ஒரு பணக்காரர், தன் வீட்டிற்கு அருகில் இருந்த தனக்குச் சொந்தமான காலி மனையில், “இந்த நிலம், வாழ்வில் முழுமையான திருப்தி அடைந்தவர்களுக்குக் கொடுக்கப்படும்” என்று எழுதி வைத்தார்.
அந்தப் பக்கம் வந்த ஒருவர் அவரை அணுகி, “அய்யா, என்னிடம் எல்லாச் செல்வங்களும் தேவைக்கு இருக்கின்றன. அதனால் நீங்கள் சொன்ன தகுதி எனக்கு இருக்கிறது. எனவே இந்த நிலத்தை எனக்கே தாருங்கள்” என்றார்.
உடனே செல்வந்தர் அவரைப் பார்த்து, “உண்மையிலேயே நீங்கள் வாழ்வில் திருப்தியுடன் இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
வந்தவர், “உண்மையிலேயே நான் திருப்தியுடன் இருக்கிறேன். எனக்குத் தேவையானது அனைத்தும் இருப்பதால், எனக்கு வாழ்வில் முழு திருப்தியே...” என்றார்.
அந்தச் செல்வந்தர், “ஐயா, நீங்கள் உண்மையிலேயே முழு திருப்தியுடன் இருந்தால் இந்தக் காலி மனையை அடைய ஏன் ஆசைப்படுகிறீர்கள்?” என்று கேட்டார்.
வந்தவர் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து அங்கிருந்து சென்றார்.