ராமன் பூட்டு சாவிகள் விற்பனை செய்பவன். சாவிகள் எதுவும் தொலைந்து போய்விட்டால் அவன் மாற்றுச் சாவி செய்து தரும் சேவையையும் செய்து வந்தான். ஆனால், இந்த தொழிலில் வரும் இலாபத்தில் அவனுக்கு திருப்தி இல்லை. இன்னும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும், நிறைய பணம் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தான்.
பிரபலத் திருடனான காளிமுத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வங்கி ஒன்றில் பெருந்தொகையினைக் கொள்ளையடித்துத் தப்பினான். ஆனால், கடந்த ஆண்டு அந்தக் கொள்ளைக்காகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அவன் தான் வங்கியில் கொள்ளையடித்த பணத்தை உல்லாசமாகச் செலவிட்டு, காலி செய்து விட்டதாகச் சொல்லி நீதிமன்றத்தை நம்ப வைத்தான். நீதிமன்றம் அவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. அவனும் ஒரு வருடமாகச் சிறையிலிருந்தான்.
ஆனால், அவன் வங்கியில் கொள்ளையடித்த பெரும் பணத்தை அவனுக்கு நம்பிக்கையானவர்களிடம் கொடுத்து வைத்திருந்தான். ஒருநாள், அவனைப் பார்க்கச் சிறைக்கு வந்திருந்த அவனது உறவினர் மூலம் தான் பணம் கொடுத்து வைத்த நபர்கள், அந்தப் பணத்தை சுருட்டிக் கொண்டு வேறு ஊருக்கு போகப் போகிறார்கள் என்பதை அறிந்து, சிறையிலிருந்து தப்பத் திட்டமிட்டான்.
அவனை பார்க்க வந்த அதே உறவினரைத் திரும்ப வரவழைத்து, நீ உடல்நிலை சரியில்லாதது போல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டு என்னைப் பார்க்க வேண்டும் என்று சிறைக்கு தகவல் அனுப்பு... நான் உன்னைப் பார்க்க வரும் போது தப்பிவிடுகிறேன் என்று தனது திட்டத்தை சொன்னான்.
அதே போல் அவனும் செய்ய... காளிமுத்து நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்றான்.
அவனைக் கைவிலங்கிட்டுக் காவலர்கள் அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்குப் போகும் வழியில் காளிமுத்து காவலர்களை ஏமாற்றித் தப்பி விட்டான். காவலர்கள் அவனைத் துரத்திக் கொண்டு சென்றனர். அவனுக்குக் கைவிலங்கோடு ஓடுவது மிகக் கடினமாக இருந்தது. இருந்தாலும், அவன் தனது வேகத்தைக் கூட்டி அவர்கள் கண்ணில் படாமல் மறைந்தான்.
விரட்டி வந்த காவலர்கள் அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினர். காவல்துறை அவனைக் கைது செய்வதற்காக பல இடங்களில் குழுக்களாகத் தேடிக் கொண்டிருந்தனர். தொலைக்காட்சியில் அவனுடைய படத்துடன், அவன் தப்பிய செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
இதை பூட்டுக் கடையில் அமர்ந்திருந்த ராமனும் பார்த்தான்.
இரவு 9 மணிக்கு ராமன் கடையை மூடப்போகும் போது, சிறையிலிருந்து தப்பிய காளிமுத்து அந்தக் கடைக்குள் புகுந்து கதவை மூடினான்.
இதைக் கண்ட ராமன், தனது செல்போனை எடுத்துக் காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்ல முயன்றான்.
அவனுடைய செல்போனைப் பிடுங்கிய காளிமுத்து, “என்னைக் காட்டிக் கொடுப்பதால், உனக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது. என்னுடைய இந்த கைவிலங்கைக் கழற்ற உதவி செய்தால் உனக்கு லட்சம் ரூபாய் தருகிறேன்” என்றான்.
லட்சம் ரூபாய் பணம் என்றவுடன் ஆசைப்பட்ட ராமன், அவனுடைய கையில் மாட்டப்பட்டிருந்த கைவிலங்கை மாற்றுச் சாவி தயாரித்துக் கழற்றி விட்டான்.
கைவிலங்கு கழற்றப்பட்டவுடன், அங்கிருந்து காளிமுத்து கிளம்ப முற்பட்டான்.
உடனே ராமன் அவனிடம், “என்ன நண்பா, நான் உன் கைவிலங்கைக் கழற்றி விட்டிருக்கிறேன். எனக்குத் தருவதாகச் சொன்ன பணத்தை எங்கு வந்து வாங்குவது? எப்படி வாங்குவது? என்று சொல்லாமல் கிளம்புகிறீர்களே...” என்றான்.
அதைக் கேட்ட காளிமுத்து, “என்னது, பணமா? ஒரு பைசா கூடத் தரமுடியாது. நான் உன்னைக் காவலர்களிடம், என் கைவிலங்கைக் கழற்றி விட்டது நீதான் என்று சொல்லி உன்னை மாட்டி விடாமல் இருக்க நீதான் எனக்குப் பணம் தர வேண்டும்” என்றான்.
அதைக் கேட்டு அதிர்ந்து போன ராமன், “நான் செய்த உதவியை மறந்து இப்படிப் பேசுகிறீர்களே? இது நியாயமா?” என்று கேட்டான்.
காளிமுத்து, “நீ என் கைவிலங்கைக் கழற்றி விட்டதால்தான் நான் இங்கிருந்து சும்மா செல்கிறேன். ஏற்கனவே வங்கியில் கொள்ளையடித்த எனக்கு, இந்தக் கடையிலிருக்கும் பொருளைக் கொள்ளையடித்துச் செல்ல முடியாதா? உனக்கு நான் இந்தப் பேருதவியைச் செய்ததற்கு நீ தான் எனக்கு பணம் தர வேண்டும்” என்றபடி அங்கிருந்து வெளியேறினான்.
ராமன் கெட்டவனுக்கு எதைச் செய்தாலும் அதனால் எந்தப் பயனுமிருக்காது என்பதை உணர்ந்து கொண்டான்.