ஏழை பக்தன் ஒருவன் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் திருப்பதி சென்று வர வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்காகத் தனது வருவாயில் மிகச்சிறிய பகுதியைச் சேமித்து வைத்தான். ஓரளவுக்குப் பணம் சேர்ந்ததும் திருப்பதி சென்றான்.
அவன் கையில் குறைந்த அளவே பணம் இருந்ததால், பேருந்தில் மலைக்குச் செல்ல இயலாது, நடந்தே மலை மீதிருந்த கோவிலைச் சென்றடைந்தான். அவன் பசியினால் மிகுந்த களைப்புடன் இருந்தான். இருந்தாலும், கடவுளைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் தர்ம தரிசனத்திற்கான வரிசையில் காத்து நின்றான்.
வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அதே சமயம் பணம் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும், தனி வழியில் விரைவாகச் சென்று ஆண்டவனை மகிழ்ச்சியுடன் தரிசித்துக் கொண்டிருந்தனர். தான் நின்று கொண்டிருந்த நீண்ட வரிசையைப் பார்த்து எப்போது ஆண்டவனை தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமோ என்ற கவலையுடன் இருந்தான். நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது.
அவனை அறியாமல் மிகுந்த களைப்பினால் வரிசையிலேயே படுத்து தூங்கி விட்டான். அப்போது அவன் கனவில் கடவுள் வந்தார்.அவரைப் பார்த்ததும் பக்தனுக்கு கோபம் வந்து விட்டது.
அவன், “கடவுளே! எத்தனை நாளாகச் சிரமப்பட்டு உன்னைத் தரிசிக்க வந்திருக்கிறேன். இங்கு வந்தால் உன்னைத் தரிசிக்க எவ்வளவு சிரமங்கள்? என்ன இருந்தாலும் நீயும் பணக்காரர்களைத்தானே ஆதரிக்கிறாய். அதோ பார், அவர்கள் எல்லாம் எவ்வளவு விரைவில் உன்னை மகிழ்ச்சியுடன் வணங்கி செல்கிறார்கள்? பசியுடன் காத்திருக்கும் என் நிலையைப் பார்” என்றான்.
கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னார், “அடே, பைத்தியக்காரா, அவர்கள் எல்லாம் கல்லைப் பார்த்து வணங்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இதோ, நான் உன்னுடன் தானே பேசிக் கொண்டிருக்கிறேன்”