பண்ணை ஒன்றில் ஒரு எலி வாழ்ந்து வந்தது. பண்ணைக்குச் சொந்தக்காரனும், அவன் மனைவியும் அந்தப் பண்ணையில் ஒரு கோழியும், பன்றியும், மாடும் வளர்த்து வந்தனர்.
பண்ணையில் எலி செய்த அட்டூழியம் தாங்க முடியவில்லை. ஒருவருக்கும் எலி அங்கே இருப்பது பிடிக்கவில்லை. ஒரு நாள் பண்ணைக் காரனும் அவன் மனைவியும் சந்தைக்குப் போய் வரும் போது எதையோ காகிதத்தில் சுற்றி வாங்கி வந்ததைச் சுவற்றுப் பொந்தில் இருந்து எலி பார்த்தது. அந்தச் சாமான் ஒரு எலிப்பொறி என்று கண்டதும் திடுக்கிட்டுப் போனது.
உடனே அந்த எலி கோழியிடம் சென்று, "என்னைக் கொல்ல எலிப்பொறி வாங்கி வந்திருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டது.
கோழியோ "இது என் பிரச்சினை இல்லை. நானா பொறியில் மாட்டிக் கொள்ளப் போகிறேன்? உன் பிரச்சினையை உன்னிடமே வைத்துக் கொள்" என்று சொல்லி விட்டு தரையைக் கொத்த ஆரம்பித்து விட்டது.
பிறகு அந்த எலி பன்றியிடம் போய் முறையிட்டது. பன்றி அதைக் காதிலேயே வாங்கவில்லை.
அந்த எலி அங்கிருந்த மாடு அருகில் போய் உதவி கேட்டது. ஆனால் அந்த மாடு, "போ போ. எனக்கு வேறு வேலை இருக்கிறது” என்று துரத்தி விட்டது.
எலியும் வேறு வழி தெரியாமல், தினமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தன் வாழ்க்கையைத் தொடர்ந்தது.
ஒரு நாள் நடு இரவில் எலிப்பொறி பட்டென்று மூடும் சத்தம் கேட்டது.
பண்ணைக்காரன் மனைவி இருட்டில் தடவிக் கொண்டே என்னவென்று பார்க்கப் போனாள். பொறியில் ஒரு பாம்பின் வால் மாட்டிக் கிடந்ததை அறியாமல் பொறியில் கை வைக்கப் போய், அந்தப் பாம்பு அவளைக் கடித்து விட்டது. நச்சின் வீரியம் தாங்காமல் அவள் படுத்த படுக்கையாகி விட்டாள்.
வைத்தியன் வந்து பார்த்தான். அவளுக்குக் கோழி சூப் வைத்துக் கொடுத்தால் ஒரு வேளை அவளுக்கு நச்சை எதிர்க்கும் சக்தி கூடலாம் என்று யோசனை சொன்னான்.
பண்ணைக்காரன் அன்றிரவே கோழியை அடித்துச் சூப் வைத்து மனைவிக்குக் கொடுத்தான்.
நாளுக்கு நாள் மனைவியின் உடல் நலம் குறைந்து கொண்டே போனது. உற்றார் உறவினர் எல்லாம் நலம் விசாரிக்க வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சாப்பிடக் கொடுக்க ஏதும் இல்லை என்று ஒரு நாள் பன்றியைக் கொன்று, அதன் இறைச்சியை வந்தவர்களுக்குச் சமைத்துப் போட்டான் அந்தப் பண்ணைக்காரன்.
நோய்க் கொடுமை தாங்க முடியாமல் ஒரு நாள் அவன் மனைவி இறந்தே போனாள். அவளுடைய இறுதிச் சடங்கிற்காக உறவினர்களும், நண்பர்களும் திரண்டு வந்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடக் காசும், தானியமும் அவனிடம் இல்லை. வேறு வழியில்லாமல் பண்ணைக்காரன் அந்த மாட்டையும் கொன்று விருந்து படைக்க வேண்டியதாயிற்று.
“உடன் இருப்பவர்களுக்கு ஆபத்து என்றால், அதை அசட்டையாகப் புறம் தள்ளி விடக்கூடாது. உனக்கான ஆபத்தும் அதில் ஒளிந்திருக்கக் கூடும்” என்பதைத்தான் இக்கதை நமக்கு உணர்த்துகிறது.