்து விட்டது.
எல்லாம் சேர்ந்து இறைவனை அழைத்தன.
அவைகளின் முன்பாக இறைவன் தோன்றினார்.
"என்ன மரங்களே! எதற்காக அழைத்தீர்கள்?" என்று கேட்டார்.
"இறைவா‚ எங்கள் கிளைகளில் கூடு கட்டி வசிக்கும் பறவைகள் எல்லாம் நினைத்த நேரத்தில் வெளியே செல்கின்றன. சுதந்திரமாக வானில் பறக்கின்றன. எங்கள் நிழலில் இளைப்பாறும் மனிதர்களும் விலங்குகளும் தாங்கள் விருப்பப்பட்ட இடத்துக்குச் செல்கிறார்கள். ஆனால் நாங்கள் மட்டும் எப்போதும் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறோம்" என்றது ஆலமரம்.
"பிறந்தது முதல் இறுதி வரை ஒரே இடத்திலேயே இருக்கிறோம். இதனால் உலகில் என்ன நடக்கிறது என்பதே எங்களுக்குத் தெரிவதில்லை. அப்படியே நாங்கள் வெளி உலகைக் காணச் செல்வதாக இருந்தால் அது எங்கள் மரணத்துக்குப் பின்தான் நடக்கிறது" என்று வருந்தியது அரச மரம்.
"எல்லா உயிரினங்களுக்கும் கால்கள் அல்லது இறக்கைகளைக் கொடுத்த நீங்கள் எங்களை மட்டும் ஏன் இப்படிப் படைத்தாய்?" என்று கேட்டது பனைமரம்.
"கிளைகள்தான் உங்கள் இறக்கைகள்;வேர்கள்தான் உங்கள் கால்கள்” என்றார் கடவுள்.
“வேர்களா கால்கள்? அவை எங்களைச் சிறைப்பிடித்திருக்கும் விரோதிகள் எங்களுக்கு வேர்கள் எதுவும் வேண்டாம். அதற்குப் பதிலாக மனிதர்களைப் போல் கால்களைக் கொடுங்கள்” என்று கோபப்பட்டது வேப்பமரம்.
“என்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் ஒரு பொருள் இருக்கிறது” என்றார் இறைவன்.
இதைக் கேட்ட முருங்கை மரம், “எங்களுக்கு எந்த விளக்கமும் வேண்டாம். எங்களுக்குக் கால்களைத் தந்து எங்களையும் உலகம் சுற்ற அனுமதிக்க வேண்டும்” என்றது.
இதைக் கேட்ட இறைவன், “சரி, உங்கள் விருப்பப்படி உங்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் கால்களைத் தருகிறேன். நீங்கள் எங்கே செல்ல விரும்புகின்றீர்களோ... அங்கே சென்று விட்டு வாருங்கள். அதன் பிறகு கால்கள் நிரந்தரமாக வேண்டுமா‚ இல்லையா என்பதை நாளை என்னிடம் சொல்லுங்கள்..." என்று இறைவன் வரமளித்தார்.
மரங்களுக்குக் கால்கள் முளைத்தன. மரங்கள் சந்தோசத்தில் துள்ளிக் குதித்தன. உடலைச் சிலுப்பிக் கிளைகளில் கூடு கட்டி இருந்த பறவைகளை விரட்டின. "இனிமேல் எங்கள் மீது வந்தமர்ந்தால் தொலைத்து விடுவோம்" என்று பறவைகளை மிரட்டின.
பாவம் பறவைகள் தங்களுக்குக் குடியிருக்க இடமில்லாமல் போனதே என்று தவித்தன.
மரங்கள் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தோட்டத்தை விட்டுக் கிளம்பின. சாலைகளில் சந்தோசமாக ஓடின. உயரமான கட்டடங்களையும் விதவிதமான வாகனங்களையும் கண்டு மகிழ்ச்சியடைந்தன. இரவு நேரத்தில் அனைத்து மரங்களும் கடற்கரைக்கு வந்து சேர்ந்தன. மண்ணில் குதித்துக் குதித்து விளையாடின.
இதைக் கண்ட கடல் அலை ஆச்சரியப்பட்டது. "ஏய் மரங்களே! நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?" என்று கேட்டது. "இறைவனிடம் வரம் வாங்கினோம். வேர்களுக்குப் பதிலாக கால்களைக் கொடுக்குமாறு கேட்டோம்" என்றது அரசமரம்.
"பாவம் நீ கூட ஒரே இடத்திலேயே வருவதும் போவதுமாக இருக்கிறாய். ஊருக்குள் செல்ல நீயும் இறைவனிடம் வரம் கேள்" என்றது வேப்ப மரம்.
கடல் அலை சிரித்தது. "அது போன்ற பைத்தியக்காரத்தனமான வரம் எனக்கு வேண்டாம்" என்றது.
"அப்படியானால் நாங்கள் பைத்தியக்காரர்களா?" அன்று கோபமாக முறைத்தது முருங்கை மரம்.
"அதில் என்ன சந்தேகம்? சாபத்தை வாங்கி வந்து விட்டு‚ வரம் வாங்கியதாகச் சொல்கிறீர்களே. உங்களுக்குப் பெருமை சேர்ப்பதே காய்களும் கனிகளும்தான். அவற்றை மற்ற உயிரினங்கள் உண்டு வாழ்கின்றன. அந்தக் காய்களும் கனிகளும் நீங்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு மண்ணின் சத்தையும் நீரையும் பெறுவதன் மூலம் கிடைக்கிறது. வேர்கள் தான் அவற்றைப் பெற்றுத் தருகின்றன. அந்த வேர்களையே உதறிவிட்டு இங்கும் அங்குமாக நடமாடினால் எப்படிக் கனிகளைப் பெற முடியும்?"
"நீ என்ன சொல்கிறாய்? நாங்கள் செய்தது தவறா?" என்று கேட்டது ஆலமரம்.
"ஆமாம். உங்கள் கிளைகளில் பறவைகள் வசிக்கின்றன. நிழலில் உயிரினங்கள் தங்குகின்றன. இப்படி அடுத்தவருக்கு உதவும் அற்புதமான வரத்தை இறைவன் தந்திருக்கிறார். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்! நான் இங்கே இருக்கும் வரைதான் மதிப்பு. குழந்தைகள் தேடிவந்து சந்தோசமாக கால்களை நனைக்கிறார்கள். அதுவே நான் ஊருக்குள் சென்றால் என்ன ஆகும்? எல்லோரும் என்னைத் திட்டுவார்கள். யாருக்கும் பயனில்லாமல் துன்பம் கொடுப்பது வரமா? அல்லது மற்றவர்களை மகிழ்விப்பது வரமா?" என்று கேட்டது கடல் அலை.
மரங்கள் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. "கடல் அலையே‚ நீ சொல்வது சரிதான். புத்திகெட்டு இப்படி ஒரு வரத்தை... தவறு... தவறு... சாபத்தை வாங்கி வந்து விட்டோம். இப்போதே இறைவனிடம் வேண்டி‚ எங்களை முன்பு போலவே மாற்றிக் கொள்கிறோம். அடுத்தவர்களை மகிழ்ச்சிப்படுத்தி வாழ்கிறோம்" என்றது அரசமரம்.
கடல் அலை கையசைத்து விடை கொடுக்க‚ மரங்கள் அனைத்தும் இறைவனைத் தேடிக் கிளம்பின.