ஒரு இளைஞன் நதிக்கரை ஒன்றில் நின்று, அதை எப்படிக் கடப்பதென ஆலோசித்துக் கொண்டிருந்தான். அப்போது, புத்த மத பிட்சு ஒருவர் அங்கே வந்தார்.
அவரிடம், “பிட்சுவே, இந்த நதியைக் கடக்க வேண்டும். வழி சொல்லுங்களேன்” என்றான்.
கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் நீந்து. எத்தகைய காட்டாற்று வெள்ளத்தையும், அதில் வரும் சுழல்களையும் கடக்க அவர் அருள் செய்வார், என்றார் அந்த பிட்சு.
“எங்கே, நீங்கள் கடந்து காட்டுங்களேன்” என்றான் இளைஞன்.
பிட்சு சற்றும் யோசிக்காமல், புத்தம் சரணம் கச்சாமி என்று வணங்கியபடியே தண்ணீரில் குதித்தார். எப்படியோ, நீந்தி அக்கரை சேர்ந்து விட்டார்.
இளைஞனும், விநாயகப்பெருமானே! தடைகளையெல்லாம் அகற்றி என்னைக் காப்பாற்று! என்றபடியே தண்ணீரில் குதித்தான். சிறிது தூரம் நீச்சலடித்துச் சென்றிருப்பான். சுழல் ஒன்று அழுத்தியது. ஐயையோ! இதிலிருந்து தப்பவேண்டுமானால், விநாயகரை விட, அவரைப் பெற்ற சிவனை நம்பாலாமோ என சிவாயநம என ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொன்னான். இன்னும் கொஞ்ச தூரம் கடக்க, கடும் இழுப்பாய்
இருக்கிறதே, இதிலிருந்து தப்ப அவர் தம்பி முருகனை நம்பினால், வேலை வீசி எறிந்து இதைக் கட்டுப்படுத்துவாரோ... என்று ஒவ்வொருவராய் நினைத்தபடி பாதி தூரம் கடந்தான்.
இன்னும் சற்று நேரத்தில் வெள்ளத்தின் வேகம் அதிகமாக, வேறெந்த சுவாமியை வணங்குவது என யோசிப்பதற்குள் வெள்ளம் அவனை அடித்துச் சென்று பாறையில் மோதியது. அவன் ரத்தம் வழிய அமர்ந்திருந்தான்.
அப்போது ஒரு துறவி, அவ்வழியே நீந்தி வந்தார். பாறையில் ஏறி அவன் நிலையைக் கேட்டார்.
“அப்பா! தெய்வம் ஒன்றுதான். நாம் தான் பல உருவங்கள் கொடுத்துப் பிரித்து வைத்திருக்கிறோம். ஒன்று காப்பாற்றும், ஒன்று கை விடும் என்றெல்லாம் இல்லை. நீ எந்த வடிவை நம்புகிறாயோ, அதையே கடைசி வரை நம்பு. காப்பாற்றப்படுவாய்” என அறிவுரை கூறி, அவனைத் தன்னோடு அழைத்துச் சென்றார்.