ஒரு முறை தேவலோகத்தின் அதிபதியாக இருந்த பத்ர குரு என்பவர் புதியதாக ஒரு மாளிகையை தேவலோகத்தில் அமைக்க நினைத்தார். ஆகவே அவர் அனைத்து தேவர்களையும், கடவுள்களையும் அழைத்து அந்த மாளிகையைக் கட்ட அவரவரால் முடிந்த உதவியை செய்யுமாறு ஆணையிட்டார்.
அனைவரும் அவரவரால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்யத் தொடங்கினார்கள். ஆனால் 'டிராகன்' (Dragon) எனப்படும் பறக்கும் நாகமான 'அந்தா' என்ற பாம்பினால் ஒன்றும் செய்ய இயலவில்லை. காரணம் அதற்குக் கால்களும் இல்லை. கைகளும் இல்லை. அதுதான் ஒரு நாகம் ஆயிற்றே. தன்னால் ஒன்றுமே செய்ய இயலாதை நிலையைக் குறித்து அந்த நாகம் தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டது.
ஆனால் அதற்கு மற்றவர்கள் எப்படி உதவ முடியும். ஆகவே அந்த நாகம் ஒரு காட்டிற்குச் சென்று அமர்ந்து கொண்டு தனது நிலையை எண்ணி அழத் தொடங்கியது.
அது அழத் தொடங்கியதும் முதலில் அதன் கண்களில் இருந்து பூமியில் சிந்திய கண்ணீர் துளி மூன்று முட்டைகளாக மாறின. அதைப் பார்த்து 'அந்தா' ஆச்சர்யம் அடைந்தது. தன்னுடைய கண்ணீரில் எப்படி முட்டை வந்தது. அப்போது வானத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் கூறியது, 'அதை எடுத்துப் போய் பத்ர குருவிடம் உனது பங்காகக் கொடுத்து விடு'.
அதைக் கேட்டு மகிழ்ந்த நாகமான 'அந்தா'வும் அந்த மூன்று அதிசய முட்டைகளையும் தனது வாயில் கவ்விக் கொண்டு அரண்மனையை நோக்கி செல்லத் துவங்கியது.
அப்படி போய்க் கொண்டு இருந்தபோது அதன் வாயில் இருந்து இரண்டு முட்டைகள் கீழே விழுந்து உடைந்து விட்டன. ஆகவே கவலை கொண்ட 'அந்தா' மிகவும் கஷ்டப்பட்டு மூன்றாவது முட்டையை எடுத்துக் கொண்டு போய் மன்னனிடம் தந்து அந்த முட்டை வந்தக் கதையைக் கூறியது. அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த மன்னனும் அந்த முட்டையைப் பத்திரமாகப் பாதுகாத்து அதில் இருந்து குஞ்சு வெளி வந்ததும் தன்னிடம் வந்து என்ன வந்தது என்பதைக் கூறுமாறு அதை அனுப்பினார்.
சில மாதங்களுக்குப் பிறகு அந்த முட்டை உடைந்து அதில் இருந்து மிக அழகிய பெண் ஒருத்தி வெளிவர 'தேவி ஸ்ரீ' என அவளுக்குப் பெயரிட்டு அவளை மிகவும் பாதுகாப்பாக அந்த மன்னன் வளர்த்தார். ஆனால் நாளாக நாளாக அவள் பெரியவள் ஆனதும் அவளை தான்தான் தந்தை போல வளர்த்தவள் என்ற எண்ணத்தை மறந்த மன்னன் அவள் அழகில் மயங்கி அவள் மீது காதல் கொண்டான். தன்னுடைய பெண் என்றும் பாராமல் அவளைத் திருமணம் செய்து கொள்ள முயன்றான்.
அதனால் தகாத விளைவுகள் ஏற்பட்டுவிடுமே என பயந்து போன மற்ற கடவுள்கள் ஒன்று சேர்ந்து அத்தகைய தகாத சம்பவம் தேவலோகத்தில் நடக்க கூடாது என எண்ணி அந்தப் பெண்ணுக்கு விஷம் வைத்து அவளைக் கொன்று விட்டார்கள். இறந்து போன அவளைப் பூமிக்குக் கொண்டு போய்ப் புதைத்து விட்டார்கள். அப்போது ஒரு அதிசயம் நடந்தது. பூமியில் புதைக்கப்பட்டவளின் கண்களில் இருந்து முதலில் சில செடிகள் வெளி வந்தன. அது மட்டும் இல்லாமல் மெல்ல அவளது உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் சிறு செடிகள் வெளி வந்தன. அங்கு பெரும் அளவில் அந்த பயிர் வளரத் துவங்கியது. அதில் இருந்து எழுந்த தானியமே பின்னர் நாம் உண்ணும் அரிசி எனும் தானியம் என ஆயிற்று.
இப்படியாக நாம் உண்ணும் அரிசி தானியத்தைப் படைத்தவள் 'தேவி ஸ்ரீ' எனும் தேவதையே. அரிசி தானியம் பிறந்த இந்த புராணக் கதை ஜாவாவில் உள்ளது. அவளே நீர்வளம் மற்றும் நிலா வளத்தின் தேவதையாக உள்ளாள். அவளுக்கு நிலங்களில் ஆலயங்களும் எழுந்தது.