ரஷ்யாவில் ஒரு யூத மத குரு வசித்து வந்தார். இருபது வருடங்களாக அவர் தினமும் காலை குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சதுக்கம் வழியாக யூதத் திருக் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதைத் தினமும், யூதர்களை வெறுத்து வந்த காவலன் ஒருவன் கவனித்து வந்தான்.
ஒரு நாள் அவன் அந்த மத குருவை வழி மறித்து, “எங்கே செல்கிறாய்?” என்று அதிகாரமாகக் கேட்டான்.
அதற்கு அவர், “எனக்குத் தெரியாது” என்று பதில் சொன்னார்.
உடனே காவலன் கோபமுடன், “நீ தினமும் யூதர் கோவிலுக்கு இவ்வழியே செல்வதை நான் கவனித்து வருகிறேன். ஆனால் இப்போது எங்கே செல்கிறாய் என்று கேட்டால் தெரியாது என்று சொல்கிறாய். உனக்கு நான் ஒரு பாடம் கற்பிக்கிறேன்” என்றபடி அவன் அவரை இழுத்துக் கொண்டு போய் சிறையில் தள்ளினான்.
யூத மதகுரு அப்போது அவனைப் பார்த்து, “நான் திருக்கோவிலுக்கு செல்லத்தான் வந்தேன். ஆனால் ஆண்டவனின் திருஉள்ளம் எப்படி என்று எனக்குத் தெரியாது, அதனால்தான் எனக்குத் தெரியாது என்று சொன்னேன். இப்படி சிறைக்கு வருவேன் என்று எனக்குத் தெரியாது. அதனால் நான் எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரியாது என்று சொன்னதன் பொருள் இப்போது புரியும் என்று நினைக்கிறேன்” என்றார்.
அவன் அது புரியாமல் அவரைப் பார்த்தான்.