கோபம் கொள்ளலாமா?
விலங்குகளிடம் பிரியமுள்ள ஒருவன் ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்குப் போனான். அவன் அந்தக் காட்டிலிருந்து அழகிய புள்ளிமான் ஒன்றைப் பிடித்து வந்தான்.
மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக அதைக் கொல்லவில்லை. அதைத் தனது வீட்டிலேயே வைத்து வளர்த்து வந்தான். ஒருநாள் அந்த மான் காணாமல் போய்விட்டது.
நம் மானை யார் பிடித்துப் போயிருப்பார்கள்? அவன் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்துப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோபமாக வந்தது.
உடனே அவன் கடவுளை வேண்டினான். கடவுளே என் கவலையைத் தீர்க்க என் முன்பாக வர மாட்டாயா? என்று மனதார வேண்டினான்.
அவன் வேண்டுதலில் மனமிரங்கிய கடவுள் அவன் முன்பு வந்தார்.
கடவுளைப் பார்த்து மகிழ்ந்த அவன், “கடவுளே, நான் ஆசையாய் வளர்த்த மானைக் காணவில்லை, அந்த மானைத் திருடியவன் யாராக இருந்தாலும், என் முன்னே கொண்டு வந்து நிறுத்து” என்று தன்னுடைய கோபத்துடன் கேட்டான்.
கடவுள், “பக்தனே, காணாமல் போன உன் மானை நான் திருப்பித் தருகிறேன். அதை விடுத்து, உன் மான் காணாமல் போனதற்குக் காரணமானவனை உன் முன் நிறுத்தச் சொல்லிக் கேட்காதே, அது வேண்டாம்” என்றார்.
கடவுள் சொன்னதை அவன் காதிலேயே வாங்காமல், “என் மான் காணாமல் போனதற்குக் காரணமானவனைப் பழி வாங்க வேண்டும். அது யாராக இருந்தாலும் என் கண் முன்னே நிறுத்துங்கள்” என்று பிடிவாதமாகக் கேட்டான்.
“சரி... உன் விருப்பப்படி நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால், நீ என் மீது வருத்தப்படக் கூடாது” என்றார் கடவுள்.
“எனக்கு எந்த வருத்தமும் வராது” என்றான் அவன்.
“சரி நீ கேட்ட வரத்தைத் தந்தேன்” என்ற கடவுள் அங்கிருந்து மறைந்து விட்டார்.
தற்போது அவன் முன்பாக ஒரு சிங்கம் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவனுக்கு பழிவாங்கும் எண்ணம் போய்விட்டது. பயம் தொற்றிக் கொண்டு விட்டது. அவனுக்குக் கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓடத் தொடங்கினான்.
“கடவுளே என்னை காப்பாற்று...” என்று அவன் கத்திக் கொண்டிருந்தான். அதற்குள் சிங்கம் அவனைக் கொன்று விட்டது.
கோபம் அழிவையே தரும்..
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.