அரச சபைக்கு தத்துவ ஞானி ஒருவர் வந்தார்.
தத்துவம் என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தி விட்டு இறுதியில்," நாம் கண்ணால் காண்பது, நாவினால் சுவைப்பது, மூக்கினால் நுகர்வது எல்லாமே நாம் அனுபவிப்பதாகத் தோன்றுமே தவிர, செய்யும் ஒவ்வொரு செயலும் பிரம்மையே தவிர, உண்மையில் நாம் அப்படிச் செய்வதில்லை'' என்று கூறி தத்துவ ஞானி என்பதற்கு ஏற்பக் குழப்பமாகக் கூறி முடித்தார். அதனை சபையோர் ஏற்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
பொறுமையோடு இதைக் கவனித்துக் கொண்டிருந்த தெனாலிராமன் எழுந்து, "ஐயா, தத்துவ ஞானியே நாம் சாப்பிடுவதும் கூட வெறும் பிரம்மைதானா? நாம் சாப்பிடுவதற்கும், சாப்பிடுவதாக நினைப்பதற்கும் வேறுபாடு இல்லையா?'' என்று கேட்டார்.
“இல்லை” என்று ஆணித்தரமாகக் கூறினார் தத்துவ ஞானி.
"இன்று மன்னர் வழங்கும் அறுசுவை விருந்தில் நாம் அனைவரும் கலந்து மகிழ்ச்சியோடு சாப்பிடலாம். அப்பொழுது இந்தத் தத்துவ நிபுணர் மட்டும் சாப்பிடாமல், சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளட்டும்'' என்று கூறினார் தெனாலிராமன்.
இதைக் கேட்ட தத்துவ ஞானி தலை குனிந்தார்.