குருடன் ஒருவன் புத்தரிடம் கொண்டுவரப்பட்டான். அவன் ஒரு தத்துவவாதியாக தர்க்க சாஸ்திரியாக, மிகவும் வாதாடுபவனாக இருந்தான்.அவன் கிராமத்தாரிடம், "வெளிச்சம் என்பதே கிடையாது. நான் குருடனாக இருப்பதைப் போலவே நீங்கள் எல்லோரும் குருடர்கள். நான் அதை அறிந்து கொண்டேன், நீங்கள் அதை அறியவில்லை. அதுதான் வித்தியாசம்" என்று கூறி வாதிட்டான்.
இதை அவன் கண்கள் உள்ள கிராம மக்களிடம் கூறிக் கொண்டிருந்தான். அந்தக் கிராமத்து மக்களே ஒன்றும் பேச முடியாத அளவிற்கு அவன் வாதாடுவதில் வல்லவனாக இருந்தான். அவனை என்ன செய்வது என்று தெரியாமல் கிராமத்தினர் தவித்தனர்.
அவன் அவர்களிடம், "நீங்கள் கூறும் வெளிச்சத்தைக் கொண்டு வாருங்கள். நான் அதை ருசித்துப் பார்க்கிறேன். இல்லை, நுகர்ந்து பார்க்கிறேன். இல்லை, தொட்டுப் பார்க்கிறேன். அதன் பின்தான் நான் நம்ப முடியும்" என்று கூறினான்.
வெளிச்சத்தைத் தொட முடியாது; ருசிக்கமுடியாது; நுகரவும் முடியாது; கேட்கவும் முடியாது. ஆனால் இந்த் குருட்டு மனிதனுக்கு உள்ளவையோ இந்த நான்கு புலன்களும்தான். ஆகவே, அவன் வெற்றியடைந்து விட்டதாகச் சிரிப்பான், "பாருங்கள், ஒளி என்று ஒன்று கிடையாது. உண்டு எனில் எனக்கு நிரூபித்துக் காட்டுங்கள்" என்று கூறுவான்.
ஒரு முறை புத்தர் அந்தக் கிராமத்துக்கு வந்தபோது அங்குள்ளவர்கள் அவனை அவரிடம் அழைத்து வந்தார்கள். அவனது வரலாறு முழுவதையும் புத்தர் கேட்டார். அதன் பின் அவர், "இவனுக்கு நான் தேவை இல்லை. நானும் குருட்டு மக்களுக்குத்தான் மருத்துவம் செய்கிறேன். ஆனால் அவர்கள் வேறுவிதமான குருடர்கள். ஆன்மீகத்தில் குருடான மக்கள். நான் அவர்களைக் குணப்படுத்துகிறேன்; சுகப்படுத்துகிறேன், ஆனால் இது உடல் சார்ந்த குருடு. ஆகவே இவனை எனது மருத்துவர் ஜீவகரிடம் அழைத்து செல்லுங்கள்" என்று கூறினார்.
புத்தருடைய உடல் நலத்தைக் கவனிக்கும் பொருட்டு ஒரு அரசன் மிகப்பெரிய மருத்துவரான ஜீவகரை நியமித்திருந்தான்.
புத்தரின் சீடர்களும் அவனை ஜீவகரிடம் அழைத்துச் சென்றனர்.
ஜீவகரும் அந்த மனிதனைக் குணப்படுத்தினார். ஆறு மாதங்களுக்குள் அந்த மனிதன் பார்வை பெற்றான்.
பார்வை பெற்ற அவன் புத்தருக்கு அநேக மலர்களையும் பழங்களையும் அன்பளிப்பதற்காக எடுத்துக் கொண்டு ஆடியும் பாடியும் வந்து புத்தரின் கால்களில் விழுந்தான்.
"நீங்கள் மட்டும் இல்லை எனில் நான் என் வாழ்நாள் முழுவதும் வெளிச்சத்தைப் பற்றி விவாதம் செய்தே கழித்திருப்பேன். ஆனால் வெளிச்சம் உள்ளது. இப்போது நான் அறிகிறேன்" என்று கூறினான்.
புத்தர், "நீ அதை நிரூபிக்க முடியுமா? வெளிச்சம் எங்கே உள்ளது? நான் அதை ருசிக்க வேண்டும்" என்று கேட்டார்.
உடனே அந்த முன்னாள் குருடன், "அது முடியாத காரியம். அதைப் பார்க்க மட்டும்தான் முடியும் என்பதை இப்போதுதான் நான் அறிகிறேன். அதை அடைவதற்கு வேறு வழி இல்லை. என்னை மன்னித்து விடுங்கள். அதற்காக நான் வருந்துகிறேன். நான் குருடனாக இருந்தேன். முழுக் குருடனாக இருந்தேன். என்னுடைய குருட்டுத் தனத்தால் எனக்குத் தெரியாத விஷயங்களை நான் பேசி வந்தேன். வாழ்க்கையில் மிகவும் அழகான அனுபவமாக இருக்கின்ற ஒன்றிற்கு எதிராக நான் விவாதம் செய்து வந்தேன். நீங்கள் மட்டும் இல்லாதிருந்தால் நான் என் வாழ்நாள் முழுவதும் எது ஒன்று உள்ளதோ அதைப் பற்றி விவாதித்து, விவாதித்து, ஒரு குருடனாகவே இருந்திருப்பேன். ஆனால் நீங்கள் மிகவும் நல்லதைச் செய்தீர்கள். வெளிச்சத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நான் விவாதத்திற்குத் தயாராக வந்திருந்தேன். உங்களோடு வாதம் செய்ய முழுமையாக தயார் செய்து வந்திருந்தேன். நீங்கள் கூட அந்த நிலையில் எனக்கு அதை நிரூபிக்க முடியாது என்பதை நான் அறிகிறேன். ஆனால் உங்களது தீர்க்கதரிசனம் மிகவும் ஆழமானது. எனக்கு எந்தவித நிரூபணங்களும் தேவை இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். எனக்கு மருந்துதான் தேவைப்பட்டது. தத்துவ விளக்கம் தேவைப்படவில்லை, மருத்துவர்தான் தேவைப்பட்டார். நீங்கள் என்னை சரியான மனிதரிடம்தான் போகச் சொன்னீர்கள். நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று கூறினான்.
அந்த மனிதன் அதன் பிறகு ஒருபோதும் புத்தரை விட்டு விலகவில்லை.
"நீங்கள் எனது உடல் சார்ந்த கண்களுக்கு என்ன செய்தீர்களோ, அதையே என் ஆன்மாவின் கண்களுக்கும், செய்யுங்கள்" என்று அவன் கூறினான்.
அதன் பிறகு அவனும் புத்தரின் சீடர்களில் ஒருவனாக, துறவியாக ஆனான்.